Monday, February 17, 2020

LALITHA SAHASRANAMAM



                     
       


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(821-837)   -       J.K. SIVAN

ப்ரஹ்மணீ, ப்ரஹ்மஜனனீ, பஹுரூபா, புதார்சிதா |
ப்ரஸவித்ரீ, ப்ரசம்டா‌உஜ்ஞா, ப்ரதிஷ்டா, ப்ரகடாக்றுதிஃ || 155 ||

ப்ராணேஶ்வரீ, ப்ராணதாத்ரீ, பம்சாஶத்-பீடரூபிணீ |
விஶ்றும்கலா, விவிக்தஸ்தா, வீரமாதா, வியத்ப்ரஸூஃ || 156 ||
                                     
             லலிதா ஸஹஸ்ரநாமம் - (821- 837 ) அர்த்தம்

*821* ப்ரஹ்மணீ,   ब्रह्माणी  ப்ரம்மத்துக்கு  ஆதார சக்தியானவள்  அம்பாள் என்பதால் அவளை ப்ரம்மணி என்று இந்த நாமம் அடையாளம் காட்டுகிறது.  சிவன்  ப்ரகாசன்   சிவை எனும் பார்வதி விமர்ஸா., வெளிப்பாடு. சுத்த  சத்வம் சிவன் என்றால் அதன் பிரபஞ்ச வெளிப்பாடு சக்தி. ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்காது.  ப்ரம்மம் ப்ரம்மணி  என்பது பைரவன் பைரவி போல.


*822* ப்ரஹ்ம,   ब्रह्म      அம்பாள் தான் ப்ரம்மம்.  அவளை ப்ரம்ம சக்தி என்போம்.  பிரம்மத்தை  அனுபவிக்கலாம் தவிர விவரிக்க வார்த்தைகள் கிடையாது.   அத்வைத சித்தாந்தத்தை போதித்த ஆதி சங்கரர் சொல்வது போல்  ஆத்மா ஒன்றே சத்யம், உண்மையானது.  ஞானத்தினால் நிரம்பியது. அதுவே  ப்ரம்மம்.   உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சதா ஆனந்தத்தில் நிலைத்திருப்பது.  சக்தியும்  சிவனும் இணைந்த நிலை.  ஆகவே தான் அம்பாளை இந்த நாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

*823*  ஜனனீ   जननी    தாய்,  ஜெகன் மாதா,  பிரபஞ்ச காரணி அம்பாள்.  சர்வமும்  அவளால் உருப்பெற்று உயிர்பெற்றவை. 

*824* பஹுரூபா, बहु-रूपा  ஒன்றல்ல ரெண்டல்ல, அநேக  உருவங்களை கொண்டவள் அம்பாள். பக்தர்கள் மனதில் தோன்றியபடி காட்சி தருபவள்.    எல்லா உயிர்களிலும்  மூலமாக இருப்பவள். அவளை சப்த   SABDHA 
ப்ரம்மம் என்று அறிவோம்.  

*825*  புதார்ச்சிதா  बुधार्चिता    ஞானம், பாண்டித்யம் , புத்திகூர்மை உள்ளவர்கள், ஆத்ம ஞானிகள்  அம்பாளை  அறிந்து அவள் சக்தி உணர்ந்து வணங்குகிறார்கள். தொழுகிறார்கள். வழிபடுகிறார்கள்.  

*826* ப்ரஸவித்ரீ,  प्रसवित्री    தாய் தான் உயிரளிப்பவள்.  அவள் பிரசவத்தால்  தான் சேய் உருவாகி  உயிரோடு பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் தாய் அம்பாள் தானே.  இந்த நாமம் அதை சொல்கிறது.  அம்பாளை மாதா, தாய், அம்மா  என்று அதனால் தானே போற்றுகிறோம்.  சிவசக்தி கூட்டு அமைப்பால் தான்  பிரபஞ்சம் உருவாகியது. அவள் க்ரியா சக்தி என்று பெயர் பெற்றதும் இதனால் தான். 

