Wednesday, July 26, 2017

பத்திரகிரியார் புலம்பல்

பத்திரகிரியார்  புலம்பல்:  J.K. SIVAN
                                           
                                    ராஜாவின் ஏக்கம்                                                

சந்நியாசியாக சுற்றிய ராஜாவுக்கு  பேச்சு வெறுத்து விட்டது. நிறைய வேதம் வேதாந்தமெல்லாம் படித்தாகிவிட்டது. நிறைய அது பற்றி கேட்டும் பேசியும் முடிந்து போய்விட்டது. வெறும் ஏட்டுச் சுரைக்காய்..  இனிமேல்  நான் எப்போது ஒரு தனி இடத்தில் உட்கார்ந்து நிஷ்டையில் ஆழ்ந்து மனதை ஒருமித்து ஆத்மானுபவம் பெறுவேன்?  என்று புலம்புகிறான்.

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே
ஏகாந்த மாக விருப்பதினி யெக்காலம்.
வாயினால் வேதவேதாந்தங்களை யெல்லாம் பேசுதலை அறவே யொழித்து ஏகாந்தமாக நிஷ்டை கூடி யிருப்பது எந்தக்காலம்?

ஒன்றா இரண்டா, எவ்வளவோ இடங்கள் சுற்றி அலைந்து விட்டேன். வாழ்க்கை தான் வீணாகியது.  என்னுள்ளே ஒரு ஆத்மா என்ற ஒருவன் இருப்பதை உணரவே இவ்வளவு வயதாகி விட்டதே. அதை உணர்ந்து மனதை , எண்ணத்தை அதில் நிறுத்தி அதிலேயே  விழித்து உறங்கி சுகம் பெறுவது எப்போது"?

''மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்.''

போனவாரம் சுப்பிரமணியனை பார்த்தேன். மார்க்கெட்டில்  மோடியை திட்டி கோபமாக பேசினான்.   GST யாலே வெண்டைக்காய் விலை ஏறியது தான் மிச்சம் என்று கையாட்டி  பேசினான்.  அவனை நாலு பேர் தூக்கிக்கொண்டு போய்  மூன்று நாளாகி விட்டதே.  என்ன வாழ்க்கை இது?  நிரந்தரமற்றது.   இந்த நிழலை நிஜம் என்று கோட்டை கட்ட முடியாவிட்டாலும் வீட்டை கட்ட முயற்சிக்கிறோம். ராஜ இதை தான் சொல்கிறான். இன்னிக்கி இருப்பவன் நாளை இல்லை என்று அறிஞர் சொன்னபோது மண்டையில் ஏறவில்லையே என்று ஏங்குகிறான். ரெண்டே வரி. அற்புதமாக இருக்கிறது.  "இன்றைக் கிருப்பாரை நாளைக் கிருப்ப ரென் றெண்ணவோ திடமில்லை" - தாயுமானார்.

''இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம்.''

இப்போது  கஞ்சா அபின் என்று வைத்துக்கொண்டிருப்பவனை பிடித்து உள்ளே போடுகிறார்கள். அந்த காலத்தில் எவன் கையிலும் அது இருந்தது. விழுங்கி போதையில் மயங்கி தெருவில் கிடப்பது வழக்கமாக இருந்தது. அதை சொல்கிறான் ராஜா. வெளி உலக வாழ்க்கை இன்பங்கள் எல்லாம் அப்போதைக்கு மட்டும் போதை தரும் லாகிரி வஸ்துக்கள்.நிரந்தர  ஆனந்தத்தை தருவது  கஞ்சா அல்ல, பஞ்சாமிர்தம். அது என்ன தெரியுமா ஆத்ம விசார இன்பம் என்கிறான். ரெண்டு வரி அற்புதம் இதோ.

கஞ்சா வபினியுடன் கள்ளுண்டு வாடாமற்
பஞ்சா வமிர்தம் பருகுவது மெக்காலம்.

இந்த வாழ்க்கை என்ன.  ரத்தம் எனும் ஜலம் .  தசை, சதை, எலும்பு போர்த்த உடல் சம்பந்தமானது. அதை சாஸ்வதம் என நம்பி நிழலைத்தேடி அலைகிறேன்.  இதனால் எத்தனை பிறவி, இறப்பு.  மீண்டும் மீண்டும். இதை விட்டு, மன சஞ்சலம் நீங்கி பகவானே உன்னை சரணாகதி அடைவது எப்போதப்பா சிவனே!

செஞ்சலத்தி னாற்றிரண்ட செனனமோட் சம்பெறவே
சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம்.

விரும்பத்தகாதவரை எல்லாம்  நெருங்கி  குட் மார்னிங் சொல்லி நமுட்டு சிரிப்பு.  எதற்கு?  '' இந்த ஒரு சாண்  வயிறு இல்லாட்டா எதுக்கு இந்த கலாட்டா'' என்ற பழைய சினிமா பாட்டில் தான் எத்தனை அர்த்தம் இருக்கிறது?  இதை எல்லாம் விட்டொழித்து அறியாமை நீங்கி  தென்னாடுடைய சிவனே உன்னை அடிபணிந்து இன்புறுவது எந்த காலத்தில் அப்பா?  என்கிறார் பத்திரகிரி ராஜா.  நிறையவே சொல்கிறார் இது போல்.

''கும்பிக் கிரைதேடிக் கொடுப்பா ரிடந்தோறும்
வெம்பி திரிகை விடுப்பதினி யெக்காலம்.''

இந்த தேகம் என்னுடையதா?  நானாக  மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்து காத்திருப்பது போல்  கேட்டு வாங்கியதா? தோசையாவது முறுகலாக இருக்கவேண்டும்  நெய்  ரோஸ்ட் ஆக இருக்கவேண்டும் என்று கேட்டு பெற முடிகிறது.  உடம்பு இப்படி இருக்கவேண்டும் என்று கேட்க தெரிந்ததா? முடிந்ததா? முடியுமா?  நீயாக கொடுத்தது. என் ஜீவன் என்னை விட்டு பிரியும் வரை டெம்பொரரி  சொந்தம்.   நீ இருக்கும் இந்த உடலை பெற்றதற்கு  ஒருகணமும் நன்றி சொல்ல கூயோட யோசிக்கவில்லையே.  உன்னை தோத்திரம் செய்ய வேண்டாமா. நாம் பொம்மை  நீ  ஆட்டுவிக்கும்  சூத்ர தாரி.   கயிறு எப்போது விடப்படுமோ. இந்த பொம்மை கீழே விழுவதற்குள் ஒரு தரமாவது உன்னை  போற்றி புகழ வேண்டாமா? எப்போது?  இந்த ஒன்பது வாசல் ஓட்டை வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் சிவா, உன் நாமத்தை  சூத்திரமாக  பஞ்சாக்ஷரமாக  ஓம் நமசிவாய என்று ஒருத்தரமாவது சொல்வேனா?  எப்போது?

ஆடுகின்ற சூத்திரந்தா னறுமளவு மேதிரிந்து
போடுகின்ற நாள்வருமுன் போற்றுவது மெக்காலம்.

நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம்.

பத்திரகிரி புலம்பலை படிக்க சுகமாக இருக்கிறது. மேலும் முடிந்தால் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...