Friday, December 16, 2022

A POPULAR SONG

 

எட்டாப் பழத்துக்கு விட்ட கொட்டாவி
நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒவ்வொரு  மனிதனின் மனத்திலும் எத்தனையோ ஆசைக் கனவுகள்.  என்னென்னவோ ஆசைகள்.
மனக்கோட்டைகள். அவை எல்லாமே  நிறைவேறுவதில்லை.  அப்படித்தான்  எனக்கும் நன்றாக  பாடவேண்டும் என்று ஒரு ஆசை சின்ன வயதிலிருந்து. ஆனால்  இசையை முறையாக கற்றுக்கொள்ள முடியவில்லையா முயலவில்லையா அதற்கெல்லாம்  வழியே இல்லையா என்று சொல்ல முடியவில்லை.

கேசவ நாயர்  டீக்கடையில் ஆற்காட்டில்  ரோட்டில் சாயந்திரம்  ரேடியோ சிலோன், இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்பு  சில  மணி நேரங்கள் முடிந்த போதெல்லாம் கேட்டு  பல பாடுகளை நெட்டுரு பண்ணிக்கொள்வேன்.   அப்போதெல்லாம் கல்யாணம் மற்றும் விசேஷங்கள் வீட்டில் நடந்தால்  லௌட் ஸ்பீக்கர் loud  ஸ்பீக்கர்  எனும்  முக்கோண வடிவில் cone  காதை பிளக்கும்படியாக  சினிமா பாட்டுகள் கிராமபோனில் போடுவார்கள்.  அதில் பிடித்த  பாடல்கள் ஒலித்தால்  சைக்கிளை சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு  வாசலில்  நின்று கேட்பதுண்டு.

பாடுவது என்பது ரெண்டு வகை.  ஒன்று இயற்கையிலே குரல் வளம் கொண்டவர்கள் சிலர் தமது திறமை வெளிப்படாமல்,பாடாமல், அதன் இனிமையை வெளிப்படுத்தாமலேயே மறைத்து, தமக்குள், வீட்டில்  குளிக்கும் அறையில் பாடும் பாத்ரூம்  பாடகர்கள்.   சிலர் குரல் வளம் இல்லாவிட்டாலும் கடுமையான உழைப்பால் முறைப்படி இசைப்பயிற்சி மேற்கொண்டு பாடுபவர்கள். அதிர்ஷ்டம் இருந்தால், சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் , அவர்கள் பிரபலமாக சமூகத்தில் தென்படுவார்கள். 

குரல் இனிமை இல்லாவிட்டாலும் இருக்கும் குரலை வைத்துக்கொண்டு அற்புதமாக உழைத்துப் பாடி தனி இடத்தை பெற்றவர்களும் உண்டு. தமது குரலுக்கு ஏற்றபடி, எத்தகைய பாடல்கள் இனிமையாக பாடமுடியுமோ அதைப்பாடி புகழ் பெருமை பெற்றவர்களையும் நாம் அறிவோம்.

இனிய குரலுக்கு உதாரணமாக எம்.கே. தியாகராஜ பாகவதர், ஏ. எம். ராஜா, S. P. பாலசுப்ரமணியன், TMS பாலமுரளி கிருஷ்ணா, போன்ற சிலரை அடையாளம் காட்டி விட்டு சங்கீதம் கற்று இருக்கும் குரலை மதிப்புறச் செய்த மதுரை சோமு, மதுரை மணி அய்யர், CS ஜெயராமன், M .D , ராமநாதன் போன்றோரை அடையாளம் காட்டலாம். 

இருக்கும் குரலின் கம்பீரத்தை உபயோகித்த கண்டசாலா.பி.பி. ஸ்ரீனிவாஸ் சந்திரபாபு போன்றோர்.

கடைசி ரகம். மற்றவர்கள் பாடினால் அவர்களே கேட்க விரும்பாதோர். நான் அவ்வகை.
இது இப்படி இருக்கும்போது, 1966ல் ஆலங்குடி சோமு என்ற கவிஞர் கடவுளை வேண்டி எனக்கு 

நீ அருள்வாயே,தேவா, என் உள்ளத்தில் உனக்கு கோவில் அமைத்தேனே ,
 உன் பக்கம் என்னை அழைத்தாயே , நன்றி உனக்கு, 
எனது தூய பழக்கத்தால்  உன்னை வாழ்த்தவேண்டும், 
என் தீய பழக்கங்கள் என்னை விட்டு தானாக ஓடவேண்டும், 
கொடிய புலியையும் நான் அன்போடு பராமரிக்கவேண்டும்,
 உலகம் என்னை அன்புள்ளவன் என்று பாராட்ட நான் வாழவேண்டும், எ
ன் வாழ்வில் நான் நீதி நேர்மையோடு பிறழாமல் வாழவேண்டும், 
என் பாபங்கள் தூளாக சிதையவேண்டும்,
 உன் ஜோதி சமுத்திரத்தில் நான் கலக்கவேண்டும், 
இதற்கெல்லாம் நீ அருளவேண்டும் என்ற  அர்த்தம் கொண்ட  ஒரு பாடலை பாடி இருப்பதை பாலமுரளி கிருஷ்ணா எளிமையாக ஒரு தமிழ் சினிமாவில் பாடி இருக்கிறார். அதை கேட்க நேர்ந்தபோது தான் எனக்கும் இதைப் பாடி பார்த்தால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்துடன் இணை த்திருக்கும் என் குரல்
எண்பத்து  மூன்று  வயதுக்கு  மேல் இப்படி ஒரு ஆசையா? என்றால்  இதனால்  விளையும் ஒரே துன்பம்  இதை கேட்பவராகள் படும் கஷ்டம் ஒன்றே. பாடும் எனக்கு தெரியவில்லை.
 பாவம் சிந்து பைரவி. அதன் போதாத காலம் என்னிடம் மாட்டிக்கொண்டது 
யூட்யூப் லிங்க்

https://youtu.be/rUCmhDHgSdY

No comments:

Post a Comment