*827* ப்ரசண்டா प्रचण्डा   அம்பாள் பாரபக்ஷமில்லாதவள். கண்டிப்பானவள். ஒழுக்கம் தவறினால் கண்டிக்காமல் விட மாட்டாள்.  சூர்யன், அக்னி, வாயு இந்திரன்  ஆகியோர் தத்தம் கடமைகளை பொறுப்புகளை காலம் தவறாமல் பயந்து பயந்து  செய்வதற்கு அம்பாளே முக்கிய   காரணம் என்று  தைத்ரிய உபநிஷத் சொல்கிறது.  

*828* ‌அஜ்ஞா, आज्ञा   ஸ்ரீ லலிதாம்பிகை  கட்டளையிடுபவள்.  ஆணையை மீறுபவர்கள் மீளமுடியாது . லங்கா புராணத்தில்  சிவனே  சொல்வது என்னவென்றால்  (I.87.9-11) “  அம்பாளே  ஸ்ருதி  ஸ்ம்ரிதி அனைத்தும். அவளே  தைர்யம். என்னால் பலமளிக்கப்பட்டவள். ஞானத்தின் முடிவு.  இச்சை  கிரியை  சக்தி வடிவம். மாயை. பஞ்சமுக  காயத்ரி. 

*829* ப்ரதிஷ்டா  प्रतिष्टा      அம்பாள் ஸ்ரீ லலிதா தேவி  சர்வ தர்மத்துக்கும்  ஆதாரம்.

*830* ப்ரகடாக்ருதி  प्रकटाकृतिः   பிரகடனம் என்றால் சான்று. தெளிவு  பொது அறிவிப்பு என்று பொருள் கொள்கிறோம்.  அம்பாள் அனைவருக்கும்  பொதுவான, எல்லோரும் அறிந்தவள். ப்ரம்ம ஸ்வரூபம்.   எதிலும் எங்கும்  தானே ஆனவள்.  மாயையினால் மனிதன் தன்னை  தேகமாக தவறாக அறிகிறான். தான் பிரம்மன் என்று அறியவில்லை.   மஹா நாராயண உபநிஷத் 
 (29.1) நிச்சயம்  எல்லாமே  ஜலத்தில்  தோன்றியது தான்.  தேகத்தின்  முக்கிய  ப்ராணன்கள்  ஜலத்தால் இயங்குபவை.   புண்ய நதிகளை கடவுளாக நாம்  ஏற்றுக்கொண்டு வழிபடுவதும் இந்த காரணத்தால் தான்.  பிரபஞ்சம்  பிராணனை  ஜலமாக பார்க்கிறது. நீரின்றி அமையாது உலகம்.   நீர் ஜீவாதாரம் என்பது இதனால் தான்.  


*831* ப்ராணேஶ்வரீ,   प्राणेश्वरी     அம்பாளை பிராணன்,  ப்ராணன்களில்  பிரதானமானவள் என்றும் கூறலாம்.  ப்ரம்ம சூத்ரம் (I.i.28)    ப்ராணஸ்ததானுகமாத்  என்று சொல்லும் போது  (प्राणस्तथाऽनुगमात्)  பிரம்மன் தான் பிராணன் என்பது தெரிகிறது.  பிராணன் தான்  உணர்வு, பரிசுத்தமானது.   எல்லா ஜீவன்களிலும்  தோன்றி மறைவது.  ஆக்கலும் அழித்தலும் அதுவே. 

