Wednesday, August 17, 2022

krishna jayanthi




 ஸ்வாகதம் கிருஷ்ணா  -  நங்கநல்லூர்  J K  SIVAN


நான்  ஹிந்து வாக பிறந்ததில்  அதிர்ஷ்டசாலி. அடடா!,  எத்தனை  பண்டிகைகள்   கோலாகலம். 
ஒவ்வொன்றும் இறைவனை ஏதோ ஒரு ரூபத்தில்  நினைத்து வணங்க வழி செயகிறது. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும்போது  ஒரு  புது உற்சாகம் பிறக்க ஏதோ ஒரு பண்டிகை, 

இதோ  கிருஷ்ண ஜெயந்தி.  உலகமெங்கும் தெரிந்த முழு முதல் கடவுள்  கிருஷ்ணன் அவதரித்த நாள்.   பூமியிலிருந்து  ராக்ஷஸர்களை  இடப்பெயர்ச்சி பண்ணுவதற்காக  தான் பிறந்த   ஆவணி அஷ்டமி நள்ளிரவே  மதுரை சிறையிலிருந்து  கோகுலத்திற்கு இடப்பெயர்ச்சி செய்ந்துகொண்டவன்.

கண்ணன்  என்று சொன்னாலே சுபிக்ஷம் வடக்கே ஜன்மாஷ்டமி சமயம்  பருவக்காற்று காலம் தீர்ந்து  பயிர்கள் வளர்ந்து அறுவடை காலமாக இருக்கும். எனவே விவசாயிகள், விளை நிலங்களில் அதிக வேலையின்றி கேளிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்குமே. ராஸலீலா வைபவத்திற்கு கேட்கவா வேண்டும்!  . கோவர்தன கிரி நன்றி இன்னும் நம்  ரத்தத்தில் ஓடுகிறதே.

ஜென்மாஷ்டமி அன்று  ஜம்மு காஷ்மீரில்  காற்றாடி விடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலிருந்தும்  பட்டம் பறக்கும்.  இந்த  வருஷமும்  இனி  வரும் காலத்திலும்  கேட்கவே வேண்டாம்.  இதுவல்லவோ  சிறப்பு  அந்தஸ்து.!  மணிப்பூரில் அஸ்ஸாமில்  ராஸ் லீலா கேளிக்கைகள் பிரபலம்.

  கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். பாத சுவடு கோலமிடுவதில்  தான் எத்தனை ரகம். குழந்தைகளின்  கால்களை மாவில் தோய்த்து  ரப்பர் ஸ்டாம்பாக   rubber stamp ஆக  சில வீடுகளில்.   பெரிய முன்பாகம், சின்ன பின்பாதம்,   விரல்களுக்கு மேல், அல்லது குறைவாக, பாதங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக,  சேர்ந்து, 8 வரைந்து மேலே குச்சி குச்சிகளாக விரல்களை  நீட்டி  எத்தனையோ வீடுகளில் வேடிக்கையாக  பார்க்கலாம்.  குழந்தைகளை பாலகிருஷ்ணர்களாவும், ராதைகளாகவும் கோபியர்களாகவும் அலங்கரித்து அவர்களை கண் குளிர,  பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

 நம்  குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக வரையும்  பழக்கத்தை வளர்ந்துவரும்  நாகரிகம்   இதுவரை  மாற்றவில்லை. இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.  ஆச்சார்யனின் பாதத்தை  கண்ணனின் திருவடியோடு சேர்த்து  நாம்  வழிபடுபவர்கள்.  நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக் கண்ணன்  பால கிருஷ்ணன்  தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  குட்டி குட்டியாக  கிருஷ்ணன் பாதங்கள் அரிசி மாவில் வரைந்து கண்ணை பறிக்கும். உப்பு சீடை, வெல்ல சீடைக்கு ஒரு தனி ருசி. இரவெல்லாம் பஜனை. ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம். வடக்கே கீத கோவிந்தம் படிப்பார்கள், பாடுவார்கள்.

கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன், அப்பம்,தட்டை, வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.
குட்டி குட்டியாக குழந்தைகள் -- இல்லை  பிஞ்சு ராதைகள்   குட்டி  கிருஷ்ணன்கள்  என்றும் கண்ணில் படுவார்கள்.

உலக முழுதும் ,  நம்மைக்காட்டிலும்  கிருஷ்ணன்  என்றால் அதிக உற்சாகத்தோடு  வெள்ளைக்காரர்கள்  கொண்டாடுவது ஆச்சர்யம். . இஸ்கான்  பக்தர்கள்  ஆடல் பாடல்  மேள  தாளங்களோடு  நெற்றியில் நாமம், தலையில் முழு, அரை, சிண்டு,   குடுமிகளோடு,  பஞ்சகச்சம், கோலத்தோடு பெண்களும் புடவையோடு தெருவெல்லாம்  ஆடிப்பாடிக் கொண்டு, கோலாட்டம், கைத்தாளங்களுடன்  நெற்றியில் கோபி சந்தனமிட்ட  வண்ண வண்ண குழந்தைகளோடு கொண்டாடுவதைக்  காண  நிச்சயம் ரெண்டு கண்கள் போதாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...