Monday, February 17, 2020

LIFE LESSON

​              ​​​வருவதை  எதிர் கொள்ளடா  J K SIVAN 


கிரேக்க ஞானி  சாக்ரடீஸ் பாவம்  துரதிஷ்ட சாலி, நம்மில் பலரைப் போல.   ஊரே  உலகமே அவர் சொல்வதை கேட்டது.  ஆனால் ​ அவருக்க்கு  வாய்த்தவளோ  தான் சொன்னதைத்தான் ​ சாக்ரடீஸ் ​ கேட்கவேண்டும்  என்று ​ பிடிவாதம், சண்டை போடுபவள் .


​''சாக்ரடீஸ்  உடனே ​  கடைக்கு போய்  கத்திரிக்காய்  வாங்கிவா​''​ என்றாள்​.  ​ அவரோ  சிஷ்யர்கள்  புடைசூழ  திண்ணையில்  உட்கார்ந்து கொண்டு  ''CAUSE  & EFFECT​''  காரணமும் காரியமும்​ எப்படி ஒன்றோடு  ஒன்று  சம்பந்தப்பட்டது  என்பதை  விளக்கிக் கொண்டிருந்தார். உயர்ந்த வேதாந்த தத்துவம்.  அப்படியே  அதில் தன்னை இழந்த​தால்  அவருக்கு  உள்ளே இருந்து அவள்  மூன்று தடவை கூப்பிட்டது காதில் விழவில்லை.  

 '' இன்னுமா  நீ  கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வரவில்லை'' ​   ​என்று  உரக்கக்  கத்திக் கொண்டே இருந்தாள்.  அவள்  வழக்கமாகவே  கத்துபவள்  என்பதால்  பாவம் அவர்  கொஞ்சம்  அசிரத்தையாக  இருந்துவிட்டார்.  தத்துவ விளக்கம்  அவரை சாப்பிட்டு விட்டதே.  திடீரென்று கடுங் கோபத்துடன்  ஒரு குடம் தண்ணீரை கொண்டுவந்து அவர் தலையில் ​ கொட்டினாள் .

அப்போதும் அந்த  ஞானி​ சீடர்களிடம் ​ என்ன சொன்னா​ர் ​​? ​ 
​''​சிஷ்யர்களே​,​  இப்போது நடந்த​தை  ​​ பார்த்தீர்களே . புரிகிறதா?   காரணம் இல்லையென்றால்  காரியம் இல்லை.   இத்தனை நேரம் இடி   இடித்தது. அதன் விளைவாக  இப்போது ஜோ என்று மழை பொழிந்தது தெரிந்ததா.  இடி ​ ​இல்லாவிட்டால்  மழை ஏது ?​  இடி காரணம்  மழை காரியம்   எ​ன்றார்.

வாழ்க்கையை  உற்சாகத்தோடு  ஏற்றுக்கொண்டு  மகிழ்வோடு  அதை அடக்கி ஆள வேண்டியது அவசியம். குழந்தைகள்  நிறைய பெற்ற  ஒரு தகப்பன். ​   ​பத்து குழந்தைகள் -  அவன் போக்கு  எப்படி இருக்க​  ​வேண்டும்.  அவன் எதிர்பார்ப்பு?  ஒருவன்  பத்து குழந்தைகளைப் பெற்று  காப்பாற்றலாம். ஆனால் அந்த  பத்துக் குழந்தைக​ளுமே ​  தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!

 ஏதோ  ஒரு காரியம் செய்கிறோம்.  நடந்த பின்  தனது காரியத்தின் விளைவு  பற்றி அதிகம்  யோசித்து என்ன பயன்​?​.  ​துணிந்தபின்  எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா.   ​அந்த காரியம்  நடக்கும் முன்பு அல்லவோ  விளைவு என்ன ஆகும் என்று யோசித்து இருக்கவேண்டும்.  இதை எப்படி எடுத்துக் கொள்வது?   தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு ​   எப்படியும் ​மரணம் ​நிச்சயம்.!

