Monday, January 15, 2018

ENGAL VAMSAM


  என் தாய் வழி முன்னோர்  J.K. SIVAN 

                       அரண்மனை உத்தியோகம்

திருவையாறு சப்தஸ்தான வைபவங்களை பற்றி சொல்லும்போது ராமஸ்வாமி பாரதியும் அவர் மனைவி காமாட்சியும்  எப்படி ஒரு ப்ரதிஞை எடுத்துக் கொண்டார்கள். இனி நாமும்  ஏதாவது ஒரு கைங்கர்யம் பக்தர்களுக்கு செய்யவேண்டும் என்று தீர்மானித்து, தங்களால் எது இயலும் என்று முடிவெடுத்து அடுத்த சப்தஸ்தான விழாவிற்கு தங்களைத்  தயார்  செய்து கொண்டார்கள் என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம்.

எனவே அடுத்த வருஷம் ராமஸ்வாமி  அவர்  மனைவி  காமாட்சியும்  சப்தஸ்தான வைவபத்தில்  எப்படி  பங்கு  கொண்டார்கள் என்று சொல்ல முயல்வதற்குள் குட்டி குட்டியாக நிறைய வேலைகள் சேர்ந்து  என்னை திசை திருப்பி விட்டன.  என்ன செய்வது?.  மற்ற  வேலைகளையும் பார்க்கும் பொறுப்பும் இன்னும்  இருக்கிறதே.

சப்தஸ்தான உற்சவத்துக்கு  முதல்  நாள் நெல்லு விற்ற  பணம் 5 ரூபாய்,(தாராளமாக  தற்போதைய  50,000  ரூபாய்க்கு  குறையாமல் மதிப்புள்ளது என்று சொல்லலாம்.  ஏறக்குறைய  200-250 ஆண்டுகளுக்கு  முன்  நடந்த  விஷயம்  அல்லவா? ஐந்து ரூபாய் ரொம்ப பெரிய பணம்.) சத்து மா  மூட்டைகளோடு,  பந்துக்கள்   புடை சூழ  ஒரு பெரிய  வில்  வண்டி  (ரெட்டை காளை )  கட்டிக்கொண்டு   அனைவரும் திருவையாறு  சேர்ந்து  சுவாமி  தரிசனம்  பண்ணி விட்டு,கண்டியூர்  வந்து விட்டனர்.  அங்கு  தானே  பிரணதார்த்தி ஹரனிடம்  சத்யம்  செய்து  கொடுத்தார்  போன  வருஷம்.    

கண்டியூர்  பற்றி  சமீபத்தில் நிறைய எழுதி இருந்தேன். மீண்டும் அதில்  ஒரு  வார்த்தை  சொல்ல நினைக்கிறேன்.

மேற்கு  பார்த்த   ஸ்ரீ  சிர  கண்டீஸ்வரர் ஆலயம்  காளஹஸ்திக்கு  ஈடானது.  ஸ்ரீ  காளஹஸ்திக்கு ஒவ்வொரு  பிரதோஷமும்    விடாமல்  சென்று  வந்த ஒரு மகானுக்கு  ஈஸ்வரன்  தரிசனம்  கொடுத்தார். ராஜகோபுரத்தை  தாண்டி  உள்ளே  நுழைந்தால்  அழகான  தத்ரூபமான நந்திகேஸ்வரர் வரவேற்கிறார்.  சிர கண்டீஸ்வரர் மீது  அப்பரும்   திருஞான சம்பந்தரும்  பதிகம்  பாடியிருக்கிறார்கள்.   தெற்கு  பார்த்து  அருள்  புரியும்  அம்பாள்  மங்களாம்பிகை.

ஸ்தல  விருக்ஷம்  வில்வம்.  ப்ரஹாரம் சுத்தி வரும்போது  சரஸ்வதியோடு  ஸ்ரீ  பிரம்மா பெரிய  சிலையாக  காட்சி தருகிறார். சப்தஸ்தான  உற்சவத்தில்  கண்டியூர்  பல்லக்கு  விழா பிரபலமானது.  எங்கெங்கோ  இருந்தெல்லாம்  கிராமங்களிலிருந்து ஜனங்கள் வெல்லத்தை மொய்க்கும்  எறும்பாக  ஜேஜே என்று  குழுமிவிடுவார்கள்.

 எங்கும் ஜன வெள்ளம். வெயில் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல்  '' ஹரஹர மகாதேவா ''  ப்ரணதார்த்தி ஹரா, ஐயாறப்பா, சம்போ மூர்த்தி''  என்று ஆர்ப்பரிப்பார்கள். வேத கோஷங்கள் வானைப் பிளக்கும்.  தேவாரம் கோஷ்டி கொஞ்சமும் இதற்கு சளைக்காமல் பிய்த்து வாங்கும். நாதஸ்வரம் ஸுஸ்வரமாக ஒலிக்கும். தஞ்சை ஜில்லா கலைகளுக்கு பேர் போனதல்லவா.