*832* ப்ராணதாத்ரீ,  प्राणदात्री     புலனுணர்வுகள், உணர்ச்சிகளை  பிராணன் வளர்க்கிறது.   மனமோ புலன்களோ  பிராணன் இல்லாமல் இயங்குமா?  பிராணனை அடக்கி ஆள்பவள்  அம்பாள் என்று இந்த நாமம் அற்புதமாக காட்டுகிறது.  ப்ராண சக்தியை கொடுப்பவள் அம்பாள். இதை தெளிவாக ப்ரம்ம சூத்ரம் (II.iv5) ப்ரம்மத்திலிருந்து உருவான பிராணன் என்கிறது.    தைத்ரிய உபநிஷத்  (II.i.8)   தஸ்மாத் சப்த பிராணா ப்ரபவந்தி '' எனும்போது   ப்ரம்மத்திலிருந்து தான் ஏழு ப்ராணன்களும் உருவாயின.   இரு கண்கள், இரு நாசி துவாரங்கள், இரு காதுகள், வாய்  ஆகியவற்றில் தான் பிரவேசம் வெளியேற்றம்.
பஞ்ச ப்ராணன்கள்  எவை என்று ஞாபகம் இருக்கிறதா?   பிராணன், வியானன்,உதானன், சமானன், அபானன். இந்த பிரபஞ்சத்தில் அனைத்திற்கும்  ப்ராண  சக்தி அளித்து இயங்கவைப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதா.

 *833* பஞ்சாஶத்-பீடரூபிணீ   पञ्चाशत्- पीठ-रूपिणी    பஞ்சாஸ  என்றால் ஐம்பது. பீடம் என்பது ஆசனம்.  ஐம்பத்தொரு சக்தி பீடங்களையும் குறிக்கும்.  ஐம்பது ஸமஸ்க்ரித  மொழியின் அக்ஷரங்களையும் குறிக்கும். 

*834* விஶ்ருங்கலா  विश्रुण्खला   -  எந்த  பந்தமும், கட்டும்  இல்லாதவள்.  மனிதர்களுக்கு மட்டுமே அது உரித்தானது. நம்மை நாமே குண்டுக்கட்டாக எதாலாவது பிணைத்துக் கொள்கிறோம்.  ப்ரம்மம் சுதந்திரமானது.   தன்னலம் கொண்ட செயல்கள் நம்மை பிணைக்கிறது.  நல்லதோ  கெட்டதோ  செயல்கள் தான் என்ற மமதை, கர்வம், அகம்பாவத்தோடு,  தனக்கு என்ற சுயநலம் கலந்து இருந்தால் விடுதலை கிடையாது.   அம்பாள் இதெல்லாம் கடந்தவள் .

*835*  விவிக்தஸ்தா,  विविक्तस्था  அம்பாள் ஆத்ம ஞானிகள் உள்ளத்தில் இடம் பெறுபவள் . ஞானி என்பவன் ஆத்மாவிற்கும்  ஜீவனுக்கும் உண்டான  பேதத்தை உணர்ந்தவன்.  தனிமையில் உணர்வது.  கூட்டத்தில் அவளை தேடவேண்டாம்.  எண்ணங்கள் வேறுபடும் கூட்டத்தில் அவளுக்கு இடமில்லை.  மனம் ஒருமித்த கூட்டங்கள் வேறு.  நாம சங்கீர்த்தனம், பஜனை போன்ற ஒருமித்த மன சங்கமத்தில் அவளை உணரமுடியும்.  பிரவசனம், அதில் ஆழ்ந்து ஈடுபடுவோர் சங்கமமும்  அவளை உணர்விக்கும் .அங்கு எல்லாம்  ஆனந்தம் நிலவுஜ்ம். பரிசுத்தத்தில்  பார்வதி தெரிகிறாள். மனம் ஒன்று  தான் அவளை அடைய உதவும் சாதனம்.  மனத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர உதவும் மூன்று வழிகள்.  பிராணாயாமம்,  அந்தக்கரணம். உள்ளுணர்வு.  சமாதி நிலை எனும் தனைமறந்த த்யானம்.  பதஞ்சலி ரிஷி, தனது யோக சூத்திரத்தில் (I.4)  மௌனமான, அமைதியான மனம் சுத்தமாகிறது. இப்படிப்பட்ட மனதிலிருந்து தான் சகலமும் உருவாகிறது.  அங்கே எந்த ஒட்டுதலும் கிடையாது.  உலக சிந்தனை அறவே விலகிவிடுகிறது.  தன்னுள்  ஆழமாக உள் நோக்கி பயணிக்கும் மனம் ப்ரம்மம் அதில் உறைவதை உணர்கிறது.  ஒவ்வொருவனும் தானே மட்டும் தான் இதை அடையமுடியும். மற்றவன் அனுபவம்  வழி தான் காட்டும். போய் பெறவேண்டியது நாம் தான். வழி காட்டி
யவன் அல்ல. 

