Saturday, June 4, 2022

AVVAIYAR

   ஒளவையார் -  நங்கநல்லூர்  J K  SIVAN


ஒளவைப்  பாட்டியின் பாடல்கள் என்  மனதில் நீங்காத இடம் பெற்றவை  அடிக்கடி அவள் பாடல்களை பற்றி எழுதுத  ரொம்ப பிடிக்கும்.
பாசம்  அனைவரையும்  கட்டி  அணைக்கிறது.  பணம் உறவைப் பிளக்கிறது. இது எல்லோரும் ஆமாம் என்று  தலையாட்டி  ஒப்புக்கொள்ளும்  விஷயம்.  அந்த பணம் தான்  சிலரை  ஒன்று சேர்க்கிறது. பணமா  பாசமா  என்பது இப்போது  பிரச்னை  அல்ல. ஒரு  கஷ்டமான  நேரத்தில்  யார்  உதவுகிறார்கள்,  யாரால்  துன்பம்  வருகிறது  என்று  ஆராயும்போது  தான்  புரிகிறது  (ரொம்ப  லேட்டாக),  கூடப்  பிறந்தவர்களும்,  நெருங்கிய  உறவினரும்  தானே   என்று  நாம்  அணைத்த  கரங்கள்  தான்  நம் கழுத்துக்கு கத்தியை  வீசுகிறது   என்கிற  உண்மை வாட்டுகிறது.  இத்தகைய  நேரத்தில்  அந்த  ஆபத்தில்  முன் பின் தெரியாத  யாரோ  ஒருவரால்  நாம்  காப்பாற்றப் படுவோம்.  அவர்  இறைவன் அனுப்பிவைத்த  முன் பின்  தெரியாதவர், அல்லது தெரிந்திருந்தாலும்  அதிகம்  பழகாதவர்,  நாம்  எதிர்பாராமல்  உதவி செய்த ஒரு  நண்பர் அல்லது  அவருக்குத் தெரிந்தவர்  வணங்கத் தக்க தெய்வம்.  நிறைய  பேர்  வாழ்வில்  அனுபவம் இது.

 இது  எதைப்போல?   நாம்  மூன்று  வேளையும்  சாப்பிட்டு  வளர்த்த நம்  உடலின்  பாகங்களிலே
 நம்மாலேயே  பல வருஷங்கள்  சுகமாக வளர்ந்த வியாதிகள், நோய்கள்  தான்  எதிர்பாராத  ஒரு  சமயம் விஸ்வரூபம்  எடுத்து  நம்மையே  சாய்க்க முயல்கிறது.  அந்த நேரத்தில்  நம்மைக் காப்பாற்றுவது எது ? எங்கோ ஒரு  மலையில், ஒரு  தோட்டத்தில்,  ஒரு  மரத்தில், செடியில்,  உதித்த  ஒரு  தாவரத்தின்  சாறு, சக்கை, அதன் பொடி , லேஹியம், அல்லது  அதையே  மிஷினில் அரைத்து  மாத்திரை...  இது போல்  முன் பின்  சம்பந்தமில்லாத  ஒன்று.  

ஆபத்துதவியாக  வந்த மேலே சொன்ன  நபர்கள்  சமய சஞ்ஜீவிகள்  இந்த மருந்து போன்றவர்கள்  - பாட்டி சொல்கிறாள் கேளுங்கள்:

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

அப்படி  எல்லாரையும் மதித்து, அன்போடு,  அவர்களுக்கு  வாரி வாரி வழங்கிய  ஒரு  நல்ல மனிதன்  ஒரு நாள் நலிந்து போனாலும்  பொருளின்றி வாடினாலும்  அவன் குணம்  மாறாதே. இருப்பதைக் கொடுக்கவும்  தயங்கமாட்டான்.  இன்சொல்  குறையாது.  அன்பு  குறையாது . கெட்டாலும்  மேன்மக்கள்  மேன்மக்களே  என்று  ஏற்கனவே  படித்தோமல்லவா.  அதே  தான்  இது.

கெட்ட ஆசாமிகள் பற்றி ஒரு வார்த்தை சொல்லியாக  வேண்டுமே. அவனும்  எப்போதும் ஒரே மாதிரிதான்.  நல்ல நாளிலேயே  உதவாதவன் நலிந்து போனால் நாயும்  சீந்தாதவனாகி விடுவான்.

