Monday, July 10, 2017

கண்ணம்மா  --  நம்  உறவு  இன்றா நேற்றா?
                                   J.K. SIVAN 
கிருஷ்ணன் ஆணல்ல.  பெண். 
சாதாரண பெண் என்று நினைக்கவேண்டாம். சொல்ல முடியாத அழகுடையவள்.  என் காதலி வேறு. அவளோ  ராஜ குடும்பம் நானோ  சாதாரணன். அவளை நான்  நேசித்தேன்.
காதலுக்கு  கண்ணில்லை என்பார்கள். அதற்கு  வயதும் இல்லை, குலம்  கோத்ரமும் இல்லை . அவளை நான் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக பொன்னே  போல் அல்லவா  சிறப்புற நடத்துவேன்.. 
அவளை நான் கூப்பிடுவதே   கண்ணம்மா  என்று தான்.


 ''ஹே  கண்ணம்மா, உன் அழகிய முகத்தை ஏனடி மூடிக்கொண்டிருக்கிறாய். திரையை  விலக்கு''  என்றேன். 

''மாட்டேன்''   வாய் பேசவில்லை. ஜாடையாக தலை அசைத்தாள்.
விடுவேனா 
நானே அவள்  முகத்திரை  துகிலை  விலக்கினேன.

''கண்ணம்மா  எதற்காக உன்  முகத்தை  மூடினாய்? புரியவில்லையே  சொல்?  நான்  உன்னை  இது வரை பார்க்காதவனா?. புதியவனா? என்ன வெட்கம்?  நான் அந்நியமா? பாசமாக  நேசமாக  உன்னிடம் இல்லாதவனா?.  நீவேறு  நான்  வேறு என்றா இருந்தோம்?  இரண்டு கண்களில்  ஒன்று இன்னொன்றை பார்த்து வெட்கப்படுமா சொல் பெண்ணே''
கேள்வி மேல் அடுக்கிக் கொண்டே போனேனே. அதில் வந்ததா?
....................

''சித்திரமே  சொல்லடி?''  
.............................

''இதோ பார்  கண்ணம்மா,  நான்  மற்றவர்களைப்  போல்  நைந்து போன,  பழைய  கதைகளை  தூசி தட்டி   சொல்பவனா?  என் மனதில் உதிக்கும்  எண்ண வெள்ளத்தை  அப்படியே  உன் மீது  பாயச் செய்பவன்  என்று  உனக்கு புரியாதா?   பாட்டும்  ஸ்ருதியும்  ஒன்று  கலந்தால்  எப்படி  இணை பிரியாது ஒன்றே சேர்ந்ததாக  செவியில் பாயுமோ  அதைப் போல் அல்லவோ  நீயும்  நானும்.  தனியாக  உன்னை  வேற்றுமனிதர் போல் நான் உபசரிக்க வேண்டுமா என்ன?

 ..........

  பதில் இல்லை.  அவள் கண்கள் புன்னகைத்தன. நான் தொடர்ந்தேன்.

''அதோ பார் மேலே.  பூரண  சந்திரன்  தனது கிரணங்களோடு  குளிர்ந்த  பால் வெண்மையை ஆகாயம் முழுதும்  ஒரேயடியாக  பரப்புகிறானே,  ஆகாயத்தை வணங்கி  புகழ்ந்து விட்டா  அதை செய்கிறான்?.   திகு திகு என  எரியும்  அக்னியில் விறகு ஒன்று சேரும்போது சொல்லிவிட்டா  உபசாரத்துக்காக  காத்திருக்கிறது.? பிறகு கொழுந்துவிட்டு எரிகிறது?

நான் என்ன செய்தேன் என்று  சொல்கிறேன் கேள் கண்ணம்மா. நம் காதலை  மனதில் நிரப்பிக்கொண்டு ஒரு ஜோசியனைப் போய் பார்த்தேன்.   என் கையை, ஜாதகத்தை பார்த்து.  கண்ணாடியை கழற்றி கீழே வைத்துவிட்டு என்னை  ஏற  இறங்க பார்த்தவன் பெருமூச்சு விட்டான்

''உனக்கும் அவளுக்கும் உள்ள  உறவு இன்று நேற்று வந்ததில்லை.  எத்தனையோ  ஜென்மாந்திரங்களாக ,  காலம் காலமாக  தொடர்ந்து வரும்  உறவு ஐயா  அது ''     அவன் சொல்லவில்லை. என்கை ரேகை  சொல்லியதாம். 

த்ரேதா யுகத்தில் நான் ராமன் என்றிருந்தால் நீ சீதையாம் கண்ணம்மா.  நட்பில்  நீ  அந்த புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணனாக இருந்தபோது உன் நண்பன் மனதிற்கினிய  அர்ஜுனன் நான் தான்.  ஒரு காலத்தில் நான்  மூர்க்கனாக இருந்தபோது, அது தான்  நான் கொடிய  ஹிரண்யனாக  இருந்தபோது  என்னை தவிர்க்க வந்தவன் நரசிங்கன் நீயே தானாம்.  இதோ பார்  நான்  தப்பு செய்தாலும் உன்னோடு சம்பந்தப் பட்டிருப்பேன்.  ஒரு காலத்தில்  நான் புத்தன்  என்று   ஞானம்  தேடி இரவும் பகலும் வாடிய  போது  எனக்குதவிய  யசோதரை  நீயே. .  இப்படி எல்லாம்  சரித்திரத்தில்  புராணத்தில்  நம்மிருவர்  உறவு பற்றி சொன்னால் அதில் இம்மியும்  தப்பில்லை. 

ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன்.

இந்த உறவு  உலகம் இருக்கும் வரை  நமக்குள் இருக்கும் கண்ணம்மா. எதற்கு வெட்கம் உனக்கு?

நான் சொன்னதை எப்படியோ மஹாகவி பாரதி ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னாலேயே  பல வருஷங்களுக்கு முன்பே  இதை அவருக்கே உரித்தான அழகிய பாடலாக எழுதிவிட்டார் என்ன ஆச்சர்யம் இது !

கண்ணம்மா -- என் காதலி

நாணிக் கண் புதைத்தல்
(நாதநாமக்கிரியை -- ஆதி தாளம். சிருங்கார ரசம்)

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -- இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ -- இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் -- நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? -- எனக்
கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா! 
1 கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? -- கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, -- இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? -- துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ? 

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர்சொல்லும் -- சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் -- தம்முள்
பன்னி உபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே -- விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் -- அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; -- அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; -- மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்துவந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, -- அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்; 

முன்னை மிகப்பழமை இரணியனாம் -- எந்தை
மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,
பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் -- ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; -- அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; -- இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...