Wednesday, October 28, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்     J K   SIVAN  




                                                        எனக்கு  என்ன  பிராயச்சித்தம்?


பார்ப்பதற்கு  எளிமையாக தோன்றினாலும்,  எதிலும் பட்டுக்கொள்ளாமல்  தனித்து இருப்பது தோன்றினா லும், மஹா பெரியவா திரிகால ஞானி, இருந்த இடத்திலிருந்தே எங்கே எது எப்போது நடந்தாலும் துல்லியமாக அறியும் சக்தி கொண்டவர்  என்றுணர்த்த இந்த என்னுடைய  பழைய  கட்டுரையை மீண்டும்  அளிக்கிறேன்.
ஒரு நல்ல விஷயத்தை எவர் மூலமாகவும், எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம், அனுபவிக்கலாம்.   சாமஜ  வர கமனா, ஹிந்தோளத்தில்  எத்தனை பேர் எத்தனை  தடவை பாடினாலும்  கேட்க  அலுக்கவில்லையே.  அதைவிட பல மடங்கு உயர்ந்ததல்லவா  மஹா பெரியவா மஹாத்மியம்.
ஒரு தடவை பால் பாயசம் சாப்பிட்டதால் இனி வேண்டாம் என்றா சொல்கிறோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னொரு தொன்னைக்கு  கை  நீட்டவில்லையா?  என் மனசை கசக்கி பிழிந்த இந்த சம்பவம் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்காவிட்டால்  பேசாமல் மாஸ்க் அணிந்துகொண்டு கண் டாக்டரிடம்  இன்றே செல்லுங்கள். 

இதை நான் முதலில் படித்தது  ஆங்கிலத்தில் தான்.   என்னை உலுக்கியது. அன்று தூக்கத்தில் பெரியவா ளையே நினைத்து கண் மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தேன். அவருக்கு சாஷ்டங்க நமஸ்காரத்தை படுக்கையிலே சமர்ப்பித்தேன்.

சுருக்கமாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்று ஆசை.  சாதாரண  அன்றாட தமிழில் எழுதுவது எனக்கு சௌகர்யம்.  இது   பல  பெரியவா பக்தர்களை  சென்றடைந்தால் அதுவே என் முயற்சிக்கு கிடைத்த அருள் பிரசாதம். 
+++

''திருவிடை மருதூரில் அன்று சித்திரா பவுர்ணமி. மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்வித்துக்களோடு ருத்ராபிஷேகம். ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2மணி வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசுவாமி அய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி  கைகட்டி  நின்றார்.   புருவத்தை உயர்த்தி பெரியவா  தலையை சற்று சாய்த்து  "என்ன விஷயம்?"  என்று ஜாடையாக  விசாரித்தார். மிராசுதார் பவ்யமாக தேங்காய்  பழம், வில்வம் , விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் இருந்த தட்டை  பெரியவா முன்பு  வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"
"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு ''பண்ணினேன்'' . அந்த பிரசாதம்."
பெரியவா தட்டை பார்த்தார்.  தொண்டையை சற்று  கனைத்துக் கொண்டு அருகே எல்லோருக்கும் கேட்கும்படியாக உரக்கவே  ஜமீன்தாரிடம் பேசினார்: 
 "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"
"இல்லை பெரியவா. '''நானே தான்''' பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)
"லோக க்ஷேமத்துக்கு தானே?"
மென்று விழுங்கினார் மிராசுதார்
 "அப்படின்னு இல்லை பெரியவா . ரெண்டு மூணு வருஷமாகவே வயல்லே சரியா வெள்ளாமை போறலே. அறுவடை திருப்தி இல்லே. கவலையோட எங்க ஊர் முத்து  பரம்பரை ஜோசியரைக்  கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு. வெள்ளாமை பலன் கிடைக்கும்''   என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரஹமும். பெற்றுக்கொண்டு.............."
 நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே தட்டு தடுமாறி பேசியவர் நிறுத்தினார்.

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமத்துக்காகவோ ருத்ரஜெபம் பண்ணலை இல்லையா ''
ஐயர்  நெளிந்தார். பதில் சொல்லவில்லை. கைகட்டி  வியர்க்க எதிரே நின்றார்.
பெரியவா கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. குண்டூசி கீழே விழுந்தாலும் கணீர் என்று கேட்கும் அளவுக்கு நிசப்தம் எல்லோரும் பெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.   பெரியவா  எதிரே இருந்த   தட்டை, சுவாமி பிரசாதத்தை,  தொடவில்லை.

"ருத்ர ஜபத்துக்கு எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே? "
"பதினோறு பேர் பெரியவா"
"யாராரு, எங்கேருந்தேல்லாம் வந்தா?"
 பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.   நாராயணசாமி ஐயர் ,தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்து  படித்தார் 

"திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள், மாயவரம் கோபாலக்ருஷ்ண தீட்சிதர், தப்பளாம்புலியூர் தண்டு......... ....." பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.
"பேஷ், பேஷ். வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே  கரைகண்டவர்,  அதாரிட்டி.  அவருக்கு வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதுன்னு காதிலே விழுந்ததே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :
'' ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு ரொம்ப வருத்தம். பாதி பாதி முழுங்கிடறார். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று கூட தோணித்து''   

"உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதைவேணுமானாலும் சொல்லாதே. தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பத்தி உனக்கு என்ன தெரியும் ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ??....
 பெரியவா கண் மூடிக்கொண்டது :
சிறிது மௌனத்திற்கு பிறகு பெரியவா தொடர்ந்தார்.....

