Thursday, June 20, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J K SIVAN 
பகவத்  கீதை 18

                                               18    நின்னை சரணடைந்தேன்

 இதுவரை  பகவத்  கீதை 17 அத்தியாயங்களையும் ஒவ்வொரு கட்டுரையாக  பார்த்தோம்.  இது கடைசி
அத்யாயம்.  
                        
சன்யாசியை  தியாகி என்றும் சொல்லலாம். துறந்தவன் துறவி, சந்நியாசி, அது போல் தியாகம் செய்பவன் தியாகி. இரண்டும் ஒன்றுதானே. துறந்தால் என்ன தியாகம் செய்தால் என்ன? கொஞ்சம் வித்யாசம்.  பற்றுகளை அறவே  விட்டுவிட்டால் அவன்  சந்நியாசி. நித்ய நைமித்திக கர்ம பலனை துறப்பவன் தியாகி.                

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் அந்த ஈஸ்வரன். நாமே எல்லாம் செய்கிறோம் என நினைப்பவன் மூடன்.

  நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல்  திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் சஞ்சயன் '' மஹாராஜா,  கண்ணனின் கீதோபதேசம் அர்ஜுனனுக்கு தெளிவைத் தந்தது. அர்ஜுனன் இப்போது போர் புரியத் தயாராகிறான்'' என்று கூறினான்.

''கிருஷ்ணா, எனக்கு சன்யாசம் தியாகம் இரண்டின் இயல்பைக்  கூறு'' என்று அர்ஜுனன் கேட்க ஸ்ரீ கிருஷ்ணன் விளக்குவதை தான் இந்த கீதோபதேச கடைசி அத்யாயமான ''மோக்ஷ சன்யாச யோக''த்தில் பார்க்கப் போகிறோம்.
''நீ கேட்டால் நான் சொல்லாமல் இருப்பேனா அர்ஜுனா, சொல்கிறேன் கேள்'':

எந்த கருமமாயிருந்தாலும் பயனைத் துறத்தல் இன்றியமையாதது என்று சொன்னது                           புரிந்ததா? அதாவது செய்யவேண்டியவதை அதனால் வரும் பயன் பலன் எதுவும்  எதிர்பார்க்காமல் செய்தல். ரெண்டாவது ராஜச, தமோ கர்மங்களின் பயன் வேண்டத்தகாதது அவற்றை துறத்தல் எளிது, அவை தாமே விலகுபவை. இவ்வாறு பலனைத் துறக்கும் தியாகம் செய்தாலும் நான் தியாகம் செய்தேன் என்ற உணர்வு, கர்வம்   துளியும் இல்லாமல் அதை  துறப்பது.
காரியங்களை குறைத்துக் கொள்வதால் ஆன்மா குறுகுகிறது. ஆன்மா  நாம்  செய்யும் கர்மங்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறதே, கர்மா குறுகும்போது அதுவும் குறுகுகிறது. தியாகம் விவேகத்தோடு பொருந்தி இருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு சிறிய தியாகம் செய்தாலும் பெரிய போகம் ஒன்று பலனாக வந்து சேர்கிறது. அதை உணர்ந்தால், விரும்பினால்,ஏற்றால் தியாகம் பொய்யாகிவிடுமே. சித்த சுத்தி வளர வளர செய்யும் காரியத்தின் தீவிரம் குறையும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

ஒரு கூட்டத்தில் சில பேர் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். போலீஸ்காரன் ஒருவன்                            வருகிறான். உரத்த குரலில்  கத்தியோ, விசில் ஊதியோ ''சத்தம் போடாதீர்கள் '' என்று சொல்கிறான். அவன் கஷ்டப்பட்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது. இது தீவிர கர்மம்.

இதே போல்  ஒரு  சந்தர்ப்பத்தில் ஒரு  தனி மனிதன் வருகிறான். சத்தம் போடும் கூட்டத்தைப் பார்த்து தனது கைகளை ஆட்டி அமைதி என்று சைகை மட்டுமே   செய்கிறான். கூட்டம் அமைதியாகிறது. இது கர்மம் சூக்ஷ்மமாவதை காட்டுகிறது.
இதே போல் சந்தர்ப்பத்தில் கூச்சல் இருக்கும்போது ஒருவர் வருகிறார். எல்லோரும் அவரைப் பார்த்த அடுத்த கணமே அமைதி அடைகிறார்கள். அவர் அமைதி ஏற்பட எந்த காரியமும் செய்யவில்லை. அவர் வரவே அதை தந்தது. இது காரியம் சூனியமாவதை காட்டுகிறது.

இந்த மூன்றும் எதை உணர்த்துகிறது? காரியம் தீவிரத்திலிருந்து அடக்கத்திற்கும், ரெண்டாவதில் அடக்கத்தில் இருந்து சூக்ஷ்மத்திற்கும்,   மூன்றாவது சம்பவத்தில் சூக்ஷ்மத்திலிருந்து சூனியத்திற்கு நகர்வதை.   

ஞானி கை கால் அசைக்காமல் ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் கர்மம் செய்பவனே. காரியம் சூட்சுமம் ஆக ஆக கர்மம் பெருகும். எனவே புறச்செயல்கள் இல்லை என்றால் கர்மம் விலகி விடும் என்பதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு பயனைப் பற்றிய எந்த எண்ணமும் இன்றி கர்மம் புரியவேண்டும்.

