Saturday, October 15, 2022

RELIEF

 


எது  சிறந்த அங்கம்?
   நங்கநல்லூர்  J K  SIVAN

பள்ளிக்கூடத்தில்  கற்றுக் கொடுக்காத  பாடம் எல்லாமே  அம்மா தான்  கற்றுக்கொடுப்பவள். அவள் படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை.  அவள் உலக அனுபவம் போதுமே.  நிறைய படித்த, பட்டம், வாங்கிய  நிறைய சம்பளம் வாங்கும்  ஆசிரியைகள் சொல்லிக் கொடுக்க தவறியதை  என் அம்மாவிடம் தான் நான் தெரிந்துகொண்டவன்.    எவ்வளவு வேலைகள் இருந்தாலும்  கேள்விகள் கேட்டால் பொறுமையாக  பதில் சொல்வாள். 

அப்படித்தான்  ராகவ் என்பவனின் அம்மாவும்.  எட்டு க்ளாஸ் படித்தவள். ஆங்கிலம்  பேசவோ படிக்கவோ சிரமப்படுபவள். 

''ராகவ்.  நீ  ஐந்தாவது வகுப்பு,  ஆங்கில மீடியத்தில் நிறைய  படிக்கிறாய்.  உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமாடா ?''
''கேளும்மா''
''நம்ம உடம்பிலேயே முக்கியமான உறுப்பு எதுடா ?''
''நமக்கு சப்தம் அவசியம்  ஆகவே  காது தான்  அம்மா,  உடம்பிலேயே முக்கியமான  பாகம்.  அதால் தான் எதையுமே  கேட்க,  பார்க்க, புரிந்து கொள்ள, தெரிந்துகொள்ள, பதில் சொல்ல முடிகிறது''என்று சொன்னான்.
''இல்லேடா,ராகவ். நீ சொல்றது சரியில்லைன்னு தோண்றது . 
எத்தனையோ பேர்  பிறவி செவிடர்களாக இருந்தும்  நீ சொன்னதெல்லாம் செய்ய முடிகிறதே''

சில மாதங்கள் கழித்து அதே கேள்வியை அம்மா கேட்டபோது ராகவ் சொன்ன பதில்:
''எனக்கு இப்போ  பதில் தெரிந்து விட்டதும்மா. . கண் தான்  அம்மா உடம்பிலேயே முக்கியமான உறுப்பு' அதால் தான் பார்க்க வாழ முடிகிறது''

''இல்லேடா எத்தனையோ  பேர்  பிறவிக் குருடர்களாக இருந்தும்  வாழ்கிறார்களே . யோசித்து சொல்லு''

ராகவ் வளர்ந்துகொண்டே யோசித்துக்கொண்டும் இருந்த போது  சில மாதங்களுக்குப் பிறகு  ஒருநாள் வீட்டில் அவன் தாத்தா காலமானார். அப்பா  கதறி அழுவதை, மற்ற உறவுகள் கண்ணீர் விட்டு கலங்குவதை, அம்மா  சோகமாக இருப்பதை அன்று தான் பார்த்தான். 

எது சிறந்த உறுப்பு உடலில் என்ற கேள்விக்கு பதில் அப்போதும் தேடிக்கொண்டே இருந்தான். அவனும் அழுத   போது அம்மா அவனை அரவணைத்து தாங்கிக்கொண்டாள்.

''மகனே,ராகவா,   ஒருவன் வாழ்க்கையில் நல்லபடியாக இரக்கத்தோடு,பிறருக்கு ஆறுதலாக  வாழ்ந்தானா என்பது தான் முக்கியம். இன்று அந்த கேள்விக்கு  பதில் தெரிந்து  கொள்ள  வேண்டிய நாள்.

ஒருவனின் உடலின் முக்கிய  உறுப்பு  தோள் தான். ஒருவர் சோகமாக இருக்கும்போதோ, உடைந்து போன போதோ,அவர் அழும்போதோ  அவருடைய தலையை, உடலை  ஆதரவோடு, ஆதங்கத்தோடு  தடவிக்கொடுத்து தாங்குவது  தோள் தான்.  ஒருவர்  துக்கத்தை வெளிப்படுத்த, ஆற்றிக்கொள்ள , மனத்தின் பாரம், அழுத்தம் கலைய ,  மனம் உருகி  அழுவதற்கு  தேடுவது, அன்பான ஒரு  தோள் தான் அப்பா. 

உனக்கு நல்ல நட்பும், அன்பும்  பரிமாறிக்கொள்ள  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தோள்கள்  நீ அழும்போது   உன் கண்ணீரை துடைக்க, உன் துயரை மாற்றிக்கொள்ள  ரொம்ப  அவசியம்.

உடலின் மற்ற உறுப்புகள்  சுய லாபத்துக்காக சுய  நலனுக்காக படைக்கப்பட்டவை என்று ராகவனுக்கு அப்போது தான் புரிந்தது. திடமான தோள்  மனிதனுக்கு வாழ்வில் தேவையான  பாரம் சுமக்கவும், அதோடு கூட  பிறருக்கு  ஆறுதலளிக்கவும்  இறைவனால் அளிக்கப்பட்டது என்று ராகவனுக்கு துல்லியமாக அப்போதுதான்  புரிந்தது.  

நாம் செய்த  காரியங்கள், சொன்ன சொல், கொடுத்த பணம், எதுவுமே மறந்து விடும். ஆறுதலாக கைத் தாங்கலாக தோளில்  அழுத்தி அணைத்துக்கொண்டு  ஒருவர் அழும்போது   மௌனமாக  முதுகில் தடவி விட்டது மறக்கவே மறக்காது. மற்றவர் துயர் தீர்க்க உதவும் தோள்  உண்மையில் கடவுள் மாதிரி.   பிறர் நலம் பேணும் உறுப்பு.

No comments:

Post a Comment