"நேத்திக்கு உன் ஊரிலே  கோவில்லே என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது நீ  என்ன  சொன்னே?  
வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள்''  ---   அவரிடம்  இப்படி  கேட்டியா இல்லையா ?"

அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு

"தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் "
"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?
"எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு " தலா பத்து ரூபா கொடுத்தேன்"
“தெரியும். எல்லாருக்குமேவா? "

மென்று முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராஸ்தாரிடம் பெரியவா தானே பேசினார்:

"எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ? . நானே சொல்றேன். எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுத் துண்டே  வந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே.  அவர்  குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுத்ததில் உனக்கு சந்தோஷம்! . கனபாடிகள் ஒண்ணும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டார்.   அப்படி தானே ?"

மிராசுதார்  ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார்.
"பெரியவா நான் மகா தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ ". வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது. எல்லோரையும் குண்டு கட்டாக கட்டிப் போட்டது.

"நீ பண்ணது அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் ஆத்தில்  எல்லா  ருத்ரம் சொன்ன ப்ராமணா எல்லோருக்கும்  போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைப்  பொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடணும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை. மஹா பெரியவாளே தொடர்ந்தார் :

"நானே சொல்றேன். நன்னா இருக்கு இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே.   மஹா பண்டிதர்  வெங்கடேச கனபாடிகள் ''இன்னும் கொஞ்சம் போடுங்கோ'' என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகர்ந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு   நீ சந்தோஷபட்டே""

இதைச் சொல்லும்போது பெரியவாளுக்கே ரொம்ப துக்கம் மேலிட்டது.  கண்களில் நீர் அரும்பு காட்டியது.  அவரது நா தழுதழுத்தது.  மிராசுதார்  கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.அமைதி பதினைந்து நிமிடம் போல நிலவியது. பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார்.

"தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்றவர் . இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்சில் எல்லாம்  சாக்ஷாத் பரமேஸ்வரன் வாசம் பண்றான். அவர் உடம்பு ரத்தம் பூரா ருத்ர ஜபம் ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது  எவ்வளவு பெரிய  மஹா பாவம்."

மகா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார். மிராசுதார் சிலையாகி வெகுநேரமாகி விட்டதே.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம்  அவர்  என்ன பண்ணினார்னு  உனக்குத்  தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதிஸ்வரூப  மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதியிலே  எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தான் தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி ''இன்னும் கொஞ்சம் போடுங்கோ'' என்று மிராஸ்தார் கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு எனக்கு போட இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் நான்  என்   நாக்கை அடக்கலை . அல்ப விஷயத்துக்கு அடிமையாய்ட்டேன். அதுக்கு நீ எனக்கு  தக்க தண்டனை தரணும் னு தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா. நா இனிமே எங்கே போறது? நீ தானே காசிலேயும் லிங்கமா இருக்கே. பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்துலே  ஒருத்தன்.   அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் முன்னாலே நின்னு  பிரதிஞை பண்றேன். ''இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த க்ஷண த்திலேருந்து  என் கையோ நாக்கோ தொடாது.”

கண்ணைத்  தொடச்சுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.
'' நாராயணசாமி நீ இப்போ சொல்லு   திருவிடைமருதூர்  சர்வேஸ்வரன் மகாலிங்கம் நீ பண்ணின ருத்ரத்தை ஏத்துப் பாரா ?" 
மௌனம். அனைவரும் கண்ணீர்  சிந்தும்  கற்சிலைகள்.   மிராசுதாரிடமிருந்து  என்ன பதில் எங்கிருந்து வரும்?.
மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை.  பாவம்  அவர்  பட்டினி  கிடந்தார்.  தனது மதிப்புக்குரிய  ஒரு பக்தனுக்கு நேர்ந்த அவமானத்துக்காக  தானே  தனக்கு தண்டனை கொடுத்துகொண்டார். எல்லார் கண்களிலும் அனைத்து இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் மிராஸ்தார் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா நீங்க தான் என்னை காப்பாத்தணும் ” என்று பெரியவா காலடியில் விழுந்தார்.   அப்போதும் அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவே யில்லை. "

பெரியவா “எல்லாரும்  சித்தே  இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரஹம் பண்ணுவார்" என்றார். 
பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு அப்போதுதான் ஒரு தட்டுடன்  உள்ளே பெரியவாளிடம்  வந்தார்.

"  பெரியவாளுக்கு நமஸ்காரம்.  என் பேரு மகாலிங்க தீக்ஷிதர். திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன். நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்..
அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு காமாட்சி சந்திரமௌலீஸ்வரர் பூஜை பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு தங்கள் ஊர்   மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். 
" பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் கைங்கர்யம் பண்ணினா"
மிராசுதாரையும்  வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார். நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன்.  எனக்கு  என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்."

''பெரியவா, நான் இப்பவே ஓடறேன். அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?.  அவர் மனசுலே  புகுந்து   நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார்.
" உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்" .என்று கூறிவிட்டு   மஹா பெரியவா உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் பெரியவா பிறகு வெளியே வரவில்லை. மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்.  ஏதோ அசுபம் என்று பார்க்கும்பதே  தெரிந்து விட்டது.   அன்று விடி காலையில்  வெங்கடேச கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் என்று கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார். கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர் என்று அப்போது தான் உரைத்தது
அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?.
++++
தன் பாபம் தீரவேண்டும்  என்று   நாராயணசுவாமிஐயர்   எண்ணற்ற மடங்களுக்கும் கோயிகளுக்கும்  தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று கேள்வி*

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...