Thursday, September 24, 2020

BADE SAHIB JEEVA SAMADHI




 


படே சாஹிப்     -  J K SIVAN                                     


                            சாதி மதம் கடந்த  மஹான் 


ஒரு காலத்தில் பிரெஞ்சு பிரதேசமாக  இருந்த  பாண்டிச்சேரி தமிழகத்தின் அருகே உள்ளது. அதற்கு விழுப்புரத்தில் இருந்து போகும் வழியில் ஒரு  ஊர் வில்லியனூர், அதன் வழியே போய்  கண்டமங்கலம் எனும் ஒரு ஊரில்  ரயில்வே கேட் ஒன்று நம்மை நிறுத்தும். கண்டமங்கலம் ரயில்வே கேட்  அதை ஒட்டிய   ஒரு பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால்  சின்னபாபு சமுத்திரம் என்கிற  ஒரு குட்டி  கிராமம் வரும்.  இங்கே ஒரு மஹானுக்கு  ஜீவ சமாதி உள்ளது. அவர் பெயர்  படே சாஹிப்.  யாருய்யா  இந்த முஸ்லீம் மஹான்? அவருக்கு எதுக்கு ஜீவ சமாதி?  அது தான் இன்றைய விஷயம்.
 
மஹான்கள் எல்லா சமூகத்திலும் உண்டு.   படே சாஹிப் பிறப்பால்  இஸ்லாமியர்.  இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்த இவர்  ஜாதி, மதம், இனம் - இதற்கெல்லாம் அப்பால் பட்டு வாழ்ந்தவர்.  ''படே'' என்றால் உயர்ந்த என்று அர்த்தம். அவர்  உத்தமர் என்பதால் இந்த  'படே ''  பெயர்.  சாஹேப் என்றால் மரியாதைக்குரியவர். அவர் ஒரு  மௌன சாமியார்.   உண்மையான சாமியார்கள் பேசமாட்டார்கள். நிறைய  வாய் கிழிய பேசுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.   மௌனம்  த்யானம் என்பதிலேயே   படே சாஹிப்  வாழ்க்கை  தொடர்ந்தது.    அவர் ஒரு  சித்த புருஷர் .

 அவர்  அருளைப் பெற்றவர்கள் அநேக  அதிசயங்களைச்  சொல்வார்கள். அவர் சொல்லமாட்டார். அவரது ஆசீர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர்.  அவர் தொட்டாலே போதும்  தீராத வியாதிகள் தீர்ந்தது.  கஷ்டம் தொலைந்தது.  வறுமை விலகி  சுபிக்ஷம் பெற்றவர் எத்தனையோ பேர். 

காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்த  இவரை ஒரு முறை ஒரு விஷ

முடைய  கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். ஐயோ  இனி படே சாஹிப் எப்படி பெறுவோம் என்று பக்தர்கள் கதறினார்கள்.   ஆனால்  அவர் எதுவும் கவலையே படவில்லை.   அந்த பாம்பே தானாக அவரை நெருங்கி   வர உடலிலிருந்து விஷத்தை உறிஞ்சிக்கொண்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து  உயிர் விட்டது.  அதைத் தடவி கொடுத்து  மோக்ஷம் பெற வைத்தார்  இந்த மஹான்.

திருடர்கள் சிலர்  அவரைச்  சந்தித்த  பின்   தமது  பரம்பரைத்   திருட்டுத்தொழிலுக்கு முழுக்கு போட்டு திருந்தினார்கள்.  அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான். இவரால் திருடுவதையே குலத்தொழிலாக 

மனிதர்கள் மட்டும் அல்ல.   படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்தன  என்பார்கள்.  மகான் தன்வந்திரி போல, ரிஷிகள் போல   தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.  இங்கு  ஜாதி மத வித்யாசம் எதுவும் இல்லை.   வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்புவார்.   பாக்கியசாலிகள் சிலர்  அவரிடம்  உள்ள கொட்டாங்கச்சியில் இருந்து  தீர்த்தம் பெற்றவர்கள். 

வியாதி,  நோயின் வீரியம் அதிகம் இருப்பதால்  பாதிக்கப்பட்டு  வாடி வருந்தி அவரிடம் வந்தால்  ஜாடையாக  அருகில் அழைத்து,  தலையைத் தடவி,  அங்குள்ள ஒரு  கொன்றை  மரத்தைச் சுட்டிக்காட்டி ,  அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார். என்ன மாயமோ.  அதற்கப்புறம்  வியாதி மறைந்து விடும். 

 படே சாஹிப்பிடம் வந்தாலே, நோய்கள் மறைகின்றன என்ற நம்பிக்கைச் சேதி நாலாபக்கமும் பரவி  அவர் வாழ்ந்த போது  கூட்டம்  கூட்டமாக மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து  ஆசி பெற்றார்கள். ஒரு பைசா காசு கேட்டதில்லை, வாங்கியதும் இல்லை. 

யார் இந்த படே சாஹிப், எங்கே பிறந்தார், பெற்றோர் யார்?, என்ற விவரங்கள் ரஹஸ்யமாக இருக்கின்றன. அவர் ஜீவ சமாதியை  பக்தர்கள் இன்றும்  தலை முறை  தலைமுறையாக  வழிபடுவதால்,  அவர் ஜீவசமாதி அடைந்த நாள்  1868ம் வருடம் பிப்ரவரி  2ம் தேதி  செவ்வாய் அன்று   என்று  மட்டும் அறிகிறோம். செவ்வாய்அன்று அநேகர்  கூட்டமாக வருகிறார்கள்.   வியாழன் அன்று குரு வாரம், விடுமுறை ஞாயிற்றுக்
கிழமைகளிலும் பக்தர்கள் அம்முகிறார்கள். 

நெமிலி  பாலா  திரிபுர சுந்தரி  ஆலயத்தில்  உள்ளது  போல் இந்த படே சாஹிப் அதிஷ்டானத்திலும்  பிஸ்கெட், சாக்லெட் ஆகியவை  பிரசாதம்.  பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் தரும் பிஸ்கெட் சாக்லெட்டுகளை  அதிஷ்டானத்தில் வைத்து  நைவேத்யம் பண்ணிவிட்டு  பக்தர்களிடம் தருகிறார். வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும்  விநியோகமாகிறது.   அது சர்வ ரோக நிவாரணி ஆகிறது.  படே சாஹிப்  பிணி தீர்க்கும் மருத்துவர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...