Thursday, June 9, 2022

old order changeth

 


மாற்றம் எதனால்?   -   நங்கநல்லூர்  J K   SIVAN 

குடும்பங்கள் ஒன்றாக  பெரிதாக இருந்த காலம். பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
தாத்தா  பாட்டி  ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள்.  அவர்கள் சொல் எடுபட்டது.  பாரம்பர்யம் தொடர்ந்தது.

காலம் மாறிவிட்டது.  ஜாதி வித்யாசங்கள் அதிகமாகிவிட்டது.  ப்ராமண  குடும்பங்கள் சிதறி விட்டன.  குழந்தைகள் வளர்ந்து படிப்பதே,  வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க. அங்கேயே சாஸ்வதமாக தங்கிவிட...இங்கே ப்ராமண சமுதாயம் எப்படி  பலப்படும்.  தனித்தனியாக வளர்ந்து, படித்து, சிந்தித்து அதன்பயனாக  பரஸ்பர  ஒற்றுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. 

வெளி நாடு சென்று இப்படிப்பட்ட  ஹிந்து குடும்பங்கள் கலாச்சாரம் இழந்தது.  மதம் மாறியது. பக்தி பாரம்பரிய நம்பிக்கைகள் அழிந்தது.  பணம், அது தரும் சுகம் ஒன்றே பிரதானமாக போய்விட்டது. தாய்நாட்டில் வாழும்  குடும்பங்கள் உறவுகள் மறுக்கப்பட்டன. மறக்கப்பட்டன.   வாட்சாப், வீடியோ, யூட்யூப்  கொஞ்சத்துக்கு  கொஞ்சம் உறவுகளை இணைக்கிறது என நம்புகிறேன்.

அதேபோல் கொஞ்சம் கொஞ்சம்  பக்தி உணர்வு, ஆன்மீக சிந்தனைகள், சாஸ்த்ர சம்பிரதாயமும் கூட அங்கே தலை எடுக்க காரணம், அநேக ஹிந்துக்கள் அங்கே  சென்று குடியேறிவிட்டதால்.   

நம்முடைய நல்லகாலம்  சுவாமி விவேகானந்தர் புயல் போல் சுற்றி  1893ல் உலக ஆன்மீக  மாநாட்டில் ஹிந்து சனாதன தர்மத்தை பறைசாற்றி மேற்கத்திய நாட்டு மக்கள்  அதில் ஆர்வம் காட்டினர். சுவாமி ராம தீர்த்தர்  1902ல்  சென்றார்.  ரெண்டு வருஷங்கள் வேதாந்தத்தை விளக்கி சென்ற இடமெல்லாம் சொன்னார்.
1920ல்  பரமஹம்ச யோகானந்தர்  மேல்நாட்டில் சுற்றுப்பியாணம் செய்து ஆன்மீகத்தை பரப்பினார்.
சுவாமி பிரபுபாதா அமேரிக்கா சென்று காட்டுத்தீயாக  ISKCON   இஸ்கான்  கிருஷ்ண பக்தி எண்ணற்ற வெளிநாட்டினரை  ஹிந்து சமயத்தை ஆர்வத்துடன் நாட செய்தது. இன்னும்  சக்தியோடு பலத்தோடு உலகெங்கும் செயல்பட்டு வருகிறது.

அச்சு இயந்திரம் பழக்கத்தில் வந்து இந்து சமய  நூல்கள்  பல்வேறு இந்திய மொழிகளிலும்  ஆங்கிலத்திலும் இன்னபிற மேலை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு  ஹிந்து கலாச்சாரம் மேலை நாடுகளில் அறியப்பட்டது.  ஹிந்துக்களைப்போலவே  மற்ற மதத்தினரும்  மேலை நாட்டில் தத்தம்    நம்பிக்கைகளை, பக்தியை ஊன்றினார்கள்.   டேப்  வீடியோக்கள்  பழசை நினைவூட்ட  புதுப்பிக்க பெரிதும்  உதவியதில் விஞ்ஞானமே உனக்கு கொஞ்சம் நன்றி.

மேலைநாடுகளில் குடியேறியவர்களில் பாதிக்கு மேல் ஹிந்துக்கள் என்று சொல்லும்படியாக பெருகிவிட்டார்கள்  என்பதால் இங்கே நாம் இழக்கும்  ஆன்மிகம் அங்கே வளர்கிறது.  இங்கே கோவில்கள் சீரழியும் நேரம் அங்கே  அற்புதமான  கலைச்சிற்பங்களோடு  புனர்ஜன்மம் பெற்று  பெருவாரியாக மதிக்கப்பட்டு  ஆன்மீகத்தை  நிலைநாட்டி மனதுக்கு நிம்மதி தருகிறது.

1957ல்   கலிபோர்னியாவில் சிவ முருகன் ஆலயம்,  1972ல் நியூயார்க்கில் மஹா வல்லப கணபதி  தேவஸ்தானம்,  டெக்ஸாஸ்  மாகாணத்தில் ஆஸ்டின்  நகரத்தில்,  ராதா மாதவ சுவாமி ஆலயம்.
1981ல்  மாலிபுவில் வெங்கடரமண சுவாமி ஆலயம்.   சிகரம் வைத்தது போல்  பிட்ஸ்பர்க் நகரத்தில் வெங்கடேஸ்வரன் ஆலயம். ஸ்வாமிநாராயணன் ஆலயங்கள்,  2011ல்  வட கரோலினாவில் சோமேஸ்வரர் ஆலயம்.  அமெரிக்கர்கள்  வேதங்கள், ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் சொல்வதில் என்ன ஆச்சர்யம்.
நாம் இங்கே எல்லாவற்றதையும் மறப்பதிலும் என்ன ஆச்சர்யம்?

அங்குள்ள  ஹிந்துக்கள்  கல்யாணம், உபநயனம், சீமந்தம், வளைகாப்பு, மார்கழி எல்லாம் கொண்டாடுகிறார்கள்.  இங்கே  பூணலை ஆணியில் மாட்டிவிட்டு என்றோ ஒருநாள் போட்டுக்கொள்கிறோம்.  சந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் காகிதத்தோடு நின்றுவிட்டது.
சுற்று சூழ்நிலை தான் ஒருவன் குணத்தை மாற்றுகிறது.  இனியாவது பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டால் நாம் அழிவதோடல்லாமல் நமக்கு முன்பே நமது கலாச்சாரம் பண்பாடு மறையும் குற்றங்கள் பெருகும்.  இதைத்தான் பழையன கழிதல் புதியன புகுதல் என்று புரிந்து கொள்கிறோமோ?.... old  order  changeth  yielding  place to new .... இது தானா?

No comments:

Post a Comment