Tuesday, September 29, 2020

SVKARAI AGRAHARAM

 சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை-8   J K  SIVAN    

                                                                 
             



              த்வாதசி அன்னதான சத்திரம்

கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு. எளிமையான  ஆனால்  சக்தி மிக்க  கர்ம பாப வினை தீர்க்கும் பரிஹாரம்  அன்னதானம் . ஜாதக தோஷங்கள் சாபங்கள் எல்லாம்  தீரும். நாம்  அன்றாடம்  அதிதிகளுக்கு  அன்னதானம் இடுவது முடியாதே.  சிறிது காகத்திற்காகவது, தெருவில் பசியால் வாடும்  ஏழைகள்,   நாய், பசு, பறவைகளுக்காவது சிறிது தினமும் அன்னமிடலாம். இதுவும் அன்னதானம் தான்.

அதுவும்  ஏகாதசி விரதம், உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று விரதமிருந்தவர்களுக்கும்   மற்றவருக்கும் அளிக்கும் அன்னதானம்  ஸ்ரேஷ்டமானது. 
 
ஒரே ஒரு துவாதசி திதியன்று  திருவண்ணாமலையில்  செய்யப்படும் மூன்று வேளை (காலை, மதியம், இரவு)அன்னதானமானது   புனித க்ஷேத்ரமான காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள்  என்று  நமது  வாழ்நாள் முழுவதும்   தினமும் அளித்த அன்னதான பலனைவிட அதிக  பலன் தரும் என்று ஐதீகம்.  

ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று  திருவண்ணாமலையில்  யாத்ரிகர்களுக்கு 
அன்னதானம் செய்து  தோஷங்கள் நீங்கப்பெறுகிறார்கள். 
  
சாம்பவர் வடகரை  அக்ரஹார  குடும்பங்கள்  இதெல்லாம் தெரிந்தவர்கள். மேலும்  காசிக்கு, அதாவது தென்காசிக்கு அருகே  இருப்பவர்கள் அல்லவா?  டபுள்  DOUBLE  நன்மை அவர்களுக்கு ஏற்பட  அக்ரஹாரத்தில் ஒரு    துவாதசி அன்னதான சத்திரம் கட்டி வைத்தார்கள்.  அநேக  யாத்ரிகர்கள் வந்து  தங்க, அவர்களுக்கு போஜனம் அளிக்க, கோவில்களில் விழாக்காலத்தில் அன்னதானம் அளிக்க,  தானதர்மங்கள் செய்ய இங்கே  வசதி செய்து வைத்தார்கள்.  அக்ரஹார வாசிகள்  பெரும்  பண்ணையார்கள்,  நிலச் சுவான்தார்கள், மிராசுகள் என்று பயிர்த் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக திகழ்ந்த காலம். ஆகவே விழாக்கள்  தான தர்மங்கள் சிறப்பாக நடந்தது.  காலப்போக்கில் உச்ச வரம்பு வந்து பயிர்த் தொழில் குறைந்து, அந்த  குடும்பங்கள் இடம் பெயர்ந்து விட்டதால் போதிய  வருமானம் இன்றி   பொது கார்யங்களை  கவனிப்பதற்கு ஆள்  இல்லாமல் போய்விட்டது.  சிதறிய  அக்ரஹாரகுடும்பங்கள் தேசத்தில்   வெவ்வேறு  மாநிலங்களுக்கோ, அல்லது  வெளிநாடுகளுக்கோ  சென்று விட்டதால் அக்ரஹாரம் பொலிவு குறைந்த புது முகம் பெற்றுவிட்டது

அந்த காலத்தில் புரட்டாசி திருவோணம், வைக்கத்து அஷ்டமி, தேரோட்டம், திருக்கல்யாணம் என்கிற விசேஷ நாட்களில்  சாம்பவர் வடகரை சத்திரத்தில்  ஊர் ஜனங்களுக்கு மதியம் சாப்பாடு இலவசமாக (ஊர் சத்தி) அளிப்பார்கள். கிராமத்தில் ஒருவர் இந்த செலவை ஏற்றுக்கொள்வர். இந்த செலவிற்காகவே சில பெரியோர் கள் சத்திரத்துக்கு விளைநிலம் எழுதி வைத்து அதன்மூலம் வரும் வருமானத்தில் இந்த முறைகள் தொடர்ந்து நடக்கும்படி ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.  இருநூறு முன்னூறு பேருக்கு சமையல் செய்து சாப்பாடு போடுவதற்கான சமையல் மற்றும்  பரிமாறும்  பாத்திரங்கள் சத்திரத்தில் உண்டு.  இதே மாதிரி வசதியா னவர்கள் வீடுகளிலும் பாத்திரங்கள் இருந்தன.  

