Tuesday, August 16, 2022

paruthiyur

 ரஸ ஆஸ்வாத தரங்கிணி  J  K  SIVAN 

                                                             
 ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் சப்தரிஷிகளில் ஒருவரான  பாரத்வாஜர் வம்சாவழிவந்தவர்  என்பதால்  பாரத்வாஜ கோத்ரம்.    வடமர்கள். ராமபக்த வம்சம்.  

என்னுடைய  தாத்தா  ஆத்ரேய கோத்ர ராம பக்த குடும்பம்.  தென்னிந்தியாவில்  சேர சோழ பாண்டியர் களுக்கு பிறகு வந்த  தஞ்சாவூரை ஆண்ட  மராத்திய  ராஜாக்கள், நாயக்க மன்னர்கள் பக்தியை, சாஸ்த்ர, சம்பிரதாயங்களை, சங்கீதத்தை போற்றி வளர்த்தார்கள் என்பதால் பல இடங்களிலிருந்து தமிழகத்துக்கு  சாஸ்திர , சங்கீத விற்பன்னர்கள் குடியேறினார்கள்.  இப்படி அவர்கள்  ''தஞ்சம்'' புகுந்ததால்,  அவை  ''தஞ்சாவூர்'',   ''வந்து வசி'' த்ததால்  ''வந்தவாசி',  கோவில்கள் செல்வம் நிறைந்த காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரங்களில்  அற்புத ஞானிகள், மஹான்கள் நமக்கு கிடைத்தனர்.  வடக்கே  காளிதாசன் போன்றோர்  கூட  காஞ்சி பற்றி அறிந்து ''...நகரேஷு காஞ்சி..''  என்று  போற்றும் பெருமை வந்தது. 

 நர்மதை பள்ளத்தாக்கிலிருந்து  தெற்கே வந்த  பாரத்வாஜ கோத்ர வடமர்கள்  வந்தவாசி, காஞ்சி, யிலிருந்து தஞ்சாவூர்  பக்கம் நகர்ந்தார்கள்.  கிருஷ்ண சாஸ்திரிகள் முன்னோர்கள் குடமுருட்டி கரையில், கோதண்ட ராமபுரம் என்ற  கிராமத்தில், (சேங்காலிபுரம் வழி) வாழ்ந்தார்கள். பருத்தியூரில் கோதண்டராமர் கோவில் சோழர்காலத்தில் இருந்ததால் கோதண்டராமபுரம் என்று பெயரோ? என்று சம்சயம்.

பல தலைமுறைகள் காலப்போக்கில்  விவரம் அறியப்படாமல் மறைந்துவிட்டன. அண்ணாவாள்  சிவபக்தர், அய்யாவாள் விஷ்ணு பக்தர் என்று அந்த குடும்பத்தில் இரு சகோதரர்களை தஞ்சாவூர் மஹாராஜா அழைத்து பரிசளித்தார். அவர்கள் தலைமையில் தான்  காஞ்சிபுரத்திலிருந்து காமாக்ஷி அம்மன்  ஜாக்கிரதையாக  திப்பு சுல்தான் ஆட்களிடமிருந்து  சேதப்படாமல்  தஞ்சாவூர் கொண்டுவரப்பட்டு பங்காரு காமாக்ஷி இன்றும் நமக்கு காட்சி தருகிறாள்.  ஏற்கனவே இது பற்றி ஒரு  கட்டுரையில் எழுதினாலும்  மீண்டும் விவரமாக ஒரு முறை எழுதுகிறேன்.அற்புதமான விஷயம்.   அடிக்கடி  எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.

பருத்தியூர் கோதண்டராமர்  தான்,  பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளின் மூச்சு. 1842ல்  காடகம்பாடியில் பிறந்தது முதல் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளிடமிருந்து அறிந்த ஒரே பாடம்  ஸ்ரீ ராம சரித்திரம். மணலில் கோவில் குளம்  கட்டி விளையாடும்  காலம்.   விக்கிரஹங்கள் என்று சின்ன சின்ன பொம்மைகளை சப்பரம் கட்டி  ஊர்வலம்  இழுத்து வருவது, பூஜை அபிஷேகம் அலங்காரம் பண்ணுவது போல் தான் விளையாட்டுகள் அப்போதெல்லாம். BARBY DOLL  பிறக்காத காலம்.  

நானே அப்படி தென்னங்குருத்துகளோடு, தென்னை குரும்பைகளோடு குச்சி வைத்துக்கொண்டு  வடபழனியில் விளையாடி இருக்கிறேனே. 

