Tuesday, October 6, 2020

TWO KINGS RULING US





 


பேசும் தெய்வம்  J K SIVAN

                                           
         ரெண்டு ராஜாக்கள்  க்ஷேத்ரம். 

யாரை வேண்டுமானாலும்  கேட்டு பாருங்கள்.  சித்ரகூடம் எங்கிருக்கிறது?   சௌகர்யமாக   ''ராமாய ணத்தில்''   என்று  சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள்.   சில கெட்டிக்காரர்கள்   கௌசாம்பிக்கு தெற்கே,  மத்திய பிரதேசத்தில்  சத்னா ஜில்லாவில். மந்தாகினி நதிக்கரையில்.  மலைப்பாதை என்பார்கள்.  மத்திய பிரதேசம் மட்டும் இல்லை, உத்தர பிரதேசத்திலும் பரவி இருக்கிறது என்பார்கள்.  இதைத்தவிர எத்தனையோ பேர்  சித்ரகூடம் என்று வீட்டுக்கு பேர் வைத்திருக்கிறார்கள்.    ஆனால்  ஸ்ரீ வைஷ்ணவர்களை கேட்டால்  டக்  என்று வேறு பதில் சொல்வார்கள். சிவ பக்தர்கள் கொண்டாடும்  சிதம்பரத்தைக்காட்டி ,  எங்கள் 108 திவ்ய தேசத்தில் இது ஒன்று சார்.  ‘தில்லை நகர் திருச்சித்ர கூடம் என்று சொல்வார்கள்.     பரமேஸ்வரன்  பிரபலமான  நடராஜாவாக  நர்த்தனம் செய்தாலும்  சிதம்பரம்  மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா வாக   சுகமாக  சயனம் செய்து கொண்டே   காக்கும் கடவுளாக  இருக்கும் சந்நிதியும் உள்ளது. இங்கே திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாஸனம் தில்லைச் சித்ரகூடம் என்று  பாசுர மழை பொழிந்திருக்கிறார்கள். 
தமிழ் தாத்தா   உ.வே.  சாமிநாதையர்  இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை  போலிருக்கிறதே,  சித்ரகூடம் என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்த்ர மூர்த்தியாகத்தானே இருக்கணும்? பேர் சித்ரகூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தமே இல்லையே என்று யோசிக்கிறார். 
மஹா பெரியவா   என்ன சொல்கிறார்?  சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவே கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் ஸரியா என்றால், ஸரிதான். ஏனென்றால் கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவையும் ஒருவராகவே பாவிப்பது வழக்கந்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே “கோவிந்தா”தானே போடுகிறோம்? என்கிறார்.

 உ.வே. சா. கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம். சித்ரகூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய ‘பெருமாள் திருமொழி’யின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயண ஸம்பவங்களையே சொல்லிக்கொண்டு போவதால் ,  ராமரை  மூலவராகக் கொண்ட ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ தில்லைச் சித்ரகூடத்தைத் தான் சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதோ ?

ஒரு எதிர்க் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாஸித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ராமாயண உபந்நியாஸம் நடந்து, அதிலே ‘ஜனஸ்தானத்திலிருந்த பதிநாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர், பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார். ’என் ஸ்வாமி தனித்துப் போகவா? இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூடப் போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார்! அவருக்கு ‘அந்தா  (தெலுங்கில்  எல்லாம் என்று அர்த்தம்)  ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது?” என்று கேட்கலாம்.

மஹா பெரியவா  மேலும்  என்ன சொல்கிறார்?  ''இதிலே எனக்கு ஒரு கட்சியும் இல்லை. ஸ்வாமிநாதையர் கருத்தைச் சொல்ல மட்டும் வந்தேன். அவர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி ஜெனரலாக – பொதுப்படையாக – இல்லாமல், சித்ரகூடத்தில் பாடியபோது,

தில்லை நகர் திருச்சித்ர கூடந்தன்னுள்   திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை'' என்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் ஸந்நிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.   பகவான்  எங்கும் இருக்கிறார்.  சித்ரகூடம் எங்கேயும் இருக்கட்டுமே.  பகவான்  இருக்கிறான் என்று நம்பினால் சரி. அது போதும்.    வடக்கே   உ.பி.   ம.பி  ரெண்டிலும்  பப்பாதியாக  பரந்திருக்கும்  மலைப்பிரதேசத்தில் தான்  பரதன் வந்து   ''ராமா நீ திரும்பி வந்து  அயோத்தி ராஜாவாக பொறுப் பேற்றுக் கொள் . என்னோடு வா '' என்று சந்தித்த இடம். அருமையான  அமைதியான க்ஷேத்ரம்.   மகரிஷி  வால்மீகி,  மஹான் துளசிதாசர்  பாடிய இடம்.  பிரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள்  அவதரித்த இடம்.  அத்ரி, அகஸ்திய, சரபங்கர் , தியானம் செய்த இடம்.  

தெற்கே  சிதம்பரத்தில்  சக்ரவர்த்தி திருமகன்  கோவிந்தராஜ பெருமாளாக  புண்டரீகவல்லி சமேதனாக  தரிசனம் தருகிறார்.   உத்சவ மூர்த்தி தேவாதி தேவன். நடராஜனை தீட்சிதர்கள் பராமரித்துக்கொண்டு இருக்கும்போது கோவிந்தராஜனை தமிழக அரசு இந்து அறநிலை நிர்வாகத்தார் பாதுகாக்கிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...