Friday, August 5, 2022

ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


எல்லாமே  ஒண்ணு தாண்டா.

சேஷாத்ரி ஸ்வாமிகள்  எவருடனும்  கிட்டே நெருங்கி பழகுபவர் இல்லை, கோபக்காரர், பைத்யம் என்று நிறைய பேர் சான்றிதழ்  வழங்கினால்  அவர்கள்  அவருடைய இரக்க,   அன்பான, தயா குணம் அறியாத வர்கள் என்று அர்த்தம்.    நிறைய  உதாரண விஷயங்கள்  இருந்தும்  அவற்றை எவரும் எழுதி வைக்கவில்லை.  எழுதினாலும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். 

திருவண்ணாமலையில்  ஒரு தடவை சடைச்சி வீட்டு திண்ணையில் ஸ்வாமிகள் உட்கார்ந்திருந்தபோது ஒரு பாம்பு ஓடிவந்தது. பலர் அதை அடிக்க முற்பட்டபோது பாய்ந்து சென்ற ஸ்வாமிகள் அதைப் பிடித்து எங்கோ ஒரு புதரில் விட்டுவிட்டார்.

இன்னொரு  நாள் காலை பேய்க் கோபுரத்தின் பக்கம் காலை ஏழு மணிக்கு ஒரு சுவர் மேல் ஏறி உட்கார்ந்தி ருந்த   சமயம்  திடீரென்று ஒரு பெரிய சர்ப்பம் அவர்  மேல் ஏறி அவர் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. ரொம்ப நீளமான  பெரிய  பாம்பு.  அது படம் எடுத்தது. காலை வெயில் அவர் முகத்தில் படாமல் குடை பிடித்தது போல் அது காட்சி யளித்தது.   இதைப் பார்த்த மாணிக்க சாமி என்ற தொண்டர் மற்றும் சிலர் பெரும் கூச்சலிட்டார்கள் . பாம்பு அவர்களைக்  கவனித்துவிட்டு மெதுவாக ஸ்வாமிகளின் கழுத்தை விட்டு கீழே இறங்கி ஓடி விட்டது. கம்பாலும் கல்லாலும் அதை அடித்துக் கொல்ல துரத்தினவர்களை  சேஷாத்ரி  ஸ்வாமிகள்  தடுத்தார்.

 ''சுப்ரமணியனை அடிக்காதேடா,  மஹா பாவம் உன்னை சேரும் '' என்று அவர்களை ஸ்வாமிகள்   விரட்டிவிட்டார்.

பால் மடம்  என்று ஒரு இடம்.  அங்கேயும் அடிக்கடி  ஸ்வாமிகளைக் காணலாம்.   வழக்கமாக  அங்கே சுற்றிக்கொண்டிருக்கும்  ஒரு பூனை ஒருநாள்  அங்கே ஒரு அணிலைப் பிடித்து விட்டது. கௌவிக் கொண்டே ஓடியதை பார்த்தவர்கள் அதை துரத்த பூனை பயந்துபோய் குற்றுயிராக அந்த அணிலை கீழே போட்டுவிட்டு ஓடியது. சில பையன்கள் அந்த அணிலை எடுத்து தண்ணீர் விட்டு உயிர் வாழ முயற்சி செய்யும்போது சில பையன்கள் பூனையை அடிக்க ஓடினார்கள். 

சேஷாத்ரி ஸ்வாமிகள் அந்தப்பக்கமாக அப்போது  வந்துவிட்டார். அவர்களை தடுத்து ''அடே   அடே பூனையை அடிக்காதே. இம்சிக்காதே'' என்று சொல்லி அவர்களை  விரட்டினார்.   கீழே விழுந்து கிடந்த  அணிலை எடுத்து தடவிக் கொடுத்து    ''மாணிக்கசாமி, இந்தா இது தப்பிச்சுடுத்து. போய் ஆயிரங்கால் மண்டபத்தில் விட்டுடு '' என்று அவர் கையில் அணிலைக் கொடுத்தார்.

அதே பால் மடத்தில் ஒரு நாள் ஸ்வாமிக்காக யாரோ வைத்திருந்த பாலை அந்த பூனை பாதிக்குமேல் குடித்துக் கொண்டிருந்தது. ஸ்வாமிகள் அதோடு சேர்ந்து மீதி பாதியை தானும் குடித்தார்.

