Sunday, January 7, 2018

ADDHRA





ஆர்த்ரா தரிசனம் J.K. SIVAN
ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில் தையா தக்கா என்று ஆடுகிறோம். ஆனந்தம் என்றாலே நடனம். சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான் ஆனந்த நடேசன், நடராஜன். கனகசபையில் ஆடும் சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது. மார்கழி திருவாதிரை அன்று ஆடியது பிரசித்தமான ஆனந்த நடனம். அதைப் தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத்துக்கு எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போவது. கண்கள் கோடி வேண்டாமா கபாலியைக் காண.களிப்பு என்றால் சந்தோஷம். திருவாதிரை அன்று சிவனுக்கு நைவேத்யம் களி.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனுக்கு ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணம் திடீரென்று நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.
''ஹரி, எனக்கு சொல்லுங்களேன்?'' என்கிறார்
''சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்டவத்தை'' என்றதும் ஆதிசேஷன் ஓடுகிறார்
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
‘பதஞ்சலி’ - மெதுவாக ஒரு குரல். கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன். கைகள் தொழுதன .
‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் என்பவரும் எனது நடனம் காண தவம் செய்கிறார். எனவே உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று முறை யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன் சொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்திரா தரிசனம்.
சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த கேழ் வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார். ''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத்தார். வந்தவரும் களியை ''ஆஹா பிரமாதம் என்று உண்டு மீதி இருந்ததையும் ''அடுத்த வேலை சாப்பிட இது வேண்டும் '' என்று எடுத்துச் சென்றுவிட்டார். சேந்தனார் கம்பல்சரியாக முழு உபவாசம் ! .
சிதம்பரம் ஆலயத்தில் அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்பகிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? '' விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான்
''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது '' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லிவிட்டுந்தாரே. சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த்திருவிழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த்திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.
சிவனைத் தேரில் ஏற்றியாகிவிட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழையினால் சேற்றில் தேர் சக்கரம் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான்.
அசரீரி ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று.
''நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்'' என துடித்து சிவனை வேண்டினார்.
அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாடினார். நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்திருக்கிறது.
"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும்.
பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். ''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...