Thursday, December 1, 2022

KUNTHI PRAYER

 குந்தியின்  பிரார்த்தனை  - 4.    நங்கநல்லூர்  J K  SIVAN


ஸ்ரீமத் பாகவதம்  ஸ்காந்தம்   1  அத்யாயம் 8  ஸ்லோகங்கள்  34-36

भारावतारणायान्ये भुवो नाव इवोदधौ । सीदन्त्या भूरिभारेण जातो ह्यात्मभुवार्थित: ॥१९॥ 8.34
Bharava thaaranayanye bhuvo naava ivodhadhou, Seedhanthyaa bhoori bharena jatho hyatha bhuvathithaa.17

''கிருஷ்ணா, யார்  யாரோ சொல்லி நான் கேட்டேனே.  நீ  ப்ரம்மாவின்  பிரார்த்தனையால் இந்த பூமியில் அவதரித்தவனாம்.  எப்படி  நீர் பரப்பில் செல்லும் படகு  எல்லா சுமைகளையும் சுமந்து  அக்கரைக்கு கொண்டு செல்கிறதோ  அப்படி  நீ  இந்த உலக வாழ்வில் என் போன்றோர்களுக்கு எல்லாம் விளையும் துன்பச் சுமையை சுமப்பவன், எங்களை எல்லாம்  மோக்ஷத்திற்கு கொண்டு செல்பவன்..  உன்னை  எப்படி போற்றுவேன்?

இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே எனக்கு தெரியும் . இந்த பூமியில் பாரம் பெருகிவிட்டது. பூமாதேவி அலறினாள். என்னால்  இப்படி  என்  மேல் திணிக்கப்படும்  அநீதி அக்கிரமம் அதர்மம் அளவு கடந்துள்ளதை சுமக்க முடியவில்லை. என்னால் தாங்க, பொறுக்க, முடியவில்லையே, பெருமானே, வாருங்கள் என் துயர் தீருங்கள் என்றாள். படைக்கும் கடவுள் ப்ரம்மா, உன் மகன், ''அவசியம் நீங்கள் தலையிட்டு பூமாதேவியின் துன்பம் தவிர்க்க வேண்டும்'' என்றான். நடுக்கடலில் செல்லும் படகு அனைவரது சுமையும் தூக்கி ஆழமான கடலைக் கடக்க உதவுவது போல் பூமாதேவி நம்மைச்  சுமக்கிறாள். ஒரு நேரத்தில் படகின் சுமை , பாரம், அதிகமானால் முழுகும் அபாயம் உண்டல்லவா?  

 ''வா கிருஷ்ணா வா என் சுமையைக் குறை. நானே காணாமல் போய்விடுவேன் போல் இருக்கிறதே''  என்று பூமா தேவி  வேண்ட, நீ உடனே பூமிக்கு சென்று அவதரித்து அக்ரமக்காரர்களை அழித்து, அதர்மத்தை ஒடுக்கினாய் கிருஷ்ணா. பூமி பாரத்தை குறைத்த நீ காருண்யமூர்த்தி அல்லவா?

भवे sस्मिन्क्लिश्यमानानामविद्याकामकर्मभि: ।श्रवणस्मणार्हाणि करिष्यन्नति केचने ॥२०॥  8.35

bhave ’smin kliśyamānānām avidyā-kāma-karmabhiḥ śravaṇa-smaraṇārhāṇi kariṣyann iti kecana

பவே அஸ்மின் க்லிச்யமானானாம் அவித்யாகாமகர்மபி: ச்ரவண ஸ்மாரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன 8.35

இன்னும் கூட  உன்னைப் பற்றி சில அருமையான விஷயங்கள் அறிந்தேன் கண்ணா.  நீ  அஞ்ஞானிகள், அறியாதவர்கள், என்னைப்போல உலக நாட்டங்களின் ஆசையாலும், உணர்ச்சிகளாலும், அறியாமையாலும் அவதிப்படுவர்களை   உன்னைப் பற்றி கேட்க,  தெரிந்துகொள்ள, வழிபட  மாற்றிக்கொள்ள, திருந்த உதவுபவனாம்.  கண்ணா, நான் கல்வியறிவு அற்றவள். பேதை. ஆனால் ஞானிகள் ரிஷிகள், பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த பூமியில் அஞ்ஞானத்தை போக்கவும், பக்தியை பெருக்கவும் சுருதி, ஸ்ம்ருதி நிதித்யாஸம் சரணாகதியை மக்கள் உணர, சம்சார துன்பங்களிலிருந்து விடுபட குருவாக நீ அவதரித்தாய் என்று சொல்வதை அறிவேன்.

 शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: । त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥२१॥  8.36

śṛṇvanti gāyanti gṛṇanty abhīkṣṇaśaḥ  smaranti nandanti tavehitaṁ janāḥ  ta eva paśyanty acireṇa tāvakaṁ bhava-pravāhoparamaṁ padāmbujam

ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபீக்ஷ்ணச; ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா: த ஏவ பச்யந்தி அசிரேண தாவகம்
பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்''  8.36

''ஆமாம்  கிருஷ்ணா, நான் இப்போது  நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.   உன்னைப்பற்றி செவிகுளிர கேட்பதாலும்,  உன் நாமங்களை ஓதுவதாலும் ,  உன்னை ஸ்மரணம் செய்து கொண்டு இருப்பதாலும்  வெகு சீக்கிரம் அவர்களை உன் தாமரைத் திருவடிகளை அடையச்செய்வதோடு, இனி  பிறவியற்று  இன்பமாக மோக்ஷம் அடையச் செய்பவன் நீ  ஒருவனே.  உன்னளவு  கருணை  உள்ளம், காக்கும் சித்தம் வேறு எவரிடமும் இருப்பது  அறியமுடியாததால் தானே   நீ எங்கள்  'காக்கும் தெய்வம்'' 

ஓ, கண்ணா, இதை கட்டாயம் நான் உரக்க சொல்வேன். யார் யாரெல்லாம் உன்னை ஸ்மரிக்கிறார்களோ, பாடுகிறார்களோ, புகழ்கிறார்களோ, கேட்கிறார்களோ, உச்சரிக்கிறார்களோ, விடாமல் நினைக்கிறார்களோ, நீ அவர்களை ரக்ஷிப்பவன். மறுபிறவி அற்று மோக்ஷமாகிய உனது தாமரைத் திருவடிகளை அடையச் செய்பவன். இது எனக்கே தெரியும்போது கற்றுணணர்நத ஞானிகள், பண்டிதர்கள், பக்திமான்களுக்கு தெரியாதா?

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது.  கிருஷ்ணனின் குதிரைகள் தயார் நிலையில் இருந்தும், தாருகன் கிருஷ்ணனின் உத்தரவுக்கு காத்திருக்கிறான். வெகு தூரம் துவாரகைக்கு பிரயாணம் செய்யவேண்டும். ஆனால் குந்தியோ கிருஷ்ணனை விட்ட பாடில்லை. கெஞ்சுகிறாள், கிருஷ்ணனை போற்றுகிறாள், பிதற்றுகிறாள். அமைதியாக  கிருஷ்ணன் அவளை புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு ரசிக்கிறான்:  குந்தி தொடர்கிறாள்.


அடுத்த பதிவில்  நிறைவு பெரும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...