Friday, October 30, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்      J K  SIVAN  

                                      
     ஆசார்யாளும்  அரியக்குடியும்.  3

''மஹா  பெரியவாளால்  எப்படி  சின்ன சின்ன  விஷயங்களைக் கூட  கவனமாகப்  பார்த்து பரிசீலனை செய்ய முடிகிறது என்பது உலக அதிசயம். அவரது ஞாபக சக்தியும், தெளிந்த சிந்தனைகளும் எத்தனையோ  பிரச்னைகளுக்கு  தீர்வாக , கேள்விகளுக்கு சரியான பதிலாக அமைந்து பலபேர் வாழ்க்கையில் மலர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

மஹா பெரியவா  சங்கீதத்தைப் பற்றி  அரியக் குடி ராமானுஜ ஐயங்காரிடம்  மடை திறந்த வெள்ளம்போல் சொல்லிக்  கொண்டிருக்கிறார்: 

''பழங்காலம் முதல் இப்போது வரை  தேவாரங் களும் , அவற்றைப் பாடும் முறையும், பண்  இசையும் ஓதுவா மூர்த்திகளால் தலைமுறை தலைமுறையாக   பக்தி ஸ்ரத்தையோடு உரிய  ராகத்தில்   கால ப்ரமாணத்தோடு  பாடப் பட்டு,  பாதுகாக்கப்பட்டு இன்றும்    முறை தவறாமல்   நமக்கு  கிடைக்கிறது.  உதாரணமாக  சங்கரா பரணம், நீலாம்பரி, பைரவி  போன்ற ராகங்கள்  பண்  வகையைச் சேர்ந்தவை. அதே போல் தான்   சௌராஷ்ட்ரம், , கேதார கௌளம் , காம்போதி யும்  கூட.   காம்போதிக்கு அக்காலத்தில்  பண்  வகையில் தக்கேசி  என்று பெயர். காம்போதி மேளகர்த்தா ராகம் இல்லை தானே?

''ஆமாம் பெரியவா.  ஹரிகாம்போதி  மேள  கர்த்தா ராகம்.  காம்போதி  அதன் ஜன்ய ராகம். இருந்தாலும்  காம்போதி பிரபலம்.  அப்பாவை விட பிள்ளை  பேரும்  புகழும் வாய்த்தவன், பிரபலமானவன் போல '' என்கிறார்  அரியக்குடி.

''ஓஹோ.  அப்போது  வேறே சில  ஜன்ய ராகங்க ளும் இப்படி பிரபலமாக இருக்கிறதா. சொல்?''   என ஆர்வமாக கேட்கிறார் பெரியவா.

''ஆமாம்  பெரியவா,  நடபைரவியின் ஜன்யராகம் பைரவி என்றாலும் பைரவி பிரபலமான ராகம். .

''ஆஹா  உன்னோடு பேசும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.  சரி நேரத்தை நான் வீணடித்துக் கொண்டிருக்கிறேனே. நீ பாடு கேட்போம். உன்னைக் கூப்பிட்டதே  பாடத்தானே.''

அற்புதமாக ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே  கீர்த்தனையை  அய்யங்கார்  பாடினார்.  ஒரு அபூர்வமான  பாடல் அது.   சுருதி பெட்டியோ , தாள  பக்க வாத்யமோ எதுவும் இல்லாமலே வெளுத்து வாங்கிவிட்டார்.  கண்களை மூடிக் கொண்டு தன்னை மறந்து  அரியக்குடியின்  காம்போதியில் லயித்துப் போய்விட்டார்  மஹா பெரியவா. 

''என்ன ஆச்சர்யம் பார்த்தாயா,   தம்புரா,  பக்க வாத்யம் எதுவுமேயில்லாமல்  நீ  முழு கீர்த்தனை யையும்  உன் அற்புதக் குரலில் ஒலி  பெருக்கி போன்ற  மிஷின்கள் எதுவும் மில்லாமல்   முழுதும் வெறும்  ராகம் பாவம், தாள அர்த்தத் தோடு  தூய்மையாக, முழு  அழகோடு,  நான் கேட்க எவ்வளவு அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறேன்'' அக்ஷரங்கள் ஸ்படிகம் பாதிரி பளிச்சென்று இருந்தது.   வார்த்தை புரிந்தது.  சந்தோஷமாக சொல்கிறேன்  '' திருப்தோஸ்மி''   எனக்கு  ரொம்ப

திருப்தி.   

இன்னொரு தடவை பாடு.   எதுக்கு ரெண்டாம் தடவை கேட்கிறேன் தெரியுமா? 

