Monday, August 29, 2022

BRINDHAVANUM NANDHAKUMARANUM

 பிரிந்தாவனமும்  நந்தகுமாரனும்  3.

நங்கநல்லூர் J K  SIVAN 

பகலும் இரவும் கொண்டாட்டம் 

தீபாவளி,  நவராத்ரி  பண்டிகைகள்  என்றால் குழந்தைகள் எவ்வளவு குதூகலமாக  ஓடி யாடி மகிழ்வார்கள்.  பண்டீரவனத்தில்  ஒவ்வொரு நாளும் நவராத்ரி தீபாவளி தான். அங்கே குழந்தைகளுக்கு பதிலாக  கோபியர்கள். வளர்ந்த குழந்தைகள்.  அவர்கள்  கோலாகலத்துக்கு காரணம்  கிருஷ்ணன்.  அடர்ந்த ஆல  மரத்தின்  கிளைகள்  குடை பிடித்த மாதிரி 
சூரியனை மறைக்க  வெயிலே தெரியாது. சில்லென்ற  காற்று  யமுனை நதியிலிருந்து  வரும்.   இப்போது மாதிரி அல்ல அப்போது. யமுனை வேண்டும்போதெல்லாம் தனது பாதையை மாற்றிக்கொள்வாள்.  மரத்தின் அருகே  சலசல வென்று ஓடினாள். நிறைய  வேறு தினுசு  மரங்கள் நறுமண மலர்கள் தருபவையம் அங்கிருந்தன.   குளிர்ந்த காற்றில்  அற்புத நறுமணம் கமழ்ந்து  கிறங்க வைக்கும். இதற்கு  பின்னணி சங்கீதம்  பறவைகளின் இன்னிசை குரல்கள். மயில்களின் நடனம்.
யமுனை நதிக்கரையில் எண்ணமுடியாத  இவ்வளவு  மரங்களை  யார்  எப்போது  நட்டது? ஓடிப் பிடிக்க இடம் விட்டு கிருஷ்ணனும்  நண்பர்களும்  கோபியரும் சுற்றிச்  சுற்றி வர சௌகரியமான இடம். பிருந்தாவனத்தில் இது வைகுண்டம்.  நந்தகுமாரனின் பிருந்தாவனம். எப்போது ராதா வருவாள், என்ன செய்வாள் என்று கிருஷ்ணனுக்கு தெரியாது. ஏன் என்றால் அது  ராதைக்கே தெரியாது.

வழக்கம்போலவே ஆநிரைகளுடன் கிளம்பிய கிருஷ்ணன் பசுக்களை யமுனையில் அதிக ஆழமில்லாத இடத்தில் அவற்றை குளிக்க வைத்தான். கன்றுக்  குட்டிகளுடன் விளையாடிக்கொண்டே, அவற்றை குளிப்பாட்ட சுகமாக  அரைத் தூக்கத்தில் அவை  அம்மா என்று குரல் கொடுக்கும்.

கிருஷ்ணனைச் சுற்றி கன்றுக்குட்டிகள் வெல்லத்தை ஈ மொய்ப்பது போல் வளைய வரும். . வாயில் பால் நுரை கலையாத அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குட்டிகள். அவன் அழகாக அவற்றை தேய்த்து குளிப்பாட்ட காத்திருந்தன. நான் முதலில் நீ முதலில் என்று அவற்றுக்குள் போட்டி வேறு.

தூரத்தில் இருந்தே அம்மா பசுக்களின் கண்கள் இந்த குட்டிகள் மேலே தான். இருந்தும் அதில் ஒரு நிறைவு.

''என்னைக்காட்டிலும் என் குழந்தையை இந்த கிருஷ்ணன் நன்றாகவே பாதுகாப்பவன் '' என்ற சந்தோஷம்.
ஒரு பசுவின் கண்ணில் இந்த உணர்ச்சியை கண்ட இன்னொரு பசு கண்ணாலேயே பதில் சொல்லியது.

''என்னடி லக்ஷ்மி இப்படி சொல்றே. உன்னைக்  காட்டிலும் ''பாதுகாப்பவன்'' என்கிறாயே. உன் குட்டியை கேள் என் குட்டியை போலவே அதுவும் பதில் சொல்லும் ''
''என்ன சொல்லும் ?''
''எனக்கு நீ அம்மா வேண்டாம். கிருஷ்ணன் தான் என் அம்மா '' என்று சொல்லும்.
'' ம்ம்.. ஒரு விதத்தில் அதுவும் நியாயம் தானே '' என்று முதல் பசு தலையாட்டும்.
''கலீர் கலீர்''  என்று கை வளைகள், கால் தண்டை,  சிலம்பு மட்டும் அல்ல, சிரிப்பும் அங்கே  ஒலிக்கும். ஒரே சந்தோஷ  மயமாக கோபியர்கள் கண்ணனை சூழ்ந்து கொண்டு பேசுவார்கள், ஆடுவார்கள்,பாடுவார்கள். வேடிக்கையாக இருக்கும் இதெல்லாம்  பார்க்க  அந்த  பசுக்களுக்கு.
இன்னும் இருக்கு நிறைய சொல்ல.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...