Friday, September 25, 2020

sv karai agraharam

 


    சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை -1.     


J K  SIVAN                                            


ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட்  ஆரம்பித்து  கிருஷ்ணன் கதைகள்  எழுத ஆரம்பித்ததிலிருந்து கிருஷ்ணன் சும்மா இருக்காமல்  எத்தனையோ கிருஷ்ணர்களை எனக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் மூலம்  தனது கதைகளை புத்தகமாக்கிக் கொண்டான் என்று அடிக்கடி பேசி இருக்கிறேன். எழுதி இருக்கிறேன். இது கட்டுக்கதையோ கற்பனையோ இல்லை.  உண்மையாக நடந்த அதிசயம்.  அப்படி அறிமுகமான ஒரு கிருஷ்ணன் ஸ்ரீ   எஸ். ஆர். கிருஷ்ணன்.  வெளிநாடு ஒன்றின்  இந்திய  தூதர். தொழிலதிபர்.  இதெல்லாம்  விட ஒரு சிறந்த  கிருஷ்ண பக்தர்.  திருநெல்வேலி ஜில்லாவில், தென்காசியை அடுத்த  சாம்பவர் வடகரை எனும் கிராமத்தை பூர்வீகமாக கொண்டு அங்கே  நற்பணிகளை செய்து வருபவர். அந்த ஊர்  பற்றி அவர்  சொல்லும்போது அந்த பழைய  அக்ரஹாரத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசையை என் மனதில் தூண்டிவிட்டார்.   அதே ஊரை சேர்ந்த  இன்னொரு அன்பர்  ஸ்ரீ  வேத நாராயணன். அந்த கிராம, அக்ராஹார,  பெருமாளின் பெயர் கொண்டவர்.  சென்னையில் வேளச்சேரி  பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட கலைஞர்.  என்னை அந்த ஊருக்கு அழைத்து சென்றார். மூன்று நாட்கள் அங்கு இருந்த போது  அநேக  விஷயங்களை  ஆர்வத்தோடு அறிந்து  ஆச்சர்யப்பட்டேன்.  அவற்றில் சிலவற்றை கூறுகிறேன்.

கிராமம்  என்றாலே  முதலில்   மனதில் தோன்றும் காட்சிகள் என்ன?

ஆடு, மாடு,  பழைய, பெரிய  மாளிகை போன்ற , நீட்டு வாக்கில் ஒரு  தெருவிலிருந்து மறு  தெருவரை செல்லும்  ஒட்டு,  மச்சு, வீடுகள்,  வாசலில் மறக்காமல்   ஒன்று  அல்லது ரெண்டு   திண்ணை. அது  தான் ரிசெப்ஷன் ஹால்.  அப்போதெல்லாம் மண் தெருக்கள் தான் எங்கும்.  எதிரும் புதிருமாக  வீடுகள்.  வீட்டின் பின் பக்கம் கொல்லையை ஒட்டி  வாய்க்கால்.    ஒவ்வொரு தெருவிலும்  கோடியில் ஒரு கோவில் உண்டு.  பெருமாள் கோவில் சிவன் கோயில் கட்டாயம்   எதிரும் புதிருமாக  உண்டு.   அநேகமாக  பிள்ளையார்  கோவில் எல்லா  ஊர்களிலும்  காணப்பப்படுவது.

தென்காசி ஜில்லாவில்   சாம்பவர்  வடகரை அக்ரஹாரம்  என்கிற சிறு  அழகான  கிராமத்தைபற்றி கேள்விப்பட்டதுண்டா?   அந்த ஊர்க்காரர்  ஸ்ரீ  எஸ். ஆர்.  கிருஷ்ணன் அவர் ஊருக்கு அழைத்தார்.   அவரது  உறவினர், நண்பர்  வேதநாராணன்  ஒரு  அற்புதமான மனிதர்.   அவர் தான் என்னை நங்கநல்லூருக்கு வந்து அழைத்துச்  சென்றவர்.  

ஸ்ரீ  S .R கிருஷ்ணன்  அவர்  தாத்தா பெயர்   ரெண்டுமே ஒன்று தான்.  தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் வழக்கம்  வெகு காலமாக இருந்து இப்போது தானே  மாறி  வருகிறது.   இந்த  தாத்தாவின்  பெயர்  கிருஷ்ணனுக்கு பெரிதும் உதவியது.  வீட்டிற்கு  ஒரு முறை  மின் இணைப்பு  பெற  அந்த பரம்பரை பழைய  வீடு இன்னும் தாத்தா பெயரில் இருப்பதால்  அவரிடம் இருந்து  பெயர் மாற்றத்துக்கு கடிதம் வாங்கி வா என்று   மின் இலாகா கேட்டபோது.  பெயர் மாற்றம் தேவையில்லை.  அதே பெயரில் இருந்துவிட்டு போகட்டும் என்று சொல்லிவிட்டார்  கிருஷ்ணன்.  ரெண்டு பேர் பெயரும் ஒன்றே என்பதால் எந்த சிக்கலும் உருவாகவில்லை.  இல்லாவிட்டால் நமது கிருஷ்ணனை நிறைய  அலைய விட்டிருப்பார்கள்.

