Tuesday, November 22, 2022

SHANMUGA AND SRI RAMA


 வில்லாளியும் வேலாளியும்   -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


வீரவேல்‌  சக்திவேல், வெற்றிவேல்  என்றால் ஆறுமுகன் மயில்வாகனனாக  தெரிகிறான்.  வில்லாளி  அவன்  மாமன் கோதண்ட ராமன்.  ரெண்டு ஆயுதங்களும்  அரக்கரை, அவுணரை, அழித்த ஆயுதங்கள்.  தீமையை போக்குவன . நம்மைக் காப்பவை. ''வேலுண்டு வினையில்லை,  வில்லுண்டு  பயமில்லை'' என்பது அதனால் தான்.  மருகன்  சேயோன், மாமன் மாயோன்.கந்த புராணத்தில்  கச்சியப்ப சிவாச் சாரியார் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

'' கோலமா மஞ்ஞை தன்னில்‌ குலவிய குமரன்‌ தன்னைப்‌
பாலனென்‌ நிருந்தேன்‌ அந்நாள்‌ பரிசிவை உணர்ந்தி லேன்யான்‌
மாலயன்‌ தமக்கும்‌ ஏனை வானவர்‌ தமக்கும்‌ யார்க்கும்‌
மூலகாரணமாய்‌ நின்ற மூர்த்திஇம்‌ மூர்த்தி யன்றோ '*

திருச்செந்தூரில்  சூரா சம்ஹாரத்தின் பொது சூர பத்மன்  ஆறுமுகனின் வீரத்தை மெச்சி என்ன சொல்கிறான்? அடடா இவனை சிறுபயல் என்று நினைத்து ஏமாந்தேன். விளையாட்டுப்பயல் ஒரு மயில் மேல் உட்கார்ந்து என்னிடம் மோதுகிறானே என்று நினைத்தேன்.  பாலனல்ல இவன் ஜாலமிக செய்கிறான். அடேயப்பா, எவ்வளவு சர்வ சாதாரணமாக என் படைகளை அழித்து என்னையும்  முடிக்க வந்த  பரமேஸ்வரன் இவன், என்று அறியாமல் போய் விட்டேன்.  ப்ரம்ம விஷ்ணு சிவன் மூவரும் ஒன்றா னவன் இந்த ஷண்முகன்....அவர்களுக்கு ஆதார  மூல காரணன்.''

அவன் ஆறுமுகங்கள் எப்படிப்பட்டவை?

ஒன்று  மயில் மேல் ஏறி விளையாடும் முகம், இன்னொன்று ஈசனுக்கு ஞானம் புகட்டிய  ஞானமொழி , ப்ரணவஸ்வரூபம். அடியார்கள் குறை எங்கிருந்து கேட்டாலும் உடனே தீர்க்கின்ற ஒரு முகம். வழி மறித்த  மலையை ரெண்டாக  பிளந்த  வேலாயுதன் முகம் ஒன்று.   உருமாறி  தாக்கும் மாயாஜால சூரர்களை  வாட்டி வதைத்த முகம்  ஒன்று.  எவ்வளவு கோபம் இருந்தாலும்  வள்ளியைக்  கண்ட நேரம் குளிர்ந்த நிலவாகும் முகம்  ஒன்று. அடேயப்பா ஆறுமுகம் நாம் அஞ்சும் முகத்தை பார்த்து  ஆறுதல் சொல்ல வரும் முகம் ஆயிற்றே., இதோ  அற்புதமான அந்த பாடல்.

'ஏறுமயி லேறிவிளை யாடுமுகம்‌ ஒன்றே
ஈசனுடன்‌ ஞானமொழி பேசுமுகம்‌ ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குழுகம்‌ ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம்‌ ஒன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுகம்‌ ஒன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுகம்‌ ஒன்றே
ஆறுமுக மான்பொருள்‌ நீஅருளல்‌ வேண்டும்‌
ஆதிஅரு ணாசலம்‌அ மர்ந்தபெரு மாளே ””
Teach children this simple song.

மாமனைப் போலவே  மருமகனும்   பக்ஷிவாகனன்.  மாலனுக்கு  கருடன் போல  பாலனுக்கு  மயில்.  இருவருக்கும் சர்ப்பம் தோழன். அங்கே  ஆதிசேஷன்  இங்கே. சுப்ரமணியன் என்றாலே  நாகம்.  இரு தாரை  குடும்பஸ்தர்கள். அங்கே  ஸ்ரீ தேவி  பூதேவி.   இங்கே  வள்ளி தேவயானை.  அங்கே  பாற்கடல். இங்கே  மலைவாசஸ்தலம்.   அங்கே  ஆபரணதாரி, இங்கே கோவணாண்டி.  பக்தர்களை காத்தருள்வதில்  ரெண்டு  பேருக்கும்  ஈடு இணை இல்லை.

No comments:

Post a Comment