Sunday, June 2, 2019

PESUM DEIVAM

பேசும் தெய்வம்     J K SIVAN 
   
                            '' ம்ருத்யு வரமாட்டான்   போ'' 
                                                                                                  ''
''ஆஹா  அற்புதம்  தாத்தா''  என்கிறார் பரமானந்தம்.
''சரி நான்  பெரியவா பத்தி தொடர்கிறேன்.
சதாசிவப் பிரும்மேந்திரர் கிட்டே  மஹா பெரியவாளுக்கு  அலாதி பக்தி மரியாதை  உண்டு. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும்,  அப்படியே  வெயிலில் பட்ட  வெண்ணையாக உருகிப் போய்விடுவா பெரியவா.

ஒரு சமயம்  சதாசிவ ப்ரம்மேந்திரா அதிஷ்டானத்தில்  ஜபம் நடந்தது.  பெரியவா கலந்துண்டதாலே  நல்ல கூட்டம். அதிஷ்டானத்துக்கு வந்திருந்த   ப்ரம்மேந்திராவின்  அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சுற்றி நின்று கொண்டார்கள்.

பெரியவாள், அதிஷ்டானத்துக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக்கூடாது என்பது,  ஸ்ரீமடத்து சம்பிரதாயம்.  மனித  எல்லைகளைக்  கடந்த தெய்வீகத்தில் கலந்து நிற்கும்  விசேஷமான அபூர்வ சம்பவம் அது.

இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.  சாதாரணமாக  நம்மால் நூறு வாட்ஸ் மின் விளக்கின்  ஒளியை  வேண்டுமானால் பார்க்க முடியும்.  லட்சம் வாட்ஸ் மின் ஒளியை, பல கோடி சூரிய பிரகாசத்தை  நமது கண்  தாங்குமா?   அதானால் தான் இந்த கட்டுப்பாடு.

அந்த  நேரம் பார்த்து அங்கே வேக  வேகமாக ஓடிவந்தார்  ஒரு பக்தர் – ரங்கசாமி.

“நான்  இப்போ  பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்” என்று, மனம் திறந்து  பெரியவா  இருந்த இடத்தின் அருகிலே  இருந்த தொண்டர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“சுவாமி,  கொஞ்சம் பொறுங்கோ.    பெரியவா, கதவை சார்த்திக்கொண்டு  ப்ரம்மேந்திரா அதிஷ்டானத்துக்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து மஹா பெரியவா  தானாகவே வெளியே வந்தவுடன்  முதல் ஆளாக நீங்கள் அவரை தரிசனம்  பண்ணிக்குங்கோ.”
வந்தவர், ரங்கசாமி, இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!.
மடத்துத் தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார்.
மடத்தில்  எப்போதுமே   தொண்டர்கள்  கொஞ்சம் அதிகமாகவே  சுதந்திரமாக  பேசுவார்கள்,  அதிகாரம். கட்டளை, கொஞ்சம்   தென்படும். இதை பெரிது படுத்தி  அடக்குவாரின்றி  கொஞ்சம் கணிசமாகவே அதிகமாக  தெரிந்தது அன்று.   தங்களுக்குள்  அவர்கள்   சுவாரசியமாக ஏதோ  பேசிக்  கொண்டிருந்த சமயம்,  இதை கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த ரங்கசாமி  கண் மூடி கண் திறக்கும் சமயத்தில்  குபீரென்று தாவி  மூடியிருந்த  அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்!

இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால் மடத்து  சிப்பந்திகள் எல்லோரும்  திடுக்கிட்டு நின்றார்கள்.
அந்த  நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது.

“நீ   எந்த ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமமும் பண்ணவேண்டாம். உங்க வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்  திரும்பிப் போ”
பெரியவாளின்  குரல்  ரங்கசாமிக்கு  கேட்டது.

அவ்வளவு தான்.   திருப்தியோடு  பக்தர்  ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் '  'ஏன் இப்படி செயதீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு  அவரை மொய்த்துக்கொண்டு விட்டார்கள். ரங்கசாமி கோபமே இல்லாமல்,   தான்  அப்படி  நடந்துகொண்டதற்கு ஒரு  சுவாரசியமான ஒரு கதையே சொன்னார்.
சுருக்கமாக அது  இது தான்: ரங்கசாமியின் ரொம்ப  நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் தாண்டினா தான்  பிழைப்பாரா மாட்டாரா என்று உறுதியாக சொல்ல முடியும்” என்று கை  விரித்து விட்டார்கள்.

ஜோசியர், “ ரங்கா,  உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணு '' என்று கட்டளையிட்டு விட்டார். அப்போ என் ஆப்த  நண்பர், இங்கே  என்னோடு  பெரியவாளை தரிசிக்க வருபவர்,  ''நீ  பேசாம  உடனே பெரியவா கிட்டே  போ. விஷயத்தை சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு வாயேன் '' என்று  ஆலோசனை சொன்னார்.

''பெரியவா எங்கே இருக்கா இப்போ''  என்று கேட்டபோது  அவர் பக்கத்திலே இருந்த ஒரு பாட்டி  “பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார்.     சதாசிவ ப்ரம்மேந்திரா  அதிஷ்டானத்துக்கு வந்திருக்கா.  அவர்  கிட்ட  போய் சொல்லி விடுங்கோ,அவர்  பார்த்துப்பார் ” என்று சொன்னதை  வேத வாக்காக  ஏற்றுக் கொண்டேன்.   அதனாலே தான் அங்கே  ஒரு  உயிர் ஆபத்தில் இருக்கே என்று அவசரப் பட்டேன்.

ரெங்கசாமியுடைய   பாக்யமோ, அதிர்ஷ்டமோ, பூர்வ  ஜென்ம புண்யமோ,   தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது!    ''உறவினர் உயிருக்கு எந்த  ஆபத்தும்  இப்போது  இல்லை''

ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி சொந்தக்காரன்  படுக்கையில்  எழுந்து உட்கார்ந்து  சிரித்துக் கொண்டிருந்தான்.  விட்டால்  மூன்று  வெங்காய  அடை  விழுங்குபவன் போல் பார்த்தான்.

“ இல்லையா பின்னே, இன்னும் ஒரு பல வருஷம் அந்த புண்யாத்மாவுக்கு பெரியவா கொடுத்த  காரண்டி இருக்கிறதே''

 எங்கோ படித்த  தகவல்:சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...