சாம்பவர் வடகரை அக்ரஹாரத்தில் யார்  வீட்டிலாவது   கல்யாணம் முதலான விசேஷங்கள் வந்துவிட்டால் ஊர்க்  காரர்களை தவிர   அண்டையில் இருந்த  சுந்தரபாண்டியபுரம், இலத்தூர் பிராமணர்கள் எல்லோரையும் கல்யாணத்துக்கு வந்து  சாப்பிட   அழைப்பது வழக்கம்.    கிட்டத்தட்ட  எல்லோருமே ஒருவருக்கொரு வர்  உறவுக்காரர்களாகவே இருந்தார்கள்.  உறவு முறைகளும் தெரிந்திருந்தன. வில்வண்டி போட்டுகொண்டு ஆண்கள் பெண்கள் எல்லோரும் வருவார்கள். விசேஷத்தில் கலந்துகொண்டு காலை மதியம் சாயங்காலம் டிபன் காபி சாப்பிட்டுவிட்டு அவரவர்கள் ஊருக்கு திரும்பி போவார்கள்.  உள்ளூர்  சாம்பவர் வடகரை வாசிகளுக்கு கேட்கவே வேண்டாம்.  மூன்று வேளைகளிலும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு.   

ஒரு மாதம் முன்பே அரிசி உளுந்து முதலியவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் பல  வீடுகளுக்கு  கொடுத்து  விடுவார்கள். அதை அவர்கள் தோசை மாவாக அரைத்து திரும்ப கொண்டு வந்து தருவார்கள்.  மிக்சி  கிரைண்டர்   இல்லாத காலம். அதே மாதிரி அப்பளம் மாவு இடித்து எல்லோருடைய வீட்டிற்கும் கொடுத்து விடுவார்கள். அந்தந்த  வீட்டுக்காரர்கள் அப்பளம் இட்டு திரும்ப கொடுப்பார்கள். கல்யாண அப்பளம்  ஜையண்ட்  சைஸ்.  ஆனை  அடி  அப்பளம் என்பார்கள்.  அவ்வளவு  சிறந்த  நல்ல சமூக ஒற்றுமையாக இருந்தார்கள்.  இதேபோல் சமையலுக்கான காய்கறிகள்  நறுக்குவதை   அக்ரஹாரத்து மாமிகள்  எல்லாம் ஒன்று சேர்த்து கல்யாண பந்தலில் வைத்து கல்யாணத்திற்கு  முதல் நாள்  இரவு  தயார் செய்த்துவிடுவார்கள்.  சமையல் செய்வதற்கு மட்டும்  இரண்டு மூன்று சமையற்காரர்கள் வருவார்கள். பந்தியில் பரிமாறுவதை  கிராமத்து இளைஞர்கள் கவனித்துக் கொள்வார்கள்.  

துவாதசி அன்னதான சத்திரத்தில் 10 அடி  விட்டம் கொண்ட பெரிய கிணறு  இருந்தது.  குடிக்க குளிக்க கைகால் கழுவ,  தண்ணீர் பஞ்சமில்லை.    இந்த சத்திரம்  தற்போது சிதிலம் அடைந்து   SV கரை டிரஸ்ட் முயற்சியால், வெளியூர் வாழ்  மஹாஜனங்கள் கைங்கரியத்தினால்  கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  ஒரு காலத்தில் இந்த  சத்திரத்தை கிட்டு ஐயர் என்பவர் அந்த சத்திரத்திலேயே  தங்கி  கவனித்துக் கொண்டார்.

