Saturday, October 24, 2020

AADHI SANKARA

 

ஆதி சங்கரர்      J K   SIVAN   


                                              நிர்வாண தசகம்       

நிர்வாணம்  என்றால் என்ன? இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? என்று பதில் சொல்பவர்களே,  அதல்ல 
 இதன் உண்மை அர்த்தம். 


உயர்ந்த ஞானிகளை பற்றி அறியும்போது இந்த வார்த்தை அடிக்கடி வரும்.  தன்னை மறந்த நிலை யில்,  ப்ரம்மத்துடன் ஒன்றாக இணைந்த  ஜீவர்களின் சமாதி நிலையைக் குறிக்கும் சொல். புத்தர் நிர்வாணத்தை தேடி அடைந்தவர்.  அவர் துணி இல்லாமல் இருந்த ஒரு சிலையை, படத்தைக் கூட பார்க்க முடியாது.   'சமா'  = அமைதி,  சாந்தம், வேறுபாடில்லாத நிலை. 'தி' = புத்தி.   வேறு  வேறாக எதுவுமில்லை. எல்லாம் ஒன்றே! அதுவே கடவுள் என்கிறது  இரண்டல்ல ஒன்று என போதிக்கும்   அத்வைதம்.  ஒரே சக்திதான் இயக்குகிறது  என்று  சயன்ஸ் கூட  சொல்கிறது. 

 ஒரு ஊரில்,  ஜென் குரு ஒருவர்  அழகாக ஓவியம் வரைவார். அந்த ஊர் ராஜா, அவரை  காட்டிலிருந்து எப்படியோ  தனது அரண்மனைக்கு வரவழைத்தான்.    

''சுவாமி,  நீங்கள் ஒரு ஓவியம் வரைந்து அது என் அரண்மனையை  பெருமையாக  அலங்கரிக்க வேண்டும்" என்று கேட்டபோது அந்த  துறவி, 

"ராஜா  எனக்கு ஒரு தனி அறை  வேண்டும் '' என்கிறார்.  சகல வசதிகளுடன் ஓர் அறையை  அவருக்கு  அளித்தான் ராஜா.   மாதத்துக்கு ஒரு தடவை அவர்  அறைக்குள் நுழைந்து  ஓவியம் எவ்வாறு வரைந்தி ருக்கிறார் என்று பார்க்கச்  செல்வான் . சுவற்றில்  ஒரு சின்னக்  கீறல்,   கோடு  கூட  அவர்  போட வரையவில்லை. 

"சுவாமி   ஓவியம்  எப்போது தயாராகும்?''

''இன்னும்   மூணு வருஷம் என்கிட்டே வராதே''  

மூன்று வருஷங்கள் பல்கலைக் கடித்துக்கொண்டு  ஆவலாக காத்திருந்தான்.   ஒருநாள் ஜென் குருவின் அறைக்குள் நுழைந்தான். 

மொட்டையாக ஒரு பாதையை  ஏணி  மாதிரி  வரைந்திருந்தார் ஜென் குரு.

''என்ன இது ஓவியமா?  ஏதோ ஒரு பாதை. மொட்டையாக,  ஆரம்பம் எங்கு என்றோ  முடிவு எங்கு என்றோ ஒன்றுமே இல்லையே?  இன்னும் ஒருவேளை ஓவியத்தை பூர்த்தி செய்யவில்லையோ?

''சுவாமி  இது என்ன பாதை மாதிரி இருக்கிறதே. இது எங்கே போகிறது? ''

ஜென் குரு புன்னகையோடு சுவற்றுப் பக்கம் சென்றார். பாதையை நெருங்கினார். அதில் நுழைந்தார். அப்பறம் அவரைக் காணோம்?   அவர்  புகட்டிய  உபதேசம், நீதி, உண்மை  என்ன?

பிரபஞ்சத்துடன் உயிர் ஒன்றிக் கலப்பதுதான் சமாதி நிலை. ஞானப்  பாதையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் எட்ட நினைக்கும் நிலை, சமாதி நிலை.  உடலிலிருந்து உயிர் ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் என்பது நியதி.  நாமாக அல்லது ஏதோ காரணமாக  உயிரை உடலிலிருந்து பிரித்தால் அது தற்கொலை, கொலை,  அல்லது விபத்து ஆகும்.   ஆனால்  அது இல்லை சமாதி.  உடலோடு  மூச்சு  நன்றாக இருந்து, உயிர் தானாகவே, மூச்சோடு கலந்து பிரம்மத்தை அடைவது தான் சமாதி.  மஹா யோகிகளால் வேண்டும்போது இப்படி சமாதி நிலை அடைந்து திரும்பவும்  முடியும். அவர்கள்  இப்படி அடைவது மரணம் இல்லை. ஜீவனோடு சேர்ந்த சமாதி. ஜீவ சமாதி.   அவர்கள் சமாதி அடைந்த  உடலில் மீண்டும் அவர்களால் நினைத்தபோது திரும்ப  வந்து பிரவேசிக்க முடியும் என்று   நம்பிக்கை.அவர்கள் உடலை  சமாதியாக  பத்திரப்படுத்துவது.  புதைப்பது .எரிப்பதல்ல. இந்த உடல் இல்லாவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தோடு  அவர்களால்  எங்கும் சஞ்சரிக்க முடியும். அவர்களை அதனால் தான் ஜீவன் முக்தர்கள் என்கிறோம். 

ஸ்ரீ ராகவேந்திரர், மஹா பெரியவர்  போன்றவர்கள் இன்னும்  பூத சரீரத்தில் இல்லாமல் சூக்ஷ்ம சரீரத்தோடு நம்மோடு இருப்பவர்கள். 

முக்தி, மோட்சம், நிர்வாணம் என்பதெல்லாம் இந்நிலையைக் குறிக்கும் வேறுவேறு வசீகரமான சொற்கள்.

ஆதிசங்கரர் நர்மதை நதிக்கரை கானகத்தில் அவரது குரு கோவிந்த பாதரை சந்தித்தபோது வணங்கியபோது ''நீ யாரப்பா ?'' என்று குரு கேட்டபோது இந்த பத்து ஸ்லோகங்களை சங்கரர் சொன்னார் என்று ஒரு சில புத்தகங்கள் சொல்கின்றன. அந்த பத்தும்  தான்  நிர்வாண தசகம் என்று சொல்லப்படுபவை. அடுத்த கட்டுரையிலிருந்து நிர்வாண தசகம் சொல்லட்டுமா ? 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...