Monday, August 30, 2021

ULLADHU NAARPADHU

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN---
 பகவான் ரமண மகரிஷி

 
''  ஸர்வம்  ப்ரம்ம மயம் ''


''பார்வை சேர், நாம் உலகம் காண்டலால்  நானா  ஆம் சக்தி உள ஓர்   முதலை ஓப்பல்  ஒருதலையே – நாம  உருச்
சித்திரமும் பார்ப்பானும்  சேர் படமும்  ஆர் ஓளியும் 
அத்தனையும்  தான் ஆம்  அவன் ''


நாம்  என்னென்னவோ  வித விதமான  வஸ்துக்களை, உயிர்களை உலகில் பார்க்கிறோம். அவற்றுக்கு மூலமான, ஆதாரமான ஏதோ ஒன்று இருக்கிறது  என்ற அளவில்  நாம்  அறிகிறோம்.இதெல்லாம்  பார்க்கிற, இல்லை,  அனுபவிக்கிற,   நாம்,---  நமக்கு முன் தோன்றும்   விதவிதமான  உருவம், பெயர்களோடு கொண்ட    வஸ்துக்கள், உயிர்கள்,  அனைத்தும்,  ----இந்த பொருள்களை உயிர்களை எல்லாம்  நாம் அனுபவிக்க வைக்கும், உணரவைக்கும் ஏதோ ஒரு சக்தியும்  --- ஒன்றே தான்.  அது தான் ப்ரம்மமாகிய ஈஸ்வரன்.

நமக்கு  கண்ணில் பட்டது, நாம்   இந்த உலகத்தில் அறிந்ததை, அனுபவித்ததை,  '' ப்ரத்யக்ஷம்'' என்கிறோம்.   நாம் அனுபவிக்க  வைத்த சக்தி  ''அபரோக்ஷம்''    நமது ஐம்புலன்கள் வழியாகத் தான் இந்த உலக அனுபவம் பெற்றோம்  அதை ''ப்ரதீதி'' என்கிறோம்.  இதிலிருந்து என்ன புரிகிறது.  கண் வழியாக பார்த்தது, காதால் கேட்டது, மெய் வாய் மூக்கு செவி இதனால் எல்லாம் அறிந்த ப்ரத்யக்ஷம் தான் நமது அனுபவமான ப்ரதீதி. ரெண்டும் ஒன்று.  ஏதோ ஒன்று  இதற்கெல்லாம் ஆதாரமானது என்று உணரவைத்ததே அது ''ஸத் ''  அதால்  தான் உலகத்தில் எல்லாம் புலனாகியது. ஆகவே  அதிலிருந்து தான் எல்லாமே  உருவாகியது.    காட்சி, காணுதல், காண்பவன் இந்த மூன்றும்   காரணமான  ''ஸத் '' தை ம

றைக்கும் திரை (ஆவரணம்),   மாயை.    


சாயந்திர  அரை இருட்டில்  கோபாலசாமி  ஒரு கயிறை பாம்பாக கண்டு  பயத்தில்  ஐந்தடி உயரம் தாண்டி குதித்தான்.  அந்த பயம்  பிரமை. கயிறு பாம்பு இல்லை, பாம்பாக மாறவில்லை.  கோபாலசாமி புத்தியில்  உண்மையை மறைத்து திரை போட்டது.  இந்த ஆவரணம் ஆத்மாவை கொஞ்சமும் பாதிப்பதில்லை.  புத்தியின் தோஷம்.  அருகே இருந்த ஒருவன்  டார்ச் அடித்து பார்த்தபின் கயிறு பாம்பு அல்ல என்று தெரிகிறது.  இதை தான்  அவித்யா தோஷம் என்பது.  விகல்பங்களை உண்டாக்குவது.  இல்லாதது இருப்பது போல் தோன்றுவது.   எல்லாம்  நான், நீ, அது அவன், சென்று ஏதோ ஸ்வரூபத்தில் காட்டுவது.  அனைத்தும் ஸத்தில் மறைந்துவிடும்  ஞானம் நமக்கு வேண்டும். 


எதிரே  பெரிய  கடல்.  அதில்  அலை,  நுரை, குமிழிகள், என்று பல வஸ்துக்கள்  தெரிகிறது.  உண்மையில் அத்தனையும்  நீர் ஒன்றே.  இப்படி  உணர்பவன் தான் ''ஏக த்வர்ஸி''   ஒன்றாக காண்பவன்,உணர்பவன்.  எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்,   ஸர்வம்  ப்ரம்ம மயம்   அவனன்றி ஓர் அணுவும் அசையாது  என்பது இப்போது புரிகிறதா?சகலமும்  ஆத்மாவின்  விகல்பம் .  

No comments:

Post a Comment