836* வீரமாதா, वीर-माता    வீரர்கள்  என்போர்  படைவீரர்கள்.  கணம் என்பது  படைவீரர்கள் கூட்டம்.  கணேசன், கணபதி எனும் விக்னேஸ்வரன் அதன் தலைவன். அவன் தாய் தானே  வீர மாதா.  அம்பாள். உமை . அவளே யுத்தத்தில்  ஈடுபடுபவள் அல்லவா. அவளால் தான்  அசுரர் சக்திகள் அழிபவை.  தீயவை, கொடுமை ஆகியவை அவளால் தானே சம்ஹரிக்கப்படுபவை. தேவி மஹாத்ம்யம் விளக்கமாக சொல்கிறதே. ஐம்புலன்களை வெல்லும்  பக்தர்களும்  வீரர்கள் தான்.   அவர்களின் தலைவி அம்பாள் எனும் ப்ரம்மம்.  அவளே தாய். தெய்வத்தாய் . 

*837* வியத்ப்ரஸூ    वियत्प्रसूः    பஞ்சபூதங்களை உருவாக்கியவள்  அம்பாள்.  ப்ரம்மத்திலிருந்து உருவானது தானே  ஆகாசம்.  ஆகாசத்திலிருந்து மற்ற பூதங்கள் தோன்றியவை.   தைத்ரிய உபநிஷத் (II.1)   ''தஸ்மாத் வை ஏதஸ்மாத்  ஆத்மனா  ஆகாஸா  ஸம்பூதா:''  அதாவது  ப்ரம்மத்திலிருந்து  ஆகாசம் தோன்றியது. ஆகாசத்தின் மூலம்  அக்னி, அக்னி மூலம்  ஜலம் , ஜலத்தினால்  பூமி,  பூமியிலிருந்து தாவரம்,  அதிலிருந்து உணவு, அதிலிருந்து  மனிதன் முதலான ஜீவராசிகள் என்று படிப்படியாக  விளக்குகிறது. 

   சக்தி  பீடம்                                தேவி  ஜோகுலம்பா     

தெலுங்கானாவில்  ஜோகுலம்பா கட்வால்  ஜில்லாவில்  ஆலம்பூர் என்று ஒரு கிராமம்.  க்ஷேத்ரமஹிமை என்னவென்றால்  கிருஷ்ணா  துங்கபத்ரா  ரெண்டு புண்யநதிகளும் அங்கே சங்கமமாகிறது.  தக்ஷிண காசி, நவபிரம்மேஸ்வர தீர்த்தம் என்று பெயரும் உண்டு.    சிவன் இங்கே  பிரம்மேஸ்வரர்,  அம்பாள்  ஜோகுலம்பாள் .  ஸ்காந்தத்தில்  இந்த க்ஷேத்திரம் பற்றி  சொல்லப்பட்டிருக்கிறது.   ஆலயத்தை  சுற்றி  பச்சை பசேலென்று  நல்லமலை குன்றுகள்.  துங்கபத்ராவின்  இடது கரையில் ஆலம்பூர் அமைந்திருக்கிறது.   ஒருகாலத்தில்  ஹைதராபாத் சாம்ராஜ்யத்தில்  ரெய்ச்சூரை  சேர்ந்ததாக  இருந்தது.
43 கிராமங்களில் ஒன்று. 

