Wednesday, July 29, 2020

BHEESHMA




                           ஒரு  வீர  தாத்தா  J K  SIVAN  

மஹா  பாரத  யுத்தம்  விவரிக்க முடியாதபடி  அவ்வளவு பெரியது.  உலகமே  ரெண்டு பாதியாக பிரிந்து ஒரு பாதி இன்னொரு பாதியோடு  மோதினால் எப்படி இருக்கும்.  அது போல்  இருபக்கமும்  சைன்யங்கள்..   பதினெட்டு நாள் நடந்த போர்.  முதல் பத்துநாள் யுத்தத்தில்  கௌரவ   சேனையின் தளபதி பீஷ்மர். அவரின் வீரத்துக்கும்  சக்திக்கும்  சரியான ஜோடி   எதிர்  பக்கம்  இல்லை எனலாம்.



 பத்தாம்  நாள்   யுத்தம்  முடியும் தருவாயில்  பேரிடி  காத்திருந்தது  கௌரவ சைன்யத்துக்கு.   பிதாமகர்  பீஷ்மர்  பாண்டவர்களை   வறுவலாக  ஒன்பது நாளாக வாட்டி எடுத்தார்.    எப்படியோ  தாக்கு பிடித்தனர்  பாண்டவர்கள்.  கிருஷ்ணன் தான்  காரணம் இதற்கு.  

 “அர்ஜுனா,  உன் வீரம்  பீஷ்மன்  முன்  செல்லாது.   வீணாக பிரயாசை படாதே.  நான்  பார்த்து கொண்டு தானே  இருக்கிறேன்.   தர்மனை  வரச்சொல் உடனே”  என்றான்  கிருஷ்ணன்.  ஓடி வந்தான்  தர்மன் 

“யுதிஷ்டிரா,  பீஷ்மனை பூமியில் எவராலும்  வெல்ல முடியாது.  எனக்கு  தெரிந்து ஒரு வழி தான்  உண்டு.  பீஷ்மன்   பெண்களை எதிர்த்தோ  அல்லது  ஆணல்லாதவருக்கு  எதிராகவோ  ஆயுதம்  தொட மாட்டான்.  துருபதனிடம்  ஒருமுறை  நான்  பேசிக்கொண்டிருந்தபோது  அம்பை  என்ற பெண்  பீஷ்மனை  கொல்ல வென்றே  தவமிருந்து  ஆணாக மாறியவள்  அவனது  அரண்மனையில் வளர்கிறாள்  என்று சொன்னான்.
 அவள்  இந்த  போரில்  உனக்கு   உதவ வந்திருக்கிறாள். அவள்  பீஷ்மனை பழி வாங்க வென்றே  நீலத்  தாமரை மாலை சூடிக்கொண்டவள்.   ஆணாக  மாறியவள்.   சிகண்டி என்று பெயரோடு இப்போது  உன் சேனையில்  அங்கம் வகிக்கிறாள்  என்பது உனக்கு தெரியும்.   உடனே சிகண்டியை  வரவழை.  

இதோ பார்  அர்ஜுனா,  உன் மீது  பீஷ்மன்  எய்த கொடிய  சக்தி வாய்ந்த பாணங்கள் முழுதும்  நான் ஏற்று  அவை என்னை  சல்லடைக்   கண்ணாக்கி விட்டன. அவ்வளவும்  அர்ஜுனனை  நோக்கி  வந்தவை.  எனது பொறுமை எல்லை மீறி  ஒரு  கணம்  நானே பீஷ்மனை   கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன்.  பிறகு அமைதியானதற்கு  காரணம்  என்னை எப்படியாவது  ஆயுதம் எடுக்க  வைக்கிறேன் என்று  பீஷ்மன்  சபதமிட்டது நினைவு வந்ததால் .  எல்லாம்  உங்களுக்காக  நான்  தாங்கிக்கொண்டேன்.  பொறுத்து கொண்டேன்

''அர்ஜுனா  நான் சொல்வதை கவனமாகக் கேள்.  
இன்று  யுத்தம்  ஆரம்பிக்கும்போது  சிகண்டியை   உனக்கு  கவசமாக  முன்னிறுத்திக்   கொள்  எனக்கு  இனி  பீஷ்மனின்  சித்ரவதை  தாங்க முடியாது”  என்று  சிரித்து கொண்டே  சொன்னான்  கிருஷ்ணன். 

 பத்தாம் நாள்  யுத்தம்  துவங்கும்போது  பீஷ்மன்  ஆக்ரோஷத்தோடு  பாண்டவ சைன்யத்தை  நிர்மூலம் செய்ய வந்துவிட்டான்.  இன்றே கடைசிநாள்  அர்ஜுனனையும்   பாண்டவர்களையும்  வென்று  இந்த  யுத்தத்தை இன்றோடு  முடிக்கிறேன் '' என்று முடிவெடுத்தான்.
அர்ஜுனன்  முன்னால்  சிகண்டி நீல  தாமரை   மாலையுடன்  போரிட  வந்ததை  கவனித்த  பீஷ்மன்  சிந்தித்தான்.   ஓஹோ   இது நிச்சயம்   கிருஷ்ணனின்   திட்டம் போல் இருக்கிறது   என  சட்டென்று புரிந்து கொண்டான். சிகண்டி சரமாரியாக   பொழிந்த அம்புகளை  எதிர் கொண்டான்.  திருப்பி  தாக்காமல் அவற்றை ஏற்றுகொண்டான்.   பீஷ்மன்   சிகண்டியின்  சரங்களை  தாக்காமல்  இருந்த நேரத்தில்  அர்ஜுனனி ன் கடும்  தாக்குதல்கள்  பீஷ்மனை துன்புறுத்தின. கடைசியில்  வேறு  வழியின்றி பீஷ்மன்  குற்றுயிரும் குலையுயிருமாய்  யுத்த களத்தில் சாய்ந்தான்.

 பெரிய  ஆபத்திலிருந்து  பாண்டவர்களையும்   அவர்கள் சேனையையும்  கண்ணன் இவ்வாறு  மீட்டான்.  

“யுதிஷ்டிரா, அதோ பார்   பீஷ்மன் குற்றுயிராக  மடிந்து கொண்டிருக்கிறான். நீ   உடனே  செல். அவனுக்கு பணிவிடை செய்''   என்றான் கிருஷ்ணன்.

''அர்ஜுனா,  ஒரு  தாத்தாவுக்கு  பேரனிடம்  யுத்தம்  செய்து  தோற்பதில்  என்ன  ஆனந்தம்  இருக்கும் என்று  புரியும்   வயதில்லை உனக்கு.   இங்கே வா.  எனக்கு மரணம்  அடுத்த அயனத்தில்  தான்.  43  நாள்  காத்திருக்