Monday, January 8, 2018

THIRUPPAVAI 25



சுடச்சுட அக்காரவடிசல்       J.K.SIVAN 
மார்கழி  25ம் நாள்


                    நெருப்பென்ன நின்ற நெடுமாலே

குளிருக்கும் சூட்டுக்கும்  ரொம்ப பொருத்தமுண்டு.  எதிர் மறைகள் ஒன்றை ஒன்று விரும்புவது போல !  குளிரில் சூடான டீ  காபியை  நெருப்புக்கோழி போல் விழுங்குபவர்களைக் கண்டு நான் மூக்கின் மேல் கை  வைத்து அதிசயிக்கிறேன்.  காபி டவரா கொடுத்தாலும் சூடாற்றிக் கொள்ளாமல் தொண்டைக்குள் இறக்குவதற்கு அப்படி என்ன தனி வசதி அவர்களுக்கு மட்டும்? விடை அப்புறம் தேடுவோம்.

எங்கும் நோக்கமுடியாமல்  கரும் இருட்டு கவ்விச் சூழ்ந்திருந்தது. இருட்டுக்குத் துணையாக காற்று பலமாக வீசியது. மார்கழியின் விசேஷமே பனிகலந்த சில்லென்ற காற்று தானே. வில்லிபுத்தூரில் எங்குமே எப்போதுமே அமைதி தான். ஆனந்தம் தான். அரங்கன் உள்ள ஊரில் ஆனந்தமில்லாவிட்டால் தானே ஆச்சர்யம்.

அந்த நிர்மானுஷ்யமான துளசி நந்தவன ஆஸ்ரமத்தில்  ''நாராயணா,  கோவிந்தா, முகுந்தா'' என்ற விஷ்ணு சித்தர் குரல் மட்டுமே துல்யமாக கேட்டது. காற்று வீசியதில் தீபம் மலை ஏறிவிட்டதால் விஷ்ணு சித்தர் மீண்டும் தீபத்தை ஏற்றினார். திரியை நிமிண்டி நீட்டிவிட்டு இருந்ததால் , காற்று அதன் மீது படாதவாறு அதைச்சுற்றிலும் ஒரு பிறை அமைத்ததால், அந்த தீபம் சற்று கூடுதலாக கொடுத்த வெளிச்சத்தில் ஆண்டாளின் மார்கழி 25ம் நாள் பாசுரத்தை ஏந்திய ஓலைச்சுவடியை அரங்கன் விக்ரஹம் முன் வைத்து வணங்கி அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு மெதுவாக படித்தார்.

கண் தெரியவில்லை. ஓலைச்சுவடியின் எழுத்துகள் புரிபடவில்லை. கண்ணைச் சுருக்கிக்கொண்டு சுவடியை விளக்கருகே கொண்டு சென்று தலைக் கவிழ்த்து படிக்க முயன்ற போது தான் கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள் . அவர் படும் அவஸ்தை அவளை வாட்டியது.

''அப்பா. நீங்கள் ஏன் ஸ்ரமப்படுகிறீர்கள். இதோ நானே படித்துக்காட்டுகிறேனே''

''படித்துக்கொண்டே பாடினால் இன்னும் அற்புதமாக இருக்குமே. பாலில் தேன் கலந்தாற்போல். நீயே  பாடம்மா ''

கணீரென்று வெண்கலக்குரலில் கோதை பாடியபோது தான் நமக்கெல்லாம் இன்றைய திருப்பாவையின் 25வது பாசுரம் கிடைத்தது.

''ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''

(அடாடா  அரியக்குடி ராமாநுஜய்யங்காரின் கம்மல் குரல் காதில் இன்னும் ரீங்காரிக்கிறது. பெஹாக் ராகத்தை பிழிந்து  ''ஒருத்தியில்''  கொடுக்கும்  அழகு...!!)  லிங்க் கொடுத்திருக்கிறேன் க்ளிக்கவும்.https://youtu.be/aSarJv8p7SUhttps://youtu.be/aSarJv8p7SU

''அந்த  குட்டி கிருஷ்ணன் எப்படிதான் நாளொரு ராக்ஷசனும் பொழுதொரு ஆபத்துமாக வளர்ந்தான் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே . இல்லையா அப்பா ?'' என கேட்டாள்  கோதை.