இந்த  ஊரை  ஆண்ட மன்னர்கள்  இக்ஷ்வாகு வம்ச சாதவாஹனர்கள் ,  ராஷ்டிரகூடர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், காகதீயர்கள், விஜயநகர  ராயர்கள்.   குதுப் ஷாஹி  கோல்கொண்டா காரர்கள் ஆகியோர். இப்போதைய  ஆலம்பூருக்கு அப்போது  ஹலம் புரம், ஹமலா புரம், ஆலம்புரம் என்றெல்லாம் பெயர். 1101 கல்வெட்டுகளில் இந்த பெயர்கள் உண்டு.  மேலை சாளுக்கிய மன்னன்  திரிபுவன மல்ல 6ம் விக்ரமாதித்யன் காலத்தியது.  இன்னொரு கல்வெட்டு 704ம் வருஷத்தியது. அது வினயாதித்த சாளுக்கியன் நிர்மாணித்த  ஆலயம் என்கிறது.  ஆலம்பூரில் உள்ள  நவபிரம  ஆலயங்கள் சிறப்பானவை. அற்புத  கை வேலைத் திறன்  மிக்க சிற்ப சித்திரங்கள்கொண்டவை.   சில  ஆலயங்கள் அருகே உள்ள  ஸ்ரீ சைலம் நீர் தேக்க மின்சார திட்ட  அலுவலில் நீரில் மூழ்கி மறைந்துவிட்டன.  சில  அப்புறப்படுத்தப்பட்டன .

 இவை யாவுமே   650-750  ஆண்டுகளுக்குள்  பாதாமியை  தலைநகராக கொண்ட  மேலை சாளுக்கியர் காலத்தின் அற்புத  சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. 

இறந்துவிட்ட சதியின் உடலை சுமந்து தாண்டவமாடிய  சிவன் மேலிருந்து அவள் உடல் பல பாகங்களாக பிரிந்து பூமியில் அங்குமிங்கும் விழுந்தன . அவை ஒவ்வொன்றும் ஒரு சிறந்த சக்திபீடமாகிவிட்டது. அப்படி சாதியின் மேற்வரிசை பல் ஒன்று விழுந்த இடம் தான்  ஜோகுலம்பா  ஆலயம்.  இதை யோகாம்பா ஆலயம் என்று நாம் அழைப்பதை ஆந்திரர்கள் ஜோகுலம்பா  ஆலயமாக்கிவிட்டார்கள்.

முதன் முதலாக  இருந்த   பழைய ஜோகுலம்பா  ஆலயத்தை   1390 வாக்கில்  இங்கே  நுழைந்த  முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் இடித்து நொறுக்கி விட்டார்கள்.  615 வருஷங்கள் கழித்து மீண்டும்  ஆலயம் எழுப்பப்பட்டது.   

ஆலம்பூர் நவபிரம்ம ஆலயங்கள் அத்தனையும், அதாவது ஒன்பதும், சிவாலயங்கள்.  7ம் நூற்றாண்டை சேர்ந்தவை.  மேலே சொன்னபடி  பாதாமி சாளுக்கிய   ராஜாக்களின் கை  வண்ணத்தால் நமக்கு கிடைத்தவை.  பிரம்மன் சிவனை வேண்டி மீண்டும்  சிவனின் அனுக்ரஹத்தால்  சிருஷ்டியை தொடர்ந்த க்ஷேத்ரம். பிரம்மன் சிவனை வணங்கி அருள்  பெற்ற  ஸ்தலம் என்பதால்  பிரம்மேஸ்வரன் ஆலயம் என்று பெயர் பெற்றது.  இரண்டு  புண்ய நதிகள், கிருஷ்ணா, துங்கபத்திரா சங்கமிப்பதால்  சங்கமேஸ்வரன் ஆலயம்  என்றும் அறியப்பட்டது.  சங்கமேஸ்வர ஆலயம்  முதலாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் காட்டியது.  வருஷம் கிட்டத்தட்ட  540  லிருந்து  566 க்குள்.  ஆயிரத்து ஐநூறு வருஷங்கள் முற்பட்டது.

No comments:

Post a Comment