Tuesday, September 1, 2020

MAHALAYA PAKSHAM

 


            நாளை  (2.9.230) முதல்   அமாவாசை வரை... J K  SIVAN  

புரட்டாசி  பௌர்ணமியிலிருந்து  அமாவாசை வரை  மஹாலய  பித்ரு பக்ஷம்.   மறைந்த பெற்றோர்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய  பித்ருக்கடனை நிறைவேற்றும் காலம்.  ஸ்ரத்தையோடு  செய்யவேண்டிய ஸ்ராத்த காலம்.


தர்ப்பணம் என்பது எள்ளும்  நீரும் மந்திரங்களோடு சொல்லி   மூன்று தலைமுறை மூதாதையருக்கு அளிப்பது. ரொம்ப எளிய கடமை. தான தர்மம் செய்வது பலனையளிக்கும்.  இந்த பதினைந்து நாட்கள் செய்யும் பித்ருக்கடன் கயாவுக்கு சென்று செய்த பலன் அளிக்கும்.  நாம் அர்ப்பணிக்கும்  எள் , ஜலம் , பிண்டம் சூரியஒளி வழியாக  பித்ருக்களை சென்றடைந்து அவர்கள் பசியை தீர்க்கும்.  அவர்களால் வேறு எதையும் சாப்பிட முடியாது.   பித்ருக்கடன் செய்யாதிருப்பது அவர்களை பட்டினி போடுவது. அதனால் அவர்கள் சாபம் நம்மை பாதிக்கும்.  

''என்னவோ சார், மாத்தி மாத்தி எனக்கு மனக்கஷ்டம், பணக்கஷ்டம். மனசிலே நிம்மதி ஒருநாளும் இல்லை.  எவ்வளவு நானும் ட்ரை பண்றேன்.மீளமுடியவில்லை''

'' ஓஹோ,   எவ்வளவோ வசதியோடு இருக்கிறீர். ஏன் இந்த கஷ்டம் என்றால் ஒருவேளை பித்ரு சாபம் ஏதாவது இருக்குமோ என்று தோன்றுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் பண்ணிவிட்டு வாருங்கள் சரியாக போய்விடும்''
இந்த சம்பாஷணை நிறைய கேட்டிருப்பீர்கள்.  அது சம்பந்தமானது இந்த கட்டுரை. 
பித்ருக்களின் ஆசிர்வாதத்தோடு இருக்கும் குடும்பத்தில்  சுபிக்ஷம் ஆரோக்கியம், மன நிம்மதி எல்லாம் நிறைய இருக்கும்.

பித்ரு தோஷம்  என்பது முற்பிறவிகளில் செய்த  நமது பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும்  கலந்து ஏற்படுகிறது. பித்ருக்கள் என்பது அப்பா வழி மட்டுமல்ல  அம்மா வழி மூன்று தலைமுறையும் சேர்த்து தான். நம்முடன் வாழ்ந்து மறைந்த அவர்கள் நமது நலன் கருதுபவர்கள். அவர்களை பட்டினி போடுவது தப்பு இல்லையா?  ''அட  துரோகி''  என்று  சாபமிடுவார்கள்.

முறையாக  பித்ரு கடன் நிறைவேற்றினால்  ஜாதகத்தில் உள்ள தோஷங்கள்  காணாமல் போகும்.  பித்ரு கடன் செய்யாமல் மற்ற பூஜைகள் செய்வது பலனளிக்காது  என்பது சித்தர்கள் வாக்கு. முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும்  இருந்து கொண்டே இருக்கும்.  இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் செய்வதற்கு  இந்த மஹாலய  அமாவாசை தர்ப்பணம் விசேஷ பரிகாரம்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.   லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக  சொல்வார்கள். 

அமாவாசை  அன்று , ஏன்  தினமுமே  முடிந்தால்  அதி விசேஷம்,   பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி வெல்லம், எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளான்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை  செய்து அன்னதானம் செய்யவேண்டும்.
 
பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில்  நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்லலாம். 
 
அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால்  அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாலய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும்  விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு  தோஷம் நீங்கும்.
 
மேற்குறிப்பிட்டுள்ள நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம்  நிவர்த்தி ஆகும்.
''மாதா பிதா செய்தது மக்கள் தலைமேலே''    என்பார்கள். நாம் செய்த பாவங்கள் நமது வாரிசுகளை தீண்டும்.  நமது பெற்றோர்  செய்தது நம்மை வாட்டும். 

அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.

ஒரு வரி கதை சொல்கிறேன்.  மஹாபாரத யுத்ததில் கர்ணன் இறந்தபிறகு ஸ்வர்கம் செல்கிறான். அங்கே அவனுக்கு ஆபரணங்களும் பொன்னும் பொருளும் தான் உண்பதற்கு கொடுகிறார்கள்.  ஐயோ,  என்ன இது என்கிறான்? ஆமாம் கர்ணா, நீ ஒரு தடவை கூட உன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவில்லையே என்று பதில் வந்தபோது, எனக்கு அவர்கள் யாரென்றே தெரியாதே எப்படி தர்ப்பணம் செய்வேன்? இப்போது வேண்டுமானால் சொல்லுங்கள் உடனே செயகிறேன் என்கிறான். போ பூமிக்கு என்று அனுப்புகிறார்கள். மகாளய பக்ஷத்தில் பதினைந்து நாட்களும்   நித்ய தர்ப்பணம் செய்துவிட்டு விண்ணுலகம் செல்கிறான்.

 விஞ்ஞானிகள்  மனித வர்க்கம் பூமியில்  20 மில்லியன் வருஷங்களாக இருக்கிறது  என்பதால் நமது முன்னோர் எத்தனை பேர் என்று கணக்கிடவே முடியாது.  அவர்கள் அத்தனை பேருக்கும், தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்கும் தர்ப்பண மந்திரத்தில் இடம் உண்டு.  மஹாலய  தர்ப்பண மந்திரம்   

https://youtu.be/dY6nQG9Fbzo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...