கண் கொள்ளாக்  காட்சியாக  திருவையாற்றிலிருந்து பஞ்சநதீஸ்வரரும் தர்ம சம்வர்தினியும் புஷ்பங்களால்  அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மற்ற  ஆறு  ஸ்தானங்களில் நின்று  தரிசனம் கொடுத்து   நந்திகேஸ்வரர் ஸ்வயம் பிரகாசினி ஆகிய  புது  கல்யாண தம்பதிகளை  அறிமுகப்படுத்திவிட்டு  கண்டியூர் வருவார்களே.  என்ன  கோலாகலமாக  இருக்கும். உற்சவம்  திருநெய்த்தானம் என்னும்  தில்லைஸ்தானம் வரையில்   தொடரும். பிறகு  அவரவர்கள்  ஊருக்கு  திரும்புவார்கள்.

 கண்டியூரில்  ஒரு  அருமையான  விஷ்ணு  ஆலயம்  இருக்கிறது.  திருமங்கை  ஆழ்வார் இந்த  ஊருக்கும்  வந்திருந்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்.  ஹர சாப  விமோசன  பெருமாள் என்று  விஷ்ணுவுக்கு  இங்கு  பெயர்.  பூர்ணவல்லி தாயார் கமலவல்லி  நாச்சியார் உடன் உறைந்து அருள்  சேவை  தருகிறார்கள்.  பிரம்மன்  ஐந்தாம் தலையை  சிவன்  துண்டித்து ப்ரம்ஹஹத்தி தோஷம் சாபம்  நீக்கிய  பெருமாள்  இவர்.  நான்  சில  நாட்களுக்கு முன்பு மீண்டும்  இந்த  கோவிலுக்கு வந்து  பெருமாளை சேவித்திருக்கிறேன்.  யாத்ரா விபரம் என்று அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

ராமஸ்வாமி  பாரதி காமாக்ஷி  தம்பதிகள் கண்டியூர்  சிவன்  சன்னதிக்கு  தெற்கே உள்ள மண்டபத்தை  பெருக்கி  அலம்பி சுத்தம் பண்ணி கோலம் போட்டு, பெரிசாக  ரெண்டு  தண்ணீர்  தொட்டிகளை  கொண்டு  வைத்தனர். அதை  நிரப்ப  பெரிதும் சிறிதுமாக   4  தண்ணீர் குடங்கள். பக்தர்கள்  மொண்டு  குடிக்க  10  தகர குவளைகள்  பள  பளவென்று தேய்த்து  வைத்திருந்தனர். 4  குடம்  தயிர்  முதல்  நாளே  தோய்த்து வைத்துகொண்டனர்.  மறுநாள்  சப்தஸ்தான மகோற்சவம்  உதயாதி நாழிகையிலேயே களை  கட்டி விட்டது.   காமாக்ஷி  ராமஸ்வாமி தம்பதியர்  உறவினர்  எல்லோரும்  அதிகாலையிலேயே   ஸ்நானாதி நியமங்களை முடித்துக்கொண்டு அன்று தினம்  பூரா  ஆகாரம்  இல்லாமல்  உபவாச, விரதம்  இருந்து கொண்டு,  வரும் சிவனடியார் கூட்டத்துக்கு  ஆராதனை செய்து  சத்துமா  கைங்கர்யத்தை  வேண்டிக்கொண்டபடியே  வழங்க ஆரம்பித்தார்கள்.

கோவிலுக்கருகில்  உள்ள  மங்கள தீர்த்தம் என்கிற  கிணற்றிலிருந்து   ஈர  வஸ்த்ரம் கட்டிக்கொண்டு  காமாக்ஷி குடம் குடமாக   நீர்  இறைத்து இடுப்பில் குடங்களை சுமந்து கொண்டுவந்து  தொட்டியை  நிரப்பிக்  கொண்டே  இருந்தாள்.  அரைக்குடம்  தயிருக்கு   10  குடம்  தண்ணீர்  விட்டு  கலந்து வேண்டிய  லவணம் (உப்பு) சேர்த்து  கரைத்து  சத்துமாவை  சேர்த்து   பிரணதார்த்தி ஹரனுக்கு  நிவேதனம்  பண்ணி குவளைகளில்  மொண்டு  மொண்டு   வேத  பாரயணம்  பண்ணும்  பிராமண கோஷ்டிகளுக்கு  முதலில்  அளித்தனர்.  பிறகு மற்றவர்களுக்கு இந்த  சேவை  தொடர்ந்தது.  காலையிலிருந்து  சாயந்திரம் அஸ்தமனம்  வரை அந்த தொட்டிகளில்  தயிர் கலந்து சத்துமா கைங்கர்யம்  அக்ஷயமாக  விநியோகமாகியது.

