Friday, October 9, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் J K SIVAN

''கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன்''

இதில் கண்டதை பலர் மூலம் கேட்டிருப்பி னும், நான் படித்தது நங்கநல்லூர் ஸ்ரீ ரமணி அண்ணா எழுதியிருந்த 13 பக்க சக்தி விகடன் கட்டுரையில். சற்று அங்கும் இங்கும் எனக்கு பிடித்த மாதிரி சுருக்கி அளித்ததை தவிர துளியும் மூலத்திலிருந்து விலகவில்லை. இதை படித்து இதயம் உருகவில்லை என்றால் கவலையே வேண்டாம். இதய நோய் எதுவும் வராது, இரும்பு இதயத்திற்கு எப்படி ஹார்ட் ப்ராப்ளம் HEART PROBLEM வரும் . சரிதானே?
மஹாபெரியவா ஜயஜய சங்கர ஹரஹர சங்கர கோஷம் வானைப்பிளக்க பரிவாரத்தோடு கர்னூலிலிருந்து நடந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு ஒரு சின்ன ஆந்திர கிராமம். அப்போது பெய்த திடீர் மழையை லக்ஷியம் பண்ணாமல் எல்லோரும் நனைந்து கொண்டே நடை தொடர, " மழை வலுக்கும் போல இருக்கு பெரியவா சிவிகை யில் ஏறிக்கணும்" என்று தொண்டர்கள் வேண்டினார்கள். .
“ அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் மட்டும் சிவிகையிலா? “ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்" மழை எதிர்பார்த்தபடி வலுத்தது. பலத்தது. அந்த சிறிய கிராமத்தில் ஒரு பழைய சிவன் கோயில் இருப்பதைக் கண்டுபிடித்து அங்கே சென்று தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. கிராமத் துக்கு காஞ்சி காமகோடி மடாதிபதி ஜகத் குரு மஹாபெரியவா வந்திருக்கிறார் என்ற விஷயம் காட்டு தீ போல பரவி விட்டது. திமு திமு வென ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்தவாறு அலை மோதினர். நிச்சயம் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் பக்தி அதிகம் என்று எல்லோரும் அறிவார்கள். மழை விட்டது. வந்த அனைவருக்கும் ஆசி, பிரசாதம் வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தது. ஏழு எட்டு மைல் தூரத்தில் இன்னொரு ராமம். அதன் ஜமீன்தாருக்கு மஹா பெரியவா வரும் விஷயம் தெரிந்து கிராமத்தார் அனைவரும் புடை சூழ ஓடிவந்தார்.
''எங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டும் '' என்று ஒரே மனதாக கோரிக்கை. பெரியவா யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அறிவித்தார்.
''இங்கே 21 நாள் தங்கி இருக்கப்போறேன்''
ஊரில் ஒரு பழைய சத்திரம் உடனே சுத்தம் செய்யப்பட்டு, பெரியவா பரிவாரம் தங்க தயாரானது. விறு விறுவென்று கொட்டகை போட்டார்கள். மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. எல்லோருக்கும் திருப்தி என்றா லும் காஞ்சி மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே எங்கும் கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இது போல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என தெலுங்கில் சொல்ல சொல்லி கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. காலை மணி பத்தரை ஆயிற்று, பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு "வில்வம் இல்லையா?" என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர், “ பெரியவா, ஜமீன் தாரிடம் சொல்லி இருக்கு. ஆட்களை நாலா பக்கமும் அனுப்பியிருக்கார். சீக்கிரம் வில்வம் வந்துடும்” என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார் . சுள்ளென்று ஆந்திரா வெயில். மணி பதினொண்ணரை ஆகியும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லை போலிருக்கே. இந்த லக்ஷணத்தில் இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே” வில்வம் இல்லாமல் எப்படி ???
சில மணிநேரம் ஓடியது. த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தார் . முகத்தில் ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம்.
”வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??. யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா?? வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்”
பெரியவாளின் சந்த்ர மௌளீஸ்வர பூஜை சாஸ்த்ரோக்தமாக நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு.
'' யார் வில்வம் கொண்டு வந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக் கட்டும்'' என்ற பெரியவா முன்னால் ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே "பெரியவா, இது யார் கொண்டுவந்ததுன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே பெரியவா "
“ஒருக்கால் சந்திரமௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்” என்று சொல்லி பெரியவா சிரித்தார். கிராமமே அங்கு குழுமி, கோலாகலமாக பூஜை , பிறகு, பாட்டு, பிரவசனம், பிரசங்கம் எல்லாம் நடந்த தில் ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யத்க்கு மட்டும் வயிற்றில் புளியைக் கரைத்தது. நாளைக்கு வில்வம்? என்ன பண்றது? . மறுநாள் காலையும் முதல்நாள் வில்வக் கூடையை மண்டப ஓரத்தில் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார்.
"அடே ஆபத்பாந்தவா! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே கூடையில் வில்வம் கிடைக்கு மான்னு பாரேன்!!” . ஆச்சர்யம். அதிசயம். சொல்லி வைத்தாற்போல் அதே இடத்துலே முதல் நாள் போலவே அன்றும் அதே இடத்தில் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வ கூடையைப் பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்த புஷ்டியுடன் பார்த்த பார்வையில் ''எப்படிடா இன்னிக்கும் வில்வம் கிடைச்சுது?' என்ற கேள்வி தெரிந்தது.
"ஆமாம்!, பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வ கூடை தான் இது.”
''யார் இப்படி ரகசியமா கொண்டு வைக்கி றதுன்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம் பர முதல்ல நீயே கண்காணி. அந்த ஆசாமி யை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா””
ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது காலை ஒன்பது மணி சுமாருக்கு கட்டை குட்டையாக கருப்பு நிறத்தில் ஒரு தெலுங்கு பையன், தலையிலே கட்டு குடுமி, அழுக்கு வேஷ்டி மூலகச்சம், தலையிலே ஒரு கூடையில் வில்வம் கொண்டு வந்து வழக்கம் போல பந்தக்கால் அருகே வைத்துவிட்டு திரும்பும் போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்து வணங்கினான். ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே "பையா, நீ போய் குளிச்சுட்டு, தலையை முடிஞ்சுண்டு, நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு மத்யானம் வா, பெரிய சாமி கிட்டே அழைச்சுண்டு போறேன் பிரசாதம் வாங்கிக்கோ'' என பையன் தலையாட்டிவிட்டு நழுவினான்.
மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி, நெத்தி பூரா விபூதி பட்டை , இலுப்பை எண்ணெய் வழிய தலை ஓட்ட வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த உள்ளூர் தெலுங்கு பையன் மெதுவா உள்ளே தலை யை நுழைத்தான். எதையோ யாரை யோ தேடிக் கொண்டிருந்த பெரியவாளின் விழிகள் அந்த பையனைப் பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
பெரியவாளுக்கு தெலுங்கும் நன்றாக பேச தெரியும். என்றாலும் தமிழிலே பேசினார்.
“நீ யார்? உன்னோடைய பேர் என்ன? “புரந்தர கேசவலு”’ “தமிழ் பேசறியே, எப்படி??” “அய்யா எங்கப்பாரு தாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரை பக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு புழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டி யாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாருக்கு பாட்டுன் னா உசிரு . தியாகராஜ சாமி பாட்டு புரந்தர தாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லிக் குடுத்தாரு. அப்பாரு இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ” மூச்சு விடாமல் சகல விருத்தாந்தங்களும் சொல்லிவிட்டான் பையன்.
”அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??”
“நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு, ” எலே, புரந்தரா, அதோ அந்தாக்கலே நிக்குது பாரு மூணு மரம் அது தான் வில்வ மரம். சிவன் சாமிக்கு அதோட இலை போட்டு பூஜை பண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலைடா அது ” அப்படின்னு காட்டினாரு . மூணு நாள் முன்னாலே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. சாமி மடத்துக் காரங்க கூட வந்து இலையைக் காட்டி வேணுமின்னாங்க . மாடு மேக்கறவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங் களோ ன்னு பயமா இருந்திச்சு எனக்கு. அதான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் மண்டபத்து மூலேலே கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுருங்க பெரிய சாமி ” மஹா பெரியவா அவனைக் கண்ணால் பரிபூர்ணமாக பாசத்துடன் பார்த்துக் கொண்டே “
'புரந்தரகேசவலு உனக்கு என்னடா வேணும், உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து உடனே செய்ய சொல்றேன்” என்றார்.
"சிவ சிவா!! சாமி, எங்கப்பாரு “ஏலே புரந்தரா, எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. ஆனாலும் எனக்கு ரெண்டே ரெண்டு ஆசைங்க. ஒண்ணை இப்போ சொல்லிட றேன். மத்தது பெரிய சாமி எங்க ஊர்லே ருந்து போற அன்னிக்கு சொல்றேன்''
பையன் கண்ணிலே பொலபொலன்னு கண்ணீர். அவன் சொன்னதைக் கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன்
”புரந்தரா, உன்னுடைய முதல் ஆசையை இப்போ சொல்லு” ''
“சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்க இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடிக் காட்டி சாமி அதைக் கேக்கணும்””. மஹா பெரியவா புளகாங்கிதமானாள்.
“அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே”
பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.
பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவா ளுக்கு கிடைத்தது. அவன் குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்புப் பிழைகளை அவ்வப் போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார். 21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம் பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும் போது பெரியவா கண்கள் யாரையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கொட்டகைக் கம்பத்தை கட்டிக் கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனைக் கை காட்டி அருகில் அழைத்து ” புரந்தரா, உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன? “ சாமி, மாடு மேக்கறச்சே நானும் அப்பாரும் பேசிக்குவோம். அப்பாரு ''இத பார்றா புரந்தரா, நமக்கு சாமி கிட்டே ஒரே ஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கணும் பாரு. சாமி, எனக்கு மோட்சம் கிடைக்கணும் ”
மஹா பெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அந்த சிறுவனுக்கு அருளிற்று.
” புரந்தரா, உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ் வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமாப் போ”. ஆசிர்வதித்தார். போகுமுன் ஜமீன் தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு அப்பப்போ உடனுக்குடனே தெரியப் படுத துங்கோ”” என்றார்.
இது நடந்த பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் காஞ்சியில் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒரு மணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறின நேரம் அப்போ ராத்திரி ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான். என்ன என்று கண்களால் மஹா பெரியவா வினவினாள்
”கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ புரந்தர கேசவலு சீரியஸ் என்று அனுப்பி யிருக்கா. யார்னு தெரியலே பெரியவா”” . ஸ்ரீ கார்யத் திடம் பெரியவா சொன்னது இது தான்: ”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திர மௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஆறு ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை, என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்".

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...