 சத்திரத்தின் வட பகுதியில் ராமகிருஷ்ண ஐயர் என்பவர் ( அவரை  கடை  கிருஷ்ணய்யர்  என்று அடையாள பெயரில்  அழைத்தார்கள்.)   அவர் மகன்   என்னோடு  சில தினங்கள் முன்  என்னுடைய கட்டுரைகளை  தொடர்பு கொண்டார். ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். அக்ரஹாரத்தில் இந்த ஒரு கடைதான் இருந்தது.  . ஹனுமான் நதி  ஆற்றின் மறுபுறம் அக்கரையில் விவித கோஆபரேடிவ் சொசைட்டி என்ற கடை இருந்தது.  மளிகை சாமான்கள் இந்த இரு கடைகளிலும் தான் கிடைக்கும்.

கிட்டு ஐயருக்கு பிறகு கோவிந்த ஐயர், என்ற  சம்ஸ்கிரத‌ பண்டிதர், சத்திரத்தை நிர்வகித்ததோடு, மாணவர்களுக்கு ஹிந்தி  சம்ஸ்கிரதம் பாடமும் நடத்தி வந்தார்.  மேலும் அவ்வப்போது ஊரில் நடக்கும் வைதீக விசேஷங்களிலும் பங்கேற்று ஜப பாடமும் சொல்லிக்கொடுத்து  வந்தார்.  இவருக்கு பிற்பாடு  ''கிச்சன்''  எனும் கிருஷ்ண ஐயர்  சத்திரத்தை கவனித்து வந்தார்.  இவர் உறவினர் ஒரு பெண்மணியும்  சில தினங்கள் முன்பு என்னோடு தொடர்பு  கொண்டு வாழ்த்தினார். 

சத்திரத்தில், ஊர் ஊராய் போய்  கொண்டிருக்கும் யாத்ரிகர்களுக்கு   சாம்பவர் வடகரைக்கு வந்தால் இளைப்பாறும் வசதியுடன் ஒரு வேளை சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்.  அதற்கான அனுமதி  சீட்டு தரப்படும்.  சத்திரத்திற்கு கிராம பொது  மஹாஜனங்கள் சிலர் மானியமாக நிறைய விளை நிலங்கள் எழுதி கொடுத்திருந்தார்கள். அந்நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்   சத்திர பராமரிப்புக்கு  உதவியது. கிராமத் தாரால்  நியமிக்கப்பட்ட   ஒரிருவர் நிர்வகித்தார்கள்.  சாப்பாட்டு சீட்டு,   சத்திரம் பராமரிப்பு ஆகிய  பொறுப்பை வகித்தவருக்கு  ஒரு  சாப்பாட்டு  சீட்டுக்கு ஒரு படி அரிசி அல்லது அதற்கு ஏற்றபடி நெல்  ஊதியமாக கொடுக்கப்பட்டது.

இந்த  அன்னதான சாத்திரம்  நல்ல விஸ்தாரமாக  இருப்பதை நேரில் பார்த்தேன். அதை புதுப்பித்து அதன் பெருமை குன்றாமல் புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும். ஒருகாலத்தில் ஊருக்கு  வந்த அனைத்து யாத்ரிகளும் தங்கி உண்டு வசித்த இடம். விழாக்காலங்களில் வெளியூரிலிருந்து பக்தர்கள் வந்து தங்குவார்கள். த்வாதசி  அன்னதான சத்திர புனருத்தாரண வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  டிரஸ்ட் அங்கத்தினர்கள், மற்றும் சாம்பவர் வடகரை பிராமண சமுதாயத்தினர்  நிதி உதவி  கை கொடுத்து உதவினார்கள்.   சத்திரம் இப்போது தான்  கட்டியது போல் புனருத்தாரணம்  ஆகிவிட்டது. எல்லாம் இந்த ஊர் வாசிகளின் அபிமானத்தால் என்று தாராளமாக சொல்லலாம். 

 அக்ரஹாரத்தில் இன்னும்  நிறைய வேலைகள் பாக்கி இருக்கிறது.  அவை நிறைவேற  சாம்பவர் வடகரை டிரஸ்ட்  ஸ்ரீ  எஸ். ஆர்.  கிருஷ்ணனை  போனில்  9380196674  தொடர்பு கொண்டு  பேசி  உதவ ஊர்  சம்பந்தப்பட்ட அன்பர்கள் முன்வரலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...