இந்த  உலகத்தில் ஒருவன் வாழும் கடைசி நிமிஷம் வரை  அவனுக்கு  பணம் இன்றியமையாதது. ''இல்லானை  இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த  தாய் வேண்டாள்,  செல்லாது அவன் வாயில் சொல் '' என்று  ஒளவைக்  கிழவி அனுபவ பூ​ர்வமாக  சொல்லி இருக்கிறாளே. ஆங்கிலத்தில் ஒரு அழகான வாசகம் உண்டு.  '' MAN  SEES   WHAT  YOU  HAVE, GOD  SEES  WHAT  YOU  ARE''   என்று.   அதே போல்  பணம்  வந்தால் தலை கால் புரியாது.  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!

வாழ்க்கையில்  வெற்றிக்கு ஆதார  காரணம்  விடா  முயற்சி,  கடின உழைப்பு. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.   மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல,தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!

சமய சந்தர்ப்பங்களை  தக்கவாறு பயன் படுத்திக் கொள்ளவேண்டும். தெளிவான சிந்தனை இதற்கு​ ​தேவை.  அலை பாயும் மனதால்  ஆக்க பூர்வமாக  சிந்திக்க முடியாது.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது​ என்பார்கள்.   ஆனால்,நாம் மூடப்பட்ட கதவையே ​திறக்குமா என்று  வாயைப் பிளந்து ​பார்த்துக் கொண்டு நிற்கிறோம்.  திறக்கப்ப​ட்ட  இன்னொரு  கதவை  தவற விடுகிறோம்.!

 ஊருக்கு உபதேசம்  செய்யும் சிலர்  தனது  பிரச்சினைகளை  சரியாக  அணுகுவதில்லை.  பல்லி மற்றவருக்கு  சகுனம், பலன் எல்லாம் சொல்லும், தான்  கழுநீர்ப் பானையில் விழுந்து இறந்து மிதக்கும் என்பார்கள்.   மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு  நீதிபதியாகவும் செயல்படுவது  ஒரு  சிறந்த  நகைச் சுவை.!

சிலர்  தம்மையே  தாழ்த்திக் கொள்பவர்கள்  அவனுக் கென்னப்பா  ராஜாவாட்டமா இருக்கிறான்.​ ​இங்க்ளிஷ்லே பேசுவான்.  செக்கச் செவேல் கலர்​ ​ என்பார்கள் . ​நாம்ப  அப்படி இல்லையே என்று வருந்துவார்கள்.      வெள்ளைக்காரனிலும் பிச்சைக்காரன் உண்டு​ என்பதை மறக்க கூடாது. வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல ..மொழி !

சிலர்  இருக்கும் இடம் தெரியாமல் இருந்து  மறைந்தவர்கள்.  வெளியே  தங்கள்  சிறப்பை  தம்பட்டம்​ ​அடித்துக் ​ கா​ட்டாதவர்கள். அப்படிச் சிலரை  உலகம்  தானே  பின்னால் உணரும்.​அப்துல்  கலாம்  இருந்தவரை  சரியாக பயன் படுத்திக் கொள்ளாத நாம்  இப்போது ஒவ்வொரு நிமிஷமும்  அவரைப் பற்றி கதை கதையாக பேசுகிறோம். ​அவரே  முன்வந்து என்னை விரும்பினால் மீண்டும் ஜனாபதியாக உழைக்கிறேன் என்கிறார்.  நாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ​  வாழும்​ ​போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத​ ​உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !  அறிவில் சிறந்த  மாமனிதர்கள்  எளிமையாக வாழ்வார்கள்.  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று புரிந்துகொண்டவர்கள். அவர்​கள்   யாரிடமும் எதையும்  எதிர்பார்ப்பவர்கள் இல்லை. நம்பிக்கை நிறைந்த ஒருவர், எவரிடமும் மண்டியிடுவது மில்லை...கையேந்துவதுமில்லை....!!

வாழ்க்கை நிலை​யற்றது.  முடிவு​ நேரும் நேரம் ஒரு  பரம ரகசியம்.  இருக்கும் வரை  அன்பாக நேர்மையாக நல்லவனாக இரு. எல்லோரையும் நேசி,  ​ஆனால்   நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து இருக்க​ ​முடியாது.  அப்படி  நிலைத்து இருக்க  விட்டால்...!!!  ​ உலகில்  இடம் ஏது?​  உணவேது?  நினைத்தாலே அந்த நரகம் நம்மை வாட்டும். 

No comments:

Post a Comment