பாட்டியம்மாள்   ஒரு  உதாரணத்தோடு விளக்குகிறாள்.  பொன் குடம்  உடைந்தாலும்  அதற்கு மதிப்பு உயரலாமே தவிர குறையாது.   அருகே இருந்த  மண் பானை உடைந்தால்  வாரி  வெளியே கொட்ட வேண்டியதுதான் அதன் நிலை.

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?

ஒரு ஆசாமியின்  உடை, பந்தா, பகட்டு, படாடோபம், வரட்டு  கவுரவம்  இதெல்லாம் அவனை மதிப்புக்குரிய வனாக்காது.  அமைதி, எளிமை,  இன்சொல்,  நாணயம்,  குறைந்த பேச்சு, இதுவே  அவனை உயர்ந்த வனாக்கும்.  இது  எதுபோலவாம்?

கற்றாழைக்கு  இலை  பெரியது.  வாசனை? நறுமணம்? ஹுஹும்.   சிறிய  துளசி இலை  இருக்கிறதே அது  உருவில் சின்னது தான். ஆனால் அதன் மதிப்பு, மணம் , மேன்மை எவ்வளவு உயர்ந்தது.   எனவே  உருவத் தைப் பார்த்து  மயங்காதே. உள்ளே இருக்கும் விஷயத்தைப் பார்க்க கற்றுக்கொள் என்கிறாள்  பாட்டி.

ஒரு  அழகான  பொருத்தமான  'நச்'' உதாரணம்;  கடல்  எவ்வளவு  நிறைய  நீர்  கொண்டது.  தாகத்திற்கு ஒரு டம்ளர்  குடிக்க உதவுமா? கிராமத்தில் சின்ன  ஆறு  வரண்டுபோனாலும்  ஒரு  சிறு ஊற்றுக்கண்  மண்ணைத் தோண்டினால்  நீரைக் கொடுக்கிறதே.  அதன்  ருசி  அவ்வளவு பெரிய  கடலுக்கு உண்டா?-- என்கிறாள். இது தான்  நல்லவனுக்கும்  தீயவனுக்கு  உள்ள  வேற்றுமை  என்கிறாள்.

எப்படிப் பாட்டி உன்னால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது?
 
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்

நல்ல  நண்பர் யார்,  சமய  சந்தர்ப்பவாதிகளான  போலி  நண்பர்கள்  யார்?  போலி நண்பர்கள் ஆதாயம் தேடுபவர்கள்.  எப்போது  இனிமேல்  ஒன்றும்  தேறாது  நம்மிடம்   என்று  அறிந்து கொள்கிறார்களோ   அடுத்த கணமே  துளியும்  மனத்தில்  நன்றியின்றி  பழசை  மறந்து பறந்து  விடுவார்கள். இவர்களா  நண்பர்கள், உறவினர்கள் ?
கிழவி  காலத்திலும் இப்படி இருந்தவர்களை அவளுக்கு தெரியும். உதாரணம் காட்டுகிறாள் பாருங்கள்:  இதோ பார் அந்த குளத்தை.  ஒரு காலத்தில்  வழிய வழிய நீர்  இருந்தது.  அப்போதெல்லாம்  எத்தனை  பறவைகள்  வரும்,  மீன்கள்  இருக்கும்.  மழையில்லை,  வானம் வரண்டது. வெப்பம் ஏறியது. எங்கும்  அனல்.  குளம் சுண்டி விட்டது.  இதை அறிந்த பறவைகள்  அங்கு எதற்காக வரப்போகிறது.  அகப்பட்டதை எல்லாம்  எடுத்துக் கொண்டாகிவிட்டதே.  குளம்  தனியாகி விட்டதா?  இல்லை. கண்ணுக்கு  லட்சியமாக  இல்லாமல் அப்போதும்  இப்போதும்  சாஸ்வதமாக  குளத்தில்  இருப்பது  அதன் அடியில்  மண்ணில்  வளர்ந்த, படர்ந்த  கொட்டி,  ஆம்பல், நெய்தல்  போன்ற செடி கொடிகள்  தான்.  குளத்தில்  நிறைய நீர்  இருந்தபோதும்  இப்போது வரண்ட நிலையிலும்  துணையாக  உள்ளது அவைதான். நேசத்தை நட்பை , இல்லாமையோ,  வறட்சியோ  மாற்ற வில்லையே'' என்கிறாள்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

No comments:

Post a Comment