Saturday, June 4, 2022

DHAYANA AND JAPAM



 தியானமும்  ஜபமும்   -  நங்கநல்லூர்  J K  SIVAN


என்னை ஒருவர்  கேட்கிறார்:  
''நீங்கள்  என்னவோ எப்போ பார்த்தாலும்  சாமி சாமி என்கிறீர்களே,  கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன தப்பு?''
'இந்த சிவன் பதில் வேண்டாம். சுவாமி சிவானந்தா சொன்ன பதில் போதும்:

''தெய்வ நம்பிக்கை இல்லையென்றால்  பிறவிகள் தொடரும், அதற்குண்டான துன்பங்களும் கூடவே  வரும். ஆத்மாவை  அறியாதவன், மதிக்காதவன் பலனை அனுபத்து தான் ஆகவேண்டும். துளியும் சந்தோஷம் இன்பம், ஆனந்தம்  வாழ்வில் இருக்காதே. இந்த உலகிலும் அடுத்து வருவதிலும் இல்லை.   எது சரி  எது தப்பு என்று தெரியாத  வாழ்வில் இது தான் நேரும்.  அதை அறியும்  பாகுபாடு மனதில் இல்லையே. பொறாமை, பேராசை, கோபம் ஆத்திரம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வாட்டும். நேர்மையற்ற, அநியாய வழியில், அக்ரமத்தால் சேர்த்த சொத்தே வினையாகும்.  ஒரு ராக்ஷஸ வாழ்வை தேர்ந்தெடுத்தால் அதன் விளைவும் சாதகமாகவா இருக்கும்? லட்சியமில்லாத வாழ்க்கை  பேராபத்தில் கொண்டு விடும்.
விடிகாலை நாலு மணி  ப்ரம்ம முஹூர்த்த நேரம். மனது அமைதியாக ஒன்றுமே  எழுதாதவெற்று  வெள்ளைக்காகிதமாக இருக்கும்.   எங்கும் அமைதி, நிசப்தம்,  குளிர்ந்த காற்று இதமாக உடலை அணைக்கும்போது உள்ளம் முழுதும் இறைவனை நிரப்பி தியானம் செய்தால் அதன்  ருசியே தனி.
பிரம்மத்தை  பெறும்  நேரம் என்பதால் தான் அதற்கு ப்ரம்ம முஹூர்த்தம் என்று பெயர்.   இறைவனை அரைமணி நேரமாவது ஆனந்தமாக  துய்க்கலாம்.

ஜபம் செய்வது  என்றால்  பகவான் நாமத்தை திரும்ப திரும்ப விடாமல்   இடையூறு இல்லாமல், மனத்தை முழுதும்  ஈடுபடுத்தி சொல்வது.   தியானம் என்பது ஒரு சிந்தனையில்  விஸ்தாரமாக யோசித்து சிந்திப்பது. அதன் ஆனந்தத்தில் மகிழ்வது.  உதாரணம் சொல்கிறேன்:   ஓம்  நமோ நாராயணாய, ஓம் நமசிவாய என்று  இடையூறில்லாமல்  எண்ணம் சிதறாமல்,   108, 1008 தடவை சொல்வது ஜபம்.  

பகவான் . கிருஷ்ணனின் சங்கம், சக்ரம், புல்லாங்குழல், அவன்  கீதை, அவன் அழகு, கம்பீரம் இதுமாதிரி  மனதுக்கு பிடித்த விஷயத்தில் பூரா மனதை செலுத்துவது தியானம்.  தனைமறந்த நிலை.  நான் சொன்னது கிருஷ்ண தியானம், இது போலவே  , பிள்ளையார், அம்பாள், சிவன் என்று எந்த தெய்வ சிந்தனையிலும், தியானத்திலும்  ஈடுபடலாம்.

No comments:

Post a Comment