Monday, January 1, 2018

OUR ANCESTORS


 எங்கள் வம்சம்  J.K. SIVAN

                        உயிர் வாழ  சில உத்திகள்                        


அந்த  காலத்தில் குடும்பக்  கட்டுப்பாடு என்று  எல்லாம்  கிடையாது.  எல்லோர்  வீட்டிலும்  குறைந்தது   5  அல்லது  6  உருப்படிகள்  இருக்கும். நான் சொன்னது குறைந்த பக்ஷம்.  10  குழந்தைகள்  இருக்கும்  குடும்பங்கள்  ஏராளம்.  சில  குழந்தைகள் இளம்   வயதிலேயே இறைவனடி   சேர்ந்துவிடும்  நிலை  அப்போது.   வியாதிகள் பற்றிய  விஷயம்,  விவரம்  தெரியாது.  சிசுமரணம் (child mortality)ஜாஸ்தி.   எந்த வியாதிக்கும் கை வைத்தியமாகத்தான்  --  அதாவது  அனுபவ  மருத்துவத்தால்  தான்  சிகிச்சை.  முக்கால்வாசி குடும்பங்கள்  ஈஸ்வரன் மேல் பாரத்தை போடுபவை. அதாவது  உடம்புக்கு  நோய் என்றால் முடி தருகிறேன் என்று வேண்டிக்கொள்வது. அங்கப் பிரதக்ஷணம் பண்ணுகிறேன் என்று வேண்டிக்கொள்வது. முடிந்தபோது பின்னால் ஒரு நாள்  சென்று பார்த்தனைக் கடனை செலுத்துவது என்று ஒரு வழக்கம்.


டாக்டர் படித்து பட்டம் பெற்றவர் அல்ல.  பரம்பரை பரம்பரை யாக   மூலிகைகளை  அறிந்து இதால்  இது  குணமாகும்  என்று  பல பேருக்கு கொடுத்து  சில பேருக்கு  குணமாகி  அனுபவம்  கண்டவர்கள். நாட்டு மருத்துவர்கள் என்று பேர் கொண்டவர்கள். 

ஆயிரம்  பேரை கொன்றவன்  அரை வைத்தியன் (ஆயிரம் வேரைக்கொண்டவன்  என்று  நிறைய  பச்சிலை  மூலிகைகளைக்  கொண்டவன் கொண்டவன்  கூட  முழுமையான  வைத்திய சாஸ்திரம்  தெரிந்தவன் அல்ல  என்று  தான்  சொல்வது வழக்கம்)   என்ற வாக்கு  பொய்க்காமல்  இருந்திருக்குமோ  என்று   தோன்றுகிறது.  

சில குடும்பங்களில் பத்து  பன்னிரண்டு  குழந்தைகளில்  நான்கு  ஐந்தாவது  தேறாதா  என்ற  ஆதங்கத்தில் இவ்வாறு  குடும்பத்தில்  ஒரு  ஏக்கம்  பயம்   இருந்திருக்கலாம்.  நோய்  நொடி வந்தால்  வைதீஸ்வரனுக்கு  வேண்டிக்கொண்டு,  திருப்பதி வெங்கடாசலபதிக்கு  முடிந்து வைத்தும் நம்பிக்கையோடு  கடவுளை வேண்டும்  பழக்கம்  இன்றும்  சில  குடும்பங்களில்  தொடர்கிறது.

 குழந்தைக்கு  மூக்கிலோ  காதிலோ  துளை இட்டு  பின்னம் பண்ணினால்  யமன்  நெருங்க மாட்டான்,  கசப்பான  வேம்பு என்ற பெயர்  வைத்தால்    ''ச்சே  பேரே  கசக்கிறதே''  என்று   யமன்   கிட்டே  வரமாட்டான்  என்றெல்லாம்  நம்பினார்கள்.  அவன் போட்ட  ''பிச்சை''  என்று  குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் கருணை காட்டி  உயிர்ப் பிச்சை  என்று  விட்டு விடுவான். இப்படியான  நம்பிக்கைகளால்   நிறைய குடும்பங்களில்  இன்றும்  ''பிச்சைகள், வேம்புகள்''  இருக்கிறார்கள்.  எனது  மூத்த தமையனுக்கு  வீட்டில்  பிச்சை  என்ற பெயர்.   வெளியே  ரத்தினம்  அய்யர். இன்னும் இருக்கிறார்  என்னைவிட 6 வயது பெரிய  86வயதுக்காரர். வெகு நன்றாக  பாடுவார்.

