Wednesday, October 26, 2022

SAINT THIYAGARAJA

மோக்ஷம்  சும்மா கிடைக்குமா?  -   நங்கநல்லூர் J K  SIVAN


'சிவா,  நீ   நன்றாக ஒரு  பாட்டை  யோசித்து  எழுதி,  மெட்டு போட்டு, அதை நீயே பாடு. ''
இப்படி ஒரு கட்டளை , அதிகாரமாகவோ  அன்பாகவோ எனக்கு போட்டால் எனக்கு என்ன ஆகும்?  யோசிக்கிறேன். 

​​
முதலாவது எனது தலை  உடனே, பெரிசாக கர்வத்தில்  வீங்கி விடும். ஒன்று  நான் எழுதும் பாட்டு அதி அற்புதமாக இருக்கவேண்டும், எல்லோரையும் கவரும் ஜனரஞ்சகமான மெட்டு, அதற்கு போடவேண்டும், பாட்டு  அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.  இதை பாடினால் எனக்கு பேரும்  புகழும் வரவேண்டும். காசு நிறைய  கிடைக்கட்டும்,  இது என்னால் தான் முடியும்  என்ற அகம்பாவம் கண்ணை, அறிவை மறைக்கும்.   ஏதோ  நான்  எவரெஸ்ட் மீதில் இருப்பது போலவும்  எல்லோரையும்  கீழே இருப்பதாகவும்  பார்க்க வைக்கும்.

நான் எழுதப்போவதோ ஒரே ஒரு பாட்டு. அதற்காக பல நாள்  இரவும் பகலும் யோசனை, எப்படி ஆரம்பிப்பது, முடிப்பது?"  எவ்வளவு நிமிஷம் ? என்ன ராகம்?  எத்தனை வார்த்தைகளில் எளிய, சந்தம் அழகாக உள்ள  வார்த்தைகள்.  ஒருவர் தொந்தரவும் இல்லாமல்  ஏதோ ஒரு  ஊரில் ஓட்டல் அறையில் உட்கார்ந்து காகிதங்களை கிறுக்கி கிறுக்கி  வீசி எறிந்து ..... என்னுடைய இயலாமையில்  எல்லோர் மேலும் கோபம் வந்து, கடைசியில் என்னால் எழுதவே முடியாமல் பல வாரங்கள் மாதங்கள் ஆனாலும் வெளியே தலை காட்ட முடியாமல்  போய்விடும். இப்படிப் பல பேருக்கு நடந்திருப்பதால்  இப்படி ஒரு ஜோசியம் சொன்னேன்.

இதெல்லாம் துளியும் இல்லாமல்  ஒரு மஹான்  வேறே லெவலில் இருந்தவர்..என் போல் இல்லை.  பாட்டு பிறர் சொல்லிப் பாடாதவர். தன் மனதில் ராமனைத்  தவிர வேறு யாருக்கும் எதற்கும்  இடம் தராதவர்.  உலக வாழ்வின்  வசதிகள் சுகங்களை  மனதாலும்  நெருங்காத  எளிய  பக்தர். 

ராம நாமமே  பலகோடி மூச்சாக நாம ஸ்மரணையில் உயிர் வாழ்ந்தவர். ராமனை நினைத்து மனதால் அவனோடு வாழ்ந்து,ஒவ்வொரு ணமும் அவனுடைய உணர்வில் திளைத்து மகிழ்ந்து அவனையே ரசித்து ருசித்துப்  பல்லாயிரம் பாட்டு பாடியவர். அவர்  இந்த ராகம் தான் போடவேண்டும் என்று யோசித்து போடாதவர்.  பாடல்களில் வார்த்தைகள் மனதில் பக்தியால் உருவானவை. அதற்கான ராகமும் தானாகவே பொருத்தமாக முளைத்தது.

