Sunday, February 21, 2021

VALLALAR

 


வள்ளலார்    ---       J K  SIVAN 
                 நானுனை மறவேன் 

இப்போது  நாம் கேள்விப்படுவது  புதிதல்ல. பல நெஞ்சங்களுக்கு  பழக்கமான விஷயம்.  ஆமாம்.  அம்மாவை  பிள்ளைகள் கூறு போட்டுக் கொண்டு  முறை  வாசல்  போல்  நாள் கணக்கில்  அவள் இடம்  மாறுகிறாள். ஒவ்வொரு  வீட்டிலும்  ஒவ்வொரு பிரச்னை. எல்லாவற்றுக்கும்  ஈடு கொடுத்துக்கொண்டு தான் அவள் நாளை எண்ண வேண்டும். வேறு வழியில்லை. 
எங்காவது  முதியோர் இல்லத்தில் இருந்தால்  அது  கொடுக்கும் காசுக்கு ஏற்ற  சகவாசம். சகவாசம் .இல்லையேல்  நரகமே  மேல்.  பணக்கார குழந்தைகள்  சுகவாச முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் அது குடும்பத்தோடு பிரிய நேர்ந்த சிறைவாசம் தான். அங்கே அன்புக்கு பாசத்துக்கு நேசத்திற்கு இடமே இல்லையே .  இது மக்கள்  தாயை பராமரிக்க தவறிய,  நன்றி மறந்த செயல் என்று ஏற்றுக் கொள்வோம்.
இதற்கு எதிரிடையாக ஒரு விஷயம்,   தாய் மகனை மகளை வெறுப்பது.  தாய் பேரில் சொத்து இருந்து அவள் தயவு  தேவையாக உள்ளவரை  தாய்  மக்களை மறக்க முடியும்.  அல்லது தாய் விரக்தியாக தனித்துச் சென்று பெற்றது எதுவுமே வேண்டாம் என்று வெறுத்துச் செல்லும்,  மறந்து போகும்,  தாய்களும் உண்டு.
குழந்தை  தாயை மறந்து,  பிரிந்து,  தந்தையோடு  செல்ல எத்தனையோ கருப்பு கோட்டுகள்  நீதி மன்றத்தில் சத்யம் செய்ய வைத்து  காசு வாங்கி பிழைக்கின்ற னவே.  தந்தை தாய் மார்களும்  குழந்தையை  மறக்கடிக் கிறார்கள். ஏதோ பணம் சொத்து பின்னணியாலா  வேறு ஏதோ விவகாரமா?  எதுவாக இருந்தால் என்ன.  அதே போல் தான் தாயும் குழந்தையை மறுக்கிறாள், மறக்கிறாள் , பிரிகிறாள் , என்ன சுகம் ,என்ன இன்பம்,  அந்த வாழ்க்கையில்?? அவளைத்தான் கேட்கவேண்டும்.
ஒருநாள் இந்த ஜீவன் தான் குடிகொண்டிருந்த உடலை மறந்து,  பறந்து விடுகிறதே. என்று, எப்போது,   எங்கே, என்று அது தான் முடிவெடுக்கும். அதற்கு தான் தெரியும்.    உடம்பும் இத்தனை நாள்  தன்னுள் இருந்து தன்னை இயங்க வைத்த, ஆட்டி வைத்த உயிருக்கு  '' பை பை '' காட்டி விட்டு  பிரிந்து விடுகிறது.மறந்து விடுகிறது. 
மனதிற்கு  இத்தனை வருஷ காலம் இரவும் பகலும் படித்து கற்றதெல்லாம் மறந்து ஏன் போகிறது?  தன்னுடைய  பேரைக் கூட  ஞாபகம் இல்லாமல்  ஏன்  மூளை மழுங்கி விடுகிறது.?  பாக்கெட்டில்  பேர் விலாசம் இல்லாவிட்டால் எவனாவது பிடித்துக்  கொண்டு போய்  கிட்னிக்காக  விற்றுவிடும் அபாயம் கூட இருக்கிறதே.
கண் நன்றாக  வெகு   தூரத்தில் ஓடும்  ஆட்டுக்குட்டியைக் கூட  ஒருகாலம்  பார்த்தது. இப்போது பார்வை மங்கி சுத்தமாக  அந்த காரமாக ஆக்கி விட்டதே.   விழிகள் விழித்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர  ஒளி யில்லையே.
சிவ பெருமானே, மேலே சொன்னதெல்லாம்  எது நடந்தாலும் நடக்கட்டும்,  நான் என்றும் உன்னை மறக்கவே மாட்டேன். என் வாயில்  ''ஓம்  நமசிவாயா;; என்று உன் நாமம் விடாமல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.   
மகா பெரியவா எப்போதும்  '' சிவ சிவா'' என்று சொல்லிக்கொண்டே இருங்கள் என்று உபதேசித்தது இதற்குத் தான்.  ஜபம் தவம் எல்லாம் எங்கோ  காட்டில் கண்ணை மூடிக்கொண்டு வருஷக்கணக்கில் உட்காருவ தில்லை. எந்த வேலை செய்து கொண்டிருந் தாலும் மனது அவனையே  நாடுவது, தேடுவது, அவன் நாமம் மறவாமல் ஒலிப்பது தான். 
இது ஒரு அற்புதமான  ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமி கள் எனும் வள்ளலாரின் எளிய தமிழ் பாடல். அர்த்தமே யாரும் சொல்லவேண்டாம். தானாகவே  பாடும்போது , படிக்கும்போது மனதில் நிறைந்துவிடும். 

''பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்


 நமச்சிவாயத்தை நான் மறவேனே''

No comments:

Post a Comment