 ஒவ்வொரு வரி நீ பாடும்போதும்   நான் அதை  நிறுத்தி  அதன் அர்த்தம் சொல்லப்போகிறேன்.   உனக்கு அர்த்தம் தெரியாது என்று  நான் நினைக்
கலே,  அதற்காக இல்லை.  என் மனதை  முத்து ஸ்வாமி தீக்ஷிதர் மனசோடு இணைத்து அதை இயற்றும்போது   அந்த ஒவ்வொரு பொருத்தமான  சொல் கட்டு,  வார்த்தைக்  கோர்வை அழகில் அவர் மனநிலை எப்படி சந்தோஷப்பட்டு  இருந்திருக்கும்னு  ரசித்து மகிழ.  ஓர்   பெரிய  ஈடற்ற சங்கீத மூர்த்தியின்  க்ரிதியை ,  பகவான்  அனுக்கிரஹம் பெற்றவரின்  கீர்த்தனையின் உன்னத அர்த்தத்தை  மற்றவர்களும் புரிந்து கொண்டு அனுபவிக்கட்டும்  என்று தான். 

அரியக்குடி இன்னொரு தடவை  ''ஸ்ரீ சுப்ரமண் யாய ''   பாடினார்.  இந்த முறை ஒவ்வொரு வரியாக  பாடி  நிறுத்தினார்.  

இனி வரப்போவது தான் நமக்கு  விருந்து.  மஹா பெரியவா ஒவ்வொரு வரிக்கும் சொன்ன அர்த்தம். 

''ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே  என்றால் முருக பெருமானை வணங்குவது என்று புரியும் அல்லவா.  பக்தி மரியாதையோடு  ''ஸ்ரீ''  என்று  ஆரம்பித்து  முருகனை  வணங்குகிறார் தீக்ஷிதர்.  நமஸ்தே  என்று ஒரு முறைக்கு மேல் சொல்வது  நம் ரஜனி சொல்வது போல் ஒருதடவை சொன் னால் நூறு தடவை சொல்வது போல் என்று சந்தோஷமாக முருகனை பலமுறை  மனமார  நமஸ்கரிப்பது என்று எடுத்துக் கொள்வோம்.  ஆலயங்களில்  அதனால் தான்  ''போற்றி போற்றி'' என்று ஒருதடவைக்கு மேல் சொல்கிறார்கள்.  ''ஜய  ஜய''  ''ஹர  ஹர ''  சங்கரா என்று சொல்வ தில்லையா? ப்ரம்ம சூத்ரத்திலும் கூட  ஒரு வாக்கியம் முடியும்போது  ரெண்டு தடவை வார்த்தைகள் வரும்.

''நமஸ்தே  :   ''தே''   :  உன்னை    ''நம'' :  வணங்கு கிறேன்.  நம: தே :  என்பது நமஸ்தே  ஆகிறது. (நாலாம் வேற்றுமை உருபு)

யார் இந்த சுப்ரமணியன்?  யோசியுங்கள்.   உண்மை யான  நன்றாக கற்றறிந்த  ''ப்ரம்ம'' ண்யன்.   ப்ரம்மா என்றால்  என்றால் பிரம்மத்தை அறிந்தவன்,  உண்மையான கலப்படமற்ற  பரமாத்ம  ஸ்வரூபம்.   இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ''வேதம்''  என்றும்  சொல்லப் படுகி றது.  உத்தமமானது. ஸ்ரேஷ்டமானது.  குழந்தை
களுக்கு பூணல் போடுகிறோம், உபநய னம் .  மிக சக்தி வாய்ந்த  காயத்ரி மந்திரத்தை  ஆசார்யன், பிதா இருவரும் உபதேசிப்பதை '' ப்ரம்மோப தேசம்''  என்கிறார்கள்.   பிரம்மத்தை அறிந்து, புரிந்துகொண்டு, அதன் வழியில் நடப்பவன் தான்  ''ப்ரம்மச்   சாரி''  பிராமணர்கள் வேதத்தை  தவறின்றி ஓதுபவர்கள்.  சுப்ரமம்ண்யன் என்ப வன் தெய்வீகன், வேதத்தின்  நாதன், பிரம்மத்தை போற்றி பின்பற்றுபவன் அதன் தெய்வம்.''

இன்னும் இருக்கிறது. நீளமாக போய்விடுவதால்  அடுத்த கட்டுரையில் தொடர்வோம். சந்திப் போம்..

No comments:

Post a Comment