ராமனே தன்னைப் பற்றிய  அவர்  கீர்த்தனைகளுக்கு   தானாகவே   தகுந்த, பொருத்த மான ராகங்களை ப்ரயோகப்படுத்தி அவரைப் பாட வைத்தான். தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகளின் பதங்கள்,  வார்த்தைகள் அவர் யோசித்து எழுதவில்லை. உள்ளத்தில் பொங்கிய அபரிமிதமான பக்தியில் விளைந்த ஸ்வயம்பு.   ஆற்றில் வெள்ளம் நதியைக்  கேட்டுக் கொண்டா, முன்னேற்பாட்டுடனா ஓடுகிறது?  அது போல் லக்ஷக் கணக்கான  பாடல்கள் ராமன் மேல் தானாகவே  அவர் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன.  எதையும் எழுதி மனப்பாடம் பண்ணவில்லை,  ராமன் எதிரே  தீபமேற்றி அதன் ஒளியில் அவன் திருமுகத்தை பார்த்தவாறு  தம்புராவை மீட்டி  கண் மூடி  தியானத்தில்  பாவம் (bhavam ) உணர்ச்சிப் பெருக்கோடு புறப்பட்டது. வார்த்தைகள்  தானாக வரிசையாக விழுந்து  ராகத்தில்  நுழைந்து  கீர்த்தனையாக வெளிவந்தது. அப்படி அவர் பாடியது  எண்ணற்ற பாடல்கள், நமக்கு கிடைத்ததோ ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே. 

அவர் ஒரு கருவி.. ஹார்மோனியம், வயலின் வீணை மாதிரி.   தம்புராவை மீட்டியவுடன் கண்ணை மூடிக்  கொண்டு தேவகானம்  புறப்பட்டது. அப்படி ஒரு பாடல் இது:   பல நூறு ஆண்டுகள் ஆகியும் கேட்க திகட்டாதது.  பலமுறை கேட்டிருந்தும் இன்றும்   நான் கேட்டது..

பல்லவி  
மோக்ஷமு கலதா புவிலோ
ஜீவன்முக்துலு கானி வாரலகு
அனுபல்லவி
ஸாக்ஷாத்கார நீ ஸத்- பக்தி
ஸங்கீத ஞான விஹீனுலகு (மோ)
சரணம்
ப்ரா(ணா)னல ஸம்யோகமு வல்ல
ப்ரணவ நாத ஸப்த-ஸ்வரமுலை பரக
வீணா வாதன லோலுடௌ ஸிவ மனோ-
வித(மெ)ருகரு த்யாகராஜ வினுத (மோ)

திருவையாற்றில் காவேரி பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதன் கரையில் எளிய தனது இல்லத்தில்  தியாகராஜ ஸ்வாமிகள் எதிரே பட்டாபிஷேக ராம விக்ரஹத்தின் எதிரே அதற்கு பூஜை பண்ணி, நைவேத்தியம் படைத்து, ஆனந்தமாக அதை மகிழ்விக்க  திடீரென்று தோன்றிய ஒரு  கீர்த்தனையைப்  பாடுகிறார். 

ஹே, ஸாக்ஷாத்கார ஓம்கார நாதமே, இந்த பூமியில் ஜீவன் முக்தன் ஆகாமல் எவனாவது மோக்ஷம் அடைய முடியுமா? உன்னுடைய திவ்ய  புனித சரணாரவிந்தங்களில் பக்தி இல்லாமல், அதை இசையோடு கலந்து உன்னை மகிழ்விக்காமல் சங்கீத ஞானம் இல்லாமல் எவராவது முக்தி பெறமுடியுமா?

சங்கீதம் ஜீவன் உள்ளது, உயிர் மூச்சுள்ளது, உடல் பக்தியால் உஷ்ணமடைந்து, உஷ்ணம்  உயிரின் வெம்மையான  மூச்சு கலந்தால் அல்லவோ அளவான  பிரணவ நாதம் சேர்ந்த பக்தி ஓங்காரநாதம் கிடைக்கும். அதுவே  ப்ரணவநாதமாக  ஏழிசையாகி  வீணாகானமாக நாத ஓங்காரமாக சிவனை உணர்விக்கும்.    இந்த  அருமையான  பாடல்  சாரமதி என்ற  மதிமயக்கும்  ராகத்தில் பாடப்பட்டுள்ளது. 

சிவன் சாம கானப்ரியன் . ராவணேஸ்வரன் தனது இசையால் வீணை மீட்டி சிவனை  மகிழ்வித்து வரம் பெற்றவன் என்று தெரியுமல்லவா?

இந்த பாடலை இன்று  ஸ்வாதி திருநாள் என்ற மலையாள படத்தில்  சாரமதியில்  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  சிம்பிளாக  பாடுவதை நான் கேட்டதை நீங்களும் கேளுங்கள் 

 
https://youtu.be/aclRf3p-B4I

No comments:

Post a Comment