Monday, October 5, 2020

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்  J K SIVAN

                  பிள்ளையும்  பிள்ளையாரும் 

நல்ல  விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையாலோ,  வீட்டில்  அலமாரி யில்  கண்ணாடிக்குள் கலர் கலராக  திண்டு திண்டு புஸ்தகங்கள்  வைத்து  பார்ப்போர்  மதிப்பை பெற அலங்கார வஸ்துவாகவோ  எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.  ஒன்று நிச்சயம். இந்த  கரோனா  வீட்டுச் சிறை  சமயத்தில் பலர்  புத்தகங்களை தொட்டு இருப்பது  தெரிகிறது. 

படிப்பது ஒரு அருமையான  பழக்கம் . அதுவும்  மஹா பெரியவா  பற்றிய அனுபவங்களை  எத்தனையோ பேர்  எழுதுவதை படிப்பது இன்னும்  சுகம்.  நான் ஏற்கனவே பல முறை  படித்துவிட்டு எழுதிய  ஒரு சம்பவம் மீண்டும் சொல்கிறேன்.

திருவையாறு க்ஷேத்ரத்தின் பெயர்  காரணம் அங்கே  ஐந்து ஆறுகள்  ஓடுவதால்.   காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற  ''ஐ'' ந்து  ''ஆறு'' கள் பாய்வதால்,  மதிப்பாக  ''திரு''   சேர்ந்து திருவையாறு  ஆகியது. 

1942 ல் நடுக்காவேரி கிராமத்தில் சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம் வசித்தது.  தெய்வபக்தி, ஆசார அனுஷ்டானங்கள் தவிர   மஹா பெரியவரிடம் ரொம்ப ஆத்மார்த்தமான பக்தி!  மஹா பெரியவா ளுக்கு இந்த பக்தரை பிடிக்கும்.  திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா  இந்த சின்ன ஸ்வாமி  ஐயர் க்ருஹத்துக்கு விஜயம்  செய்வார். 

சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை செய்துவிட்டு  கிராமத்தில்  உள்ள  சிவன் கோவி லுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபட்டு  தினமும்  சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார்.

இவருடைய பிள்ளை  மருமகள்  பெயர்கள்  பொருத்தமாக   ''ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி'' என்று அமைந்தது. அமைதியான   சாத்வீக  மனமொத்த குடும்பமாக இருந்தும்  ஒரு  பெரிய குறை.  கல்யாணமாகி 13 வருஷங்கள் ஆகியும் ஸந்தான ப்ராப்தி இல்லையே. வருத்தமும்  சோகமும்  மனசை  கரையானாக அரித்துக் கொண்டிருந்தது.   அபூர்வமாக  சீதாலட்சுமி கருத்தரித்தாள்.    எல்லோர்  சந்தோஷமும்  அகல் விளக்கு காற்றில்  அணைவது  போல் ஆக காரணம்  முதலில் பிறந்த குழந்தை தங்க வில்லை.    எப்படியும்  நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால்  நம் வீட்டிலும் ஒரு  குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.

இந்த நிலையில் அவர்கள் இருந்தபோது தான்  ஒருநாள்  மஹா  பெரியவாளின்   நடுக்காவேரி விஜயம்.   அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டே  நடந்தார்.

 ஸீதாலக்ஷ்மி  தன்  வீட்டு வாசலில்  மண்ணை பெருகி தள்ளி, பசுஞ் சாணம் நீர் தெளித்து   அழகாக  பெரிய  மாக்  கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும்  பக்தர் வீட்டுக்கு செல்ல வேண்டும்.   

 ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், மேள  தாளங்க ளோடு நடந்த   ஊர்வலத்தின் மத்தியிலி ருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.

திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும்,  சீதாலக்ஷ்மிக்கு  பேர் அதிர்ச்சி, சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம்  ஒன்று சேர அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.

"எழுந்திரு .சீதே...ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை.."

இப்படி சொல்லிவிட்டு  மஹா பெரியவா  யாரும்  சற்றும்  எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள்  தாசனாகவே  விடுவிடுவென்று ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக் கொண்டு  ஏற்கனவே  ஓடி விட்டாளே .   

முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக் கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்!   விஷயம்  காட்டுத்தீயாக பரவி  அந்த  தெருவே சின்னஸ்வாமி ஐயர்  க்ருஹத் துக்குள் கூடிவிட்டது!

மஹா பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்  போல விறுவிறுவென்று  வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவி னார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார்.  பழைய காலத்து ஒட்டு வீடு. குட்டி குட்டியாக  தலை இடிக்கும்  வாசல் கொண்ட  நிறைய  அறைகள்.  அவர்  நுழைந்த  அறையிலும்  இருட்டு.   ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டு முட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசியும்  தும்பும் !

பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப் படலம்  அவர் மேலே  படை எடுத்தது.  தன்னுடை ய ஒத்தை வஸ்த்ரத்தின்   ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்து விட்டார் கருணை வள்ளல்!

"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்  கோங்கோளேன்!"   என திக்கி  தடுமாறி   சொன்னார்  சின்ன ஸ்வாமி
 ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவன்  ராமசந் திரனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்கா ரம் பண்ணினாள்.

"ராமா!.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுகிட்டே  பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ!"- என கட்டளையிட்டார் பெரியவா. 

"உத்தரவு பெரியவா......" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு   கறந்த பசும்பாலோடு பெரியவா முன் நின்றான் ராமச்சந்திரன். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.

 "ராமா.....இந்தப் பாலை கொண்டு போயி கொடமுருட்டி ஆத்துல  கொட்டிடு.  அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல  ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு....அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும். ....அதுக்கு
மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்" 

தீர்க்கதரிசனமாக  இதைச்   சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறி  மேலே போட்டுக் கொண்டு  வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி வந்த அதேவேகத்தோடு  மஹாபெரியவா நடக்க,   ஊர்வலம் தொடர்ந்தது. 
பெரியவா சொன்னபடி   ராமச்சந்திரன்  உடனே குடமுருட்டி ஆற்றுக்கு  பால் செம்போடு  சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்..
.!!அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! "கணேசன்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.

இப்போதும் நடுக்காவேரி யில் "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாராமே.   

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அருகில் உள்ளவர்கள் அந்த பிள்ளையார் கோவில் படத்தை எனக்கு  அனுப்பமுடியுமா?.  ஜே கே சிவன்  9840279080 வாட்ஸாப்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...