கிருஷ்ண  சாஸ்திரிகளுக்கு  ஏழு வயதிலே உபநயனம். பனையோலை  ஏட்டுச்சுவடியில்  எழுத்தாணியால்  துளை போட்டு  எழுதுவது   அதைப்  படிப்பது தான் பாடம். . குடும்பத்துக்கே  இஷ்ட தெய்வமான  ஸ்ரீ ராமனை நேரில் பார்க்க  இளம் வயது முதல் ஆசை. 

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசிக்க குடும்பம்  ஒரு முறை போனபோது  சிறுவன்  கிருஷ்ண சாஸ்திரிக்கு ரங்கநாதன் உருவம்  திருப்தி அளிக்கவில்லை.
''என்னடா  கிருஷ்ணா யோசிக்கிறாய்?  - அப்பா ராமேசேஷ சாஸ்திரி.
''ராமன் மாதிரி இல்லையே, நாம் வணங்கும் ராமனை நேரில் பார்க்க முடியுமா?''
''ஆஹா,  நிச்சயம், விடாமல் பிரார்த்தனை பண்ணினால் தோன்றுவான்''

ஸ்ரீரங்கம் கடைத்தெருவில் ராமசேஷன் நண்பர் அருணாசலம் செட்டியார் பார்த்துவிட்டு குசலம் விசாரிக்கும்போது  அவர் பலசரக்கு கடையில்  குடும்பம்  தேவையானவற்றை தேடுகிறது. 
 ''கிருஷ்ணா இங்கே வா  அழகான  ராமர்  பார் '' 
அண்ணா  வெங்கு எதையோ பார்த்துவிட்டு கூப்பிட்டான்.
அது  ராமர் சீதா  லக்ஷ்மண  ஆஞ்சநேய களிமண் பொம்மை செட்.''  
''அது வேணுமே''  
ஏக்கமாக  அதை பார்த்தான் கிருஷ்ணன். செட்டியார்  தனியாக செட்டிலிருந்து பிரித்து ராமரை மட்டும் தர தயாரில்லை. செட்டாக  பொம்மை  வாங்க  காசு அதிகம் தரவேண்டும்.   

அன்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அப்பா ராமசேஷ சாஸ்திரி மனதில் கிருஷ்ணன் கேட்டது வட்டமிட ஒரு கனவு.  ரங்கநாதர் தோன்றி ''ராம  சேஷா, நீங்கள் குடும்பமாகவே ராம பக்தர்கள். உன் பிள்ளை கிருஷ்ணனைப்  பற்றி கவலைப்  படாதே. உன் ஊருக்கு அருகே சேங்காலிபுரம் இருக்கிறதே அங்கே வைத்தியநாத தீக்ஷிதரிடம் அவனை அனுப்பு''  .  

ராமேசேஷனுக்கு  தீக்ஷிதரையோ அவர் இருக்கும் இடமோ தெரியாதே. துல்லியமாக ரங்கநாதன் தான்  சொல்கிறானே.
ஸ்ரீரங்கத்தை விட்டு  அவர்கள் ஊருக்கு  கிளம்பு முன் ஒரு அதிசயம்.  கடைக்கார செட்டியார்  ''சாஸ்திரி அய்யா  '' என்று கத்திக்கொண்டு வருகிறார். 
''என்ன செட்டியாரே ?''
''ஐயா,   உங்க பிள்ளைங்க ராமர் பொம்மை மட்டும்  கேட்டுது. எனக்கு தனியா செட்டு பிரிச்சு கொடுக்க முடியல.  மீதி செட் விக்காது.  அந்த பையன் கிருஷ்ணன் கண்ணுலே  ராமர் மேலே  காந்தம் மாதிரி பார்த்த  பார்வை  என் மனசை தொட்டிச்சு.  

''ரங்கநாதா இன்னிக்கு நல்லா வியாபாரம் நடந்தா, அந்த பையனுக்கு இந்த ராமர் பொம்மை  செட்டை  கொடுக்கணும்'' னு வேண்டிகிட்டேன்.  நம்ப மாட்டீங்க. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தவங்க நிறையபேரு  என் கடைக்கு  அதிசயமா கும்பலா வந்து  என்னன்னவோ சாமான்லாம் வாங்கி அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க. கடையே  காலியாயிடுச்சி ன்னா  எவ்வளவு வ்யாவாராம்னு  பாருங்க.  அதனாலே  இந்த ராமர்  செட் பொம்மைகளை  தனியா எடுத்து வச்சிட்டேன். அதை உங்க பையனுக்கு   தர தான் ஓடிவந்தேன். ''

அட்டை பெட்டி  கைமாறியது. ராமன் கிருஷ்ணனிடம் வந்தான்.  அதுவரை மணலில் ராமர் செய்து   விளையாடிய  கிருஷ்ணன், பின்னால்  பருத்தியூர்  பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளாக  ராமர் கோவில் கட்டினார்  இன்றும் அந்த ஆலயம் உள்ளது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...