Thursday, December 15, 2022

pesum deivam

 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J.K. SIVAN


பெத்தச்ச  தேவுடு 

நான் படித்த ஒரு வித்யாசமான  சம்பவம் இது.  

முற்றுமுணர்ந்த ஞானிகள், மஹான்கள்  நம்மைப் போல் அறைகுடமாக  தளும்புவதில்லை. இருக்கும் இடமே தெரியாமல்  எந்த பந்தாவும் பண்ணுவதில்லை.  எங்கே  போகிறார்கள் எப்போது என்றே  தெரியாமல் உளவுபவர்கள்.

இப்போதுள்ள  சில  குருமார்கள் எங்காவது போக  வேண்டுமானால் முன்னறிவிப்புகள்  செய்த்துவிட்டு  மற்றவர்கள் சிலரை   முன்னாலேயே சிலர் போய் அந்த இடத்தில் அவர்கள்  தங்க வசதி, சாப்பாடு, தூக்கம், குளிர் சாதனங்கள், தனி அடுப்பு, குளிக்க வசதி, நிறைய பேர் வருவார்களா, அவர்களுக்கு தரிசனம் கொடுக்க சரியான இடம், ''வருகிறார் வருகிறார்'' என்று விளம்பரம், நோட்டிஸ் கள் பத்திரிகை செயதிகள் மூலம் கூட்டம் சேர்ப்பது என்பதெல்லாம்  அறிகிறோம்.

மஹா பெரியவா, சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமணர் போன்றவர்கள் எந்த விளம்பரமும் தேவை அற்றவர்கள். மஹா பெரியவா நிறைய இடங்களுக்கு அறிவிப்பு இன்றியே சென்றவர். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் எங்கு எப்போது இருப்பார், போகப்போகிறார் என்று தெரியும்.

இப்படித்தான் ஒரு தரம் ஆந்த்ராவில் மஹா பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். கடும் கோடை வெயில் காலம். அப்போது , பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ஆடம்பரமோ, பந்தாவோ துளியும் கிடையாது.

கிராமங்களில் உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட யாருக்கும் அறிந்திருக்க மாட்டார்கள். தெரிந்து கொள்ள முடியாது. எங்கோ எப்படியோ யாரோ ஒருவர் அறிந்து விட்டார் என்றால் அதுவே போதும் . காட்டுத்தீ போல் செயதி பரவி ஊர்மக்கள் திறந்துவிடுவார்கள். அது அவர் மேல் உண்டான பக்தி, பாசம், தனி மரியாதையினால்  பக்தர்கள் கூட்டம் சேர்வது.

யாரும் முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ, மாட்டுக் கொட்டகையோ, சிவன் கோவிலோ, திடீரென்று எப்போது எந்த நேரத்தில் “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போடுவார் என்றே அவருடன் இருப்பவர்களுக்கு தெரியாது. அப்படிச் சொல்லிவிட்டால் அந்த இடமே புண்ணிய க்ஷேத்ரம் ஆகிவிடும். அங்கு ஏதோ யாரும் அறியாத ஒரு விசேஷம் கட்டாயம் இருக்கும். அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரஹஸ்யம்.

 மஹா பெரியவா ஒரு ஆந்திர கிராமத்தின் வழியாக செல்லும்போது ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. ''இங்கே தங்குவோமே . சித்த நாழி  ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிப்போம் '' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

யாரோ ஒரு சிலர் அந்த பக்கமாக வந்தவர்கள் ''யாரோ பெரியவர் ஒரு சந்ந்யாஸி சிவன் கோவிலுக்கு  வந்திருக்கிறார். கூட சிலர் இருக்கிறார்கள். அவரைப் பார்த்தாலே   சொல்லமுடியாதபடி ஏதோ மனதில் சந்தோஷம் உண்டாகிறது'' என்று ஊரில் போய் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு தான். கிராமத்து ஜனங்கள் திமு திமுவென சேர்ந்து விட்டார்கள்.  வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. 

உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

அந்த கோவிலின்  வழக்கமான அர்ச்சகர்  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு  சிறிய  உதவியாளனை  அனுப்பி ஆவான் உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலைப் பூட்டிக் கொண்டு போயே போய் விட்டான்! அவனுக்கு  
 மஹா பெரியவாளை தெரியாது.  அது தவிர  அவனுக்கு அன்று  யார் வீட்டுக்கோ  உபாத்யாயம் பண்ணுவதில் கவனம். தனது வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தான் .  

பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

''பெரியவர் சந்நியாசி இங்கே இருப்பதாக சொன்னார்களே? இந்த படைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …கோவிலானால் வெளியே பூட்டப்பட்டிருக்கிறதே. பூட்டு தொங்குகிறதே.
பாவம், பல விதமாக ஏமாற்றம், எதிர்பார்ப்பு நிறைவேறாத வருத்தம். தங்களுக்குள் இவ்வாறு எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

பூட்டப்பட்ட கோவில் உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், பரம சிவன்,மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்களும் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு பல கி.மீ தூரம் நடந்து வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

அவருக்கே உரித்தான கை சொடுக்கு, சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்.

” ஏண்டா! வெளில என்ன சத்தம். பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா ,பெரியவா. குருக்கள் நாம இருக்கிறது தெரியாம வெளில கோவில் கதவு சாத்தி பூட்டிண்டு போயிருக்கார் போல இருக்கு பெரியவா.

“அடடா…இப்படி பண்ணிட்டாரே அவர்..ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!…சரி இந்தா! குமரேசா! நீ என்ன பண்றே, “டக்”குனு அந்த கல்லு மேலே ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
குமரேசன் அப்படியே செய்தான்.

''டாங் டாங்'' என்று பழங்கால பெரிய வெண்கல மணி ஓசை இட்டது. வெளியே எங்கும் எதிரொலித்தது.

திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் அத்தனை பேரும் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் !

எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே! எல்லோரும் பக்தர்கள் தானே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...