 ஒரு  பெரிய தொட்டி  சத்துமா  முடிவதற்குள்  மற்றொன்று ரெடியாகிவிடும்.  இப்படி  விடாது பாடுபட்டு  மன  சந்தோஷத்தோடு கைங்கர்யம்  நடந்து. உச்சி வேளை  12 மணி  சமயத்தில்  ஏற்கனவே  சொன்னபடி   பிரணதார்த்தி ஹரர்  தர்ம ச்ம்வர்த்தினி ஆடிக்கொண்டே  பல்லக்கில் கண்டியூர்   வந்து சேர்ந்தார்கள்.

 ''எண்ணிய  எண்ணத்தை   ஈடேற்றி வைத்த  என்  அப்பனே,  ஐயாறப்பா,  அறம் வளர்த்த  நாயகியே,  அன்னையே,   உனக்கு  நமஸ்காரம்''  என்று   ராமஸ்வாமி  பாரதிகள்  தம்பதியர்  வேண்டிக்கொண்டனர்.  சந்தனம், புஷ்பம்  வெற்றிலை  பாக்கு தாம்பூலம் கொடுத்து  வேத  பாராயணம்  செய்வோரை  பூஜிக்க,   சத்துணவை  உண்ட  அவர்கள்,  ''உங்களைப்போல சத்துக்களை  கண்டதில்லை,  ஆகாரத்துக்கு  ஆகாரம்,  சுகத்துக்கு சுகம்,  நல்ல  ருசியான  உணவு, என்று புகழ்ந்தார்கள்.  

இந்த  சத்துமா  கைங்கர்யம்  ராமஸ்வாமி  பாரதி தம்பதிகளுக்கு ப் பிறகும்  ஏறக்குறைய  150  வருஷங்கள்  நடந்தது.

இந்த  தர்மம்  ஆரம்பித்த  மறு  வருஷமே  ஒரு  புத்திர  பாக்கியம்  ராமசாமி பாரதிகளுக்கு  ஏற்பட்டது. பஞ்சாபகேசன் என்று பெயர் வைத்தார்கள்.  ஜாதகபலன்  சொன்னபடி,  அந்த  புத்ரனுக்கு, வித்யாபலம் இல்லை,  ராஜப்ரீதி   யோகம் இருந்தது. இவர் தான்  சிவாஜி ராஜாவின் ரெண்டாவது  ராஜகுமாரியை  தூக்கி  வளர்த்தவர்.  பஞ்சாபி  தனது  50வது  வயதில்  ராஜாமணி பஞ்சு  ஐயர்  என்ற பெயர் பெற்றார். 

ராமசாமி பாரதிகளுக்கு  அடுத்து  பத்து வருஷங்களுக்குள்   மற்றும் இரண்டு  புத்ரர்கள், நாகசாமி, வைத்யநாதன் என்று பெயரோடு.  ஜானகி என்று ஒரு பெண். பிறகு ரமணன்  என்று  ஒரு  பிள்ளை.  நாகசாமி  என்ற  நாகு  ஐயர்  ராமசாமி பாரதிக்குப் பிறகு  இந்த  சத்துமா  கைங்கர்யம்  தொடர்ந்து நடத்தி  'சத்துமா  நாகு'  அய்யர்   என்ற  பெயர்  பெற்றார்.    

ராமசாமி பாரதியின்  மூத்த  மகன்  பட்டாபிராமன் என்கிற  பிச்சு  ஐயர் மனைவி  சில  குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்து மறைந்தாள்   மூத்தவன்  சீதாராமன், இளையவன்  கல்யாண ராமன்.  சீதா ராமனுக்கு  சந்ததி இல்லை. பிச்சு ஐயர் துறவறம் பூண்டார்.  நான் ஏற்கனவே சொன்னபடி  ராமனை நினைந்து வணங்கி பாடி வாழ்ந்த அந்த குடும்பங்களில் எல்லோருக்கும் பெயர்  ராமன் என்று தான் முடியும்.

பஞ்சு ஐயர் மந்திர தந்த்ரங்கள் கற்பித்து,   தஞ்சாவூர் மகாராஜா  சரபோஜி யோடும், அவர் குமாரன் , சிவாஜி மகாராஜாவிடம் நெருக்கமாக  நட்பு கிடைத்தது. (ராஜ ப்ரீதி ).

பஞ்சு ஐயரின்  அத்தை மகன் பிரபல சங்கீத வித்வான் ரெட்டை பல்லவி  தோடி  சீதா ராமையர். இன்னும் மேலே சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...