 பெரியவர்கள் பெயரை குழந்தைக்கு  வைத்து  அந்த  பெயரைச்  சொல்லி  கூப்பிடுவது  அவ மரியாதை என்று  அந்த  பெயர் கொண்ட குழந்தைகள்  கடைசிவரை  அம்பி, பெரியம்பி, சின்னம்பி,  அண்ணு , அண்ணப்பா, அங்கச்சி.  அம்மாளம்,   இப்படிப்பட்ட பெயர்களாலேயே  அழைக்கப்பட்டு  வாழ்ந்து  மறைந்தார்கள்.   பக்தி  அவர்களைக்  காப்பாற்றியது  என்று தாராளமாக  கூறலாம்.

எங்கள்  முன்னோரில்  பலர் சங்கீத  வித்வான்களாகவும்  சிறந்த  ராம  பக்தர்களாகவும் இருந்தார்கள். சாதாரணமாக  பாடுபவர்களைக்  காட்டிலும்  அசகாயத்தனமாக பாடுபவர்களுக்கு  மவுசு  (DEMAND ) இருந்ததால்,  வித்வான்கள் '' தனித்திறமை காட்டி பரிசுகள் பெற  முனைந்தனர். 

ஏற்கனவே  ''கனம் '' பாடுவது பற்றி  சொல்லியிருந்தேனே.  அது போல்  தான்  மற்றொரு அசாத்யமான சாதகம், கழுத்தில்  கூரான  கத்தி கட்டிக்கொண்டு  பாடுவது.  கண்டம் சிறிது சரிந்தாலும்  குரல்வளை பெருத்தாலும்  பிடிப்பாக  கட்டிக்கொண்டிருந்த கூரான  கத்தி  தொண்டையை  பிளந்து விடும்.

 இன்னொரு  சாதகம்  தலையில்  எலுமிச்சையை வைத்துக்கொண்டு  அசையாமல்  பாடுவது.  பாடும்போது  தலையை அசைத்தும் கைகள், உடம்பை  மாவாட்டுவது  போல்  உருட்டியும்  பாடுபவர்கள்  இன்னும்  இருக்கிறார்கள். 

 எனக்கு  தெரிந்து  சிறுவயதில்  எம்.   கே தியாகராஜ  பாகவதர்  என்ற  பாடக  நடிகர்   பாடல்களை  பாடுவதை  படத்தில்  கண்டிருக்கிறேன்.  ஒரு சில  கச்சேரிகளை நேரிலும்  கேட்டிருக்கிறேன்.  துளிகூட  முகம் சுளிக்காமல்  பாடுவார்.  ஏழிசை மன்னன்  என்று பேர்  பெற்றவர்.  கந்தர்வ கானம்  என்பார்கள்.  4 - 4 1/2 கட்டையில்  பாடுபவர் என்றெல்லாம்  புகழ்வார்கள்.  இன்றும்  அவர்  பாட்டுகளை  விடாமல்  கேட்டு வருவதில்  தனி ஆனந்தம்  கொள்பவர்கள்  என் ரகம். ''கிருஷ்ணா முகுந்தா முராரே'' கேட்காதவர் யார்.

 தலையில் எலுமிச்சை  வகை  சங்கீதம்,  குழந்தைகள்  இன்றும்  விளையாடும்  லைம்  அண்ட் ஸ்பூன் ஓட்ட பந்தயம்  போன்றது.  இது  ஓடி  ஜெயிப்பது.   அவர்கள்   சாதித்தது பாடி  ஜெயிப்பது.

இந்த  மாதிரி  வித்தைகளில் கற்று  தேர்ந்தவர்  தஞ்சாவூரில் வாழ்ந்த கனம்  கணபதி சாஸ்திரிகள். அவருக்கு சகோதரி புருஷனாக  வாய்த்தவர்  திருக்குன்னம்  சங்கீத  வித்வான்  கனம்  கிருஷ்ணய்யர்.