இந்த    S. R. கிருஷ்ணன், தாத்தா கட்டின  பெரிய வீட்டை புணருத்தாரணம் செய்து அதன் அழகுக்கு களங்கமில்லாமல் வசதிகள் செய்திருக்கிறார்.    அந்த வீட்டிற்கு வாசலில் இருந்து கொல்லைப்புறம் போக  சின்ன  சைக்கிள் தேவைப்படும் என்று எனக்கு தோன்றியது.  சமையல் அறையிலிருந்து சூடாக காப்பி  போட்டு வாசல் திண்ணையில் கொண்டு வந்து கொடுக்கும்போது சில்லென்று  நேற்று இரவு ஐஸ் பெட்டியில் வைத்த காப்பி போல்  ஆறி விடும். அவ்வளவு தூரம்.

தாத்தா S.R  கிருஷ்ணய்யர் கட்டிய அந்த மாளிகை போன்ற வீட்டில்  எத்தனை அறைகள் என்று என்னால் எண்ண முடியவில்லை மரப்பலகணி வழியாக     நடந்து மேலே சொல்ல சுகமாக  உற்சாகமாக இருந்தது. சூரிய வெளிச்சம் இயற்கையாகவே எங்கும்  வீடு முழுக்க  பிரகாசமாக இருக்க  வித வித நிறமான கண்ணாடிகள் பொருத்தி இருந்ததால்   வீட்டின் அறைகள் எல்லாமே  வண்ண ஒளிமயமாக விசாலமாக இருக்கிறது. எந்த அறையிலும்  இருள் சூழவில்லை. 

அந்த வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் சாம்பவர் வடகரை  அக்ரஹார  ஊரே மட்டும் அல்ல அடுத்த ஊரும் தெரிகிறது.  கதவுகள், உத்தரங்கள்,  படிகள், நெற்களஞ்சியம், மேஜைகள், நாற்காலிகள், பெட்டிகள்  எல்லாமே மலேயா தேக்கு மரத்தாலானவை.. ஒவ்வொரு வீட்டிலும்  நிறைய  பசுக்கள் கொட்டகை இருந்தது.. ஒருகாலத்தில் பசுக்கள் நிறைந்திருந்த  பெரிய  கட்டு வீடுகள். இப்போது கொட்டில் மட்டும் இருக்கிறது. கண்டா முண்டான் சாமான்கள் நிரம்பி இருக்கிறது.  அப்போதெல்லாம்   இந்த மாளிகை வீடு  ஜே  ஜே  என்று அந்த வீடு லக்ஷ்மிகரமாக  சுறுசுறுப்புடன் பல பணியாட்களோடு நிறைந்திருந்ததை    மனக்கண்ணால் உணர்ந்தேன்.

மூன்று நாட்கள்  அந்த கிராமத்தில் வசித்த எனக்கு  அந்த  ஊரின் சரித்திரத்தை  சில  உள்ளூர்  பெரியவர்கள்  மூலம் அறிய வாய்ப்பு கிடைத்தது.  அதைத்  தொகுத்து தான் இந்த சிறிய  புத்தகம் உங்கள் கையில் தவழ்கிறது. இந்த புத்தகத்தின்  நோக்கமே  இந்த  ஊரைச் சேர்ந்த   இந்த தலை முறையினருக்கும்,   இனி வரும்   வாரிசுகளுக்கும் தங்களது ஊரை பற்றி அதில் வசித்த  மூதாதையர், முன்னோர்  பற்றி அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கவே.

சாம்பவர் வடகரை  அக்ராஹார கட்டுரை நான் எழுதபல விஷயங்கள் நான் பலரிடம் கேட்டு அறிந்தவை. நான் அந்த ஊர்க்காரன்  இல்லையே . சில  இடங்களைபற்றி கேட்டபோது அந்த இடங்களை நேரில்   சுற்றிப்பார்த்து,  நேரில் கண்டு எழுதியுள்ளேன்.   தற்போதைய  தலைமுறையில்  பலர்  பலகாலம்  வெளியூர்களிலும்  வெளிநாடுகளிலும் இருப்பதால்  அவர்களது பெருமைக்குரிய  சொந்த ஊர்,   கிராமம்,   சாம்பவர் வடகரை அக்ராஹாரத்தைப்  பற்றி  அவர்களுக்கு சொல்ல  யாரும் இல்லாததால்,  அவர்களுக்கு   அவர்கள் ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு   இது ஒரு  வாய்ப்பு.  குறிப்பிடப்படாமல் நமது பாரம்பரிய விஷயங்கள் எவ்வளவோ ஏற்கனவே  மறைந்துவிட்டன.  தெரிந்த ஒரு சிலரும்  சொல்ல  மறந்துவிட்டார்களோ , சொல்லாமல் இறந்து விட்டார்களோ  தெரியவில்லை.  பொதுவாக இது நமக்கு ஒரு சாபக்கேடு.

to be continued 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...