' சாமி சாமி குடிக்காதீங்க.  அந்த பால் விஷம். பூனை குடித்ததை குடிக்காதீர்கள். வேறு புதுஸாக  பால் கொண்டு வருகிறோம்'' என்று சில பக்தர்கள் தடுத்தார்கள்.

''எல்லாம் ஒண்ணு தானே'' என்றார் மஹான். பூனை, மனிதன், நாய்,பாம்பு விஷம் அம்ருதம் எல்லாமே ஒரே பொருளின் வேறு வேறு பெயர்கள் என்ற அர்த்தத்தில் சொல்கிறார் ஸ்வாமிகள். அபேத குணம் கொண்ட வரல்லவா?

ஸ்வாமிக்கு போலீஸ்காரன், நாய், என்றால் பயம் என்று நிறைய பேர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கோபத்தை ராக்ஷஸன் என்று சொல்வாரே அதுபோல் துஷ்டர்கள் இம்சை செய்பவர்களை எல்லாம் ''நாய் கடிக்கும் கிட்டே போகாதே '' என்பார்.

ஒரு நாள் ஒரு போலீஸ் சிப்பாய் ஒரு பெரிய நாயை சங்கிலியில் கட்டி இழுத்துச் சென்று இருந்தான். அந்த நாய் ஸ்வாமிகளை பார்த்து தாவியது. சுவாமி பக் கத்தில் இருந்த அரளிச்செடி மீது நிலை தடுமாறி  சாய்ந்தார். எல்லோரும் சிப்பாயை கண்டித்தார்கள். சுவாமி '' நாய் கிட்டே போகாதே'' என்றார். அவர் யாரைச் சொன்னார்?

ஒரு நாள் எதோ ஒரு நாய் மண்டபத்தில் குட்டி போட்டுவிட்டு பக்கத்தில் உற்கார்ந்துகொண்டிருந்தது. ஸ்வாமிகள் நேராக அதன் அருகே சென்று கண் திறக்காத அதன் குட்டியை அதனிடமிருந்து எடுத்தார். அது பார்த்துக் கொண்டே இருந்ததே தவிர அவரைக்  கடிக்கவில்லை. வாலாட்டியது. சடைச்சி வீட்டு திண்ணையில்  ஸ்வாமிகள்  அந்த குட்டியோடு விளையாடுவதை தாய் நாய் வெகுநேரமாக பார்த்து  ரசித்துக் கொண்டே இருந்தது.

''ஐயோ   ஸ்வாமி,   இது பழக்கமில்லாத ஒரு தாய் நாய். கடித்து குதறிவிடும்'' என்று  சிலர்   கத்தினதை  அவர் லக்ஷியம் பண்ணவில்லை.   ஸ்வாமிகளுக்கு நாயிடம் பயம் என்று சொன்னவர்கள் ஆச்சரியப்பட அந்த குட்டி நாயுடன்  சிறிது நேரம்  விளையாடிவிட்டு மீண்டும்  அதை  தாய் நாயருகே சென்று விட்டுவிட்டு  தாய் நாயை தடவிக் கொடுத்தார்.

அன்ன சத்திரம் அருகே ஒருநாள் பின் புறம் நிறைய பேர் சாப்பிட்டுவிட்டு எச்சில் இலைகளை போட்டிருந் தார்கள். இலைகளில் இருந்த எச்சத்தை ஒரு நாய் ஒருபக்கமும் ஸ்வாமிகள் ஒரு பக்கமுமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

''சுவாமி, இது எச்சில். வேண்டாம்.  வாங்கோ இங்கே'' என்று  ஸ்வாமிகள் கையைப் பிடித்து இழுத்து ''உள்ளே வந்து நல்ல ஆகாரம் சாப்பிடுங்கள்'' என்று சிலர் கதறினார்கள். ''நல்லது என்ன கெட்டது என்ன'' என்றார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் அக்னி மாதிரி. நல்லது  கெட்டது எல்லாவற்றையும்    நெருப்பு  சரி  சமானமாக எரிப்பது போல  அந்த மஹானுக்கு எல்லாம் ஒன்று.   நித்ய பரிசுத்தருக்கு எச்சில் ஏது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...