 என் தாத்தா  வசிஷ்ட பாரதிகள்   மன்மத  வருஷம் வைகாசியில்  (1892) தனது   சகோதரன் சீதாராம  பாகவதருடன்  கும்பகோணம் சென்றிருந்தார்.  அப்போது  பிரம்ம  ஸ்ரீ  உ.வே. சாமிநாதய்யர்  அவர்களை,  அவர்  வீட்டில்  போய்   பார்த்து  பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்போது  உ.வே.சாவின்  அப்பா  உத்தமதானபுரம்   வேங்கடசுப்பய்யர்:

''வாங்கோ,  உங்க  வர்க்கம்  பெரிய  சங்கீத  பரம்பரை என்று  தெரியும்.  எங்கள்  உறவினர்  கனம்  கிருஷ்னய்ய ருக்கு   பந்துவும்  குருவுமாகியவர்   அல்லவோ கனம்  கணபதி சாஸ்த்ரிகள்.  அவர்  பிள்ளைதானே  ரெட்டை  பல்லவி  தோடி  சீதாராமய்யர்?''  
என்றார்.

 உ.வே.சாமிநாதய்யர்  அப்போது  சிறிய வயதினர்.  இந்த தோடி  சீதாராமய்யர் தான்  எனது  தாத்தா  வசிஷ்ட பாரதிகளின் தாத்தா .

சங்கீதத்தில்  பிரசித்தி பெற்ற  பட்ணம்  சுப்ரமணிய  அய்யர்  (சிறந்த  சாஹித்ய கர்த்தா) அவர்களுடைய  தகப்பனார் வைத்யநாத  அய்யர்  தஞ்சாவூர்  பெரிய கோவிலில்  பாடகர்.  கனம்  கணபதி சாஸ்திரிகளின் சிஷ்யர்.

தஞ்சாவூர்  மகாராஜா, இவருடைய  பாட்டில் லயித்து சன்மானமாக பொன் மஞ்ச நல்லூரில் ஒரு சொல்ப தீர்வைக்கு  நிலம் தானமாக  அளித்தார்.  சில வருஷங்களில்  பஞ்சத்தில்  நிலம்  விளைச்சல்  இல்லாதபோது குடித்தீர்வைக்கு நிர்பந்தம்  பண்ணின சமயத்தில் சாஸ்திரிகள் ஒரு  பதம்  பாடினார்.  இதை ரசித்து மகாராஜாவிடம் சிபார்சு செய்து நிதி  வாங்கி  கொடுத்தவர்  ராஜாவின்  மந்திரி  பாவா சாமி  பண்டிதர்.  அவர்  பெயரிலேயே  சாஸ்திரிகள்  இந்த பதம்  பாடினார்.  அது:

 ராகம் :  சஹானா      தாளம்:  ஆதி  சாபு
                      பல்லவி
பங்கெனக்கு  வேண்டாமையா -  பொன்மஞ்சூரு
பங்கெனக்கு  வேண்டாமையா   (பங்)

                     அனுபல்லவி

 பங்கெனக்கு  வேண்டாமையா
                                     பாவாசாமி  பண்டித ராயா
எங்கள் குலம்  கடைத்தேற
                        கங்காஸ்நானம் போறோமையா   (பங் )

 இந்த  பாட்டை பற்றி  என்  தாத்தா  அவர்  பாட்டி  சொல்ல கேட்டிருக்கிறார்   என்றால் எவ்வளவு பழங்கதை இது  என்று  அறியலாம்.

பாவாசாமி பண்டிதர் என்கிற  மந்திரி  இந்த  பாட்டைக்கேட்டுவிட்டு    ''இது  என்ன  ராகம்?''  என்றார்
கணபதி சாஸ்திரிகள்  ''உங்கள்  அப்பா  பெயர்''   என்றார்.     (மந்திரி  அப்பா  சகா நாயக் --  அதாவது  ராகம்  சஹானா )

கணபதி சாஸ்திரி புலமையை மெச்சி  நிறைய  பரிசுகள் கிடைத்தன.

கணபதி சாஸ்த்ரி குடும்பம்  காசிக்கு  கங்கா ஸ்நானம் போகிறேன்  என்று  சொன்னபடியே  அவர் தாய்,  அம்மாளுவுடன் , மனைவி  லக்ஷ்மியோடும்  ஒரு நல்ல நாள்  பார்த்து  யாத்ராதானம்  செய்து விட்டு புறப்பட்டார்கள்.  வழியில்  திருவையாறு, ஸ்வாமி மலை, கும்பகோணம், மாயவ

ரம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் , திருவதிகை வீரட்டானம்,  திர்க்கழுக்குன்றம், காஞ்சி , தெரிசனம் பண்ணிவிட்டு, சென்னப்பட்டணம் வந்தார்கள்.  அந்தக்கால பயணம் நடந்தே தான். இரவில் எங்காவது சத்திரத்தில் திண்ணையில்  வாசம்.  யாரும் யாரையும் சந்தேகித்து விரட்டாத காலம்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...