ஒவ்வொருவனுக்கும் ஒரு விசேஷ அம்சம் இருக்கிறது. நீ ''நீயாகவே'' இரு என்று அதனால் தான் சொல்கிறோம். செய்யும் கர்ம பயனைத் துறக்கத்  துறக்க  சித்தம் சுத்தி அடைந்து கொண்டே வரும். அதன் விளைவாக, செய்யும் கர்மம் தீவிரத்திலிருந்து சூக்ஷ்மமாகும், கடைசியில் சூக்ஷ்மத்திலிருந்து சூனிய நிலை அடையும். ஒவ்வொருவனிடம் அவனுடைய ஆஸ்ரம தர்மம் வேண்டுமானால் மாறலாம், சுதர்மம் எக்காலத்திலும் மாறாது. அதில் ஆசை கூடாது'' என்கிறான் கிருஷ்ணன்.

திருமூலர் சொல்வது காதில் விழுகிறதா?.
 ''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள், 
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள், 
ஆசை படப் பட ஆய் வரும் துன்பம், 
ஆசை விட விட ஆனந்தமாமே' ,

 ' இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்றார் ஆழ்வார். பக்தியில் முழுமனதோடு பகவானை சரணடைந்து செய்யும் செயல் அவனுக்காக, அவனுடையது. அதன் பலன் அவனுக்கே. எனவே தான் கிருஷ்ணன் சுருக்கமாக ''என்னை அடைந்தவனுக்கு மோக்ஷம் தருவேன் அது என் வேலை'' என்கிறார். '' நீ ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ''
இப்படி பதினெட்டு அத்தியாயங்களில் ஒவ்வொன்ரிலும் மனித வாழ்விற்கு தேவையான நீதி நெறிகளை, அழகாக புட்டு புட்டு வைத்து உதாரணங்களோடு எடுத்துச் சொன்னபின் கிருஷ்ணன் அற்புதமாக ஒரு .வார்த்தை சொல்கிறான்.

''இதோ  பார் அர்ஜுனா, ஏதோ நான் உனக்கு சொன்னேன். அதையெல்லாம் நீயும் கவனமாக கேட்டாய். சரியப்பா  நீ நன்றாக யோசி, யோசித்த பின் எது சரி என்று தோன்றுகிறதோ அவ்வாறே செய்'' என்கிறார். என்ன சாமர்த்தியம்? அடுத்த கணமே அவன் முடிவு என்னவாக இருக்கவேண்டும் என்பதை ''உன் விருப்பம் சாதனை அனைத்தையும் துறந்து என்னை சரணடைவாய்.'' என்று அவனுக்கு வழியும்  காட்டுகிறார்.

''அர்ஜுனா, என்னிலே உன் மனத்தை வை. பக்தியோடு வழிபடு, நீ என்னையே அடைவாய். உறுதியாக சொல்கிறேன். எனக்கு இனியவன் அல்லவா நீ. எல்லா தர்மங்களையும் கவலையே இல்லாமல் தள்ளு. என்னை சரண் அடை . உன் பாபங்கள் அனைத்திலிருந்தும் உன்னை மீட்பது என் வேலை.

இந்த பதினெட்டு அத்யாயங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனோடு சம்பாஷித்ததை ஓதுபவன், அதாவது கீதையை படிப்பவன், பாராயணம் செய்பவன், ஞான யாகம், வேள்வி நடத்தி என்னை ஆராதித்தவன் ஆகிறான். இது என் ஆணை. ஸ்ரத்தையோடு இதை கேட்டவனும் புண்யசாலி என்று அடித்து சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன்.

''என்ன அர்ஜுனா உன் மயக்கம் தீர்ந்ததா?
''கிருஷ்ணா, உன் அருளால் என் மயக்கம் தீர்ந்தது. நினைவு திரும்பியது சந்தேகம் எதுவும் இல்லை. நீ சொல்லியபடியே செய்வேன். '' என்கிறான் அர்ஜுனன்.

''திருதராஷ்டிரா, மேற்கண்ட வாசுதேவன்-அர்ஜுனன் சம்வாதம் கேட்டு நான் புளகாங்கிதம் அடைந்தேன்.            வியாசர் அருளால் யோகேஸ்வரனான கிருஷ்ணன் வாயால் இந்த உபதேசம் கேட்டேன். ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் வெளிப் படுத்திய 

அனைத்துமாய்
 நிறைந்த விஸ்வரூபத்தையும் தரிசித்து வியப்பும் களிப்பும் அடைந்தேன்''  என்று  சஞ்சயனும் மகிழ்கிறான்..

யோகேஸ்வரன் கிருஷ்ணனும், வில்லைத் தாங்கிய அர்ஜுனனும் நின்ற இடமெல்லாம் திருவும் விஜயமும் மேன்மையும் நிலையான நீதியும் சத்தியமும் நிலவும். இது உறுதி உறுதி உறுதி'' என்கிறான் சஞ்சயன்.

ஸ்ரீ கிருஷ்ணா, என்னே உன் கருணை. மகாபாரதக் கதையை சுருக்கமாக  குழந்தைகளுக்கு எழுத முயற்சித்த என்னை, பல ஆதாரங்களோடு உன் உபதேசமான கீதையை, படித்துப்  புரிந்து கொண்டு எடுத்து சொல்லவும் வைத்த நீ அர்ஜுனனுக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற நிரக்ஷரக் குக்ஷிகள் மேலும் கருணை கொண்டவன், எம்மைக்    காப்பவன் என்று நிரூபித்து விட்டாய். உன் திருவடிகளில் சரணடைகிறேன். நீ ஆட்டுவித்தால் ஆடாதார் யாரே  கண்ணா?

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...