''ஆமாம், என் செல்வமே. தாயே, அவன் எந்த ஆபத்திலும் சிக்க வில்லை. அந்த ராக்ஷசர்கள் தான் ஒவ்வொருவராக வரிசையில் வந்து அவனிடம் சிக்கிக்கொண்டு,  அவன் கையால் ஆபத்தையும் மரணத்தையும் தானே தேடிக்கொண்டார்கள் என்பது தான் உண்மை. அவன் எதற்கு அவதரித்தானோ அந்த வேலையை பிறந்த கணம் முதல் தொடங்கிவிட்டான். சுறுசுறுப்பில் அந்த கண்ணன் பயலைத்தான்  நாம் பின்பற்றவேண்டும்!''

இறைவனுக்கே உகந்த சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதம் இன்று 25வது நாளைத் தொட்டு விட்டது. இன்னும் ஒரு கை விரல்விட்டு எண்ண இன்னும் சில  நாட்களே உள்ள நிலையில் இன்று நடந்த விஷயத்துக்கு வருவோம். அதற்கு நாம் ஆயர்பாடி  கண்டிப்பாக போயாகவேண்டும்.  வாருங்கள் புறப்படுவோம்.

++

''சரணாகதி நீயே என்று கண்ணன் திருவடிகளில் மெய்மறந்து மனம் கனிந்து அவன் பேரருள் பெற வேண்டிய ஆண்டாளுக்கு திடீர் என்று கிருஷ்ணனின் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது.

இந்த மாயாவி யார்?

யாரோ ஒருத்திக்கு பிறந்தவன், பிறந்த கணத்திலேயே அவளை விட்டு பிரிந்தவன், பிறந்ததையே ரகசியமாக்கி விட்டு வேறு எங்கோ ஒருத்தியிடம் ரகசியமாகவே வளர்ந்தவன். இதனால் தான் பிற்காலத்தில் நமக்கெல்லாம் கீதா ரகசியம் கற்பித்தானோ!

தன் உயிரைக் காத்துக் கொள்ள உன்னைத் தேடிக் கொல்ல அலைந்த கம்சன் தூக்கமின்றி தவித்து வயிறு பூரா உன் மீதுள்ள கோபத்தால் உண்டான நெருப்போடு வெந்து அந்தக் கவலையிலேயே அவனைத்  துடிக்க வைத்தவனல்லவா நீ? என்று ஒரு கணத்தில் ஆண்டாள் கிருஷ்ணனைப்  பற்றி சிந்தித்து பெருமிதம் கொண்டாள். அப்படிப்பட்ட மகோன்னதமான பெருமாளே!, உன் பெருமையும், செழுமையும், வீரமும் கருணையும்-- எதைப்பற்றி பாடினாலும் சந்தோஷக் ககடலில் மூழ்க வைக்கிறதே!! எங்ளுக்கு அருள் செய்வாயாக”” என்று இந்த நன்னாளில் ஆண்டாள் அன்று வேண்டுகிறபோது அதே மார்கழி 25ம் நாளான இன்று ஸ்ரீ வில்லி புத்தூரில் ஆண்டாள்- கண்ணன் திருக்கோலம் ஊர்வலமாக வருஷா வருஷம் நடைபெறுகிறது.

பக்தர்களை மகிழ்விக்க தந்தத்தில் செய்யப்பட்ட பல்லக்கில் அந்த தெய்வங்கள் ஊர்வலம் வரும்போது, அதை மனதில் மட்டுமே பார்க்கக் கொடுத்து வைத்த நாம் அந்த ஊர்வலத்தில் ''மனதார'' கலந்துகொள்வோம். நம் வேண்டுதலையும் அவள் திருவடிகளில் வைத்து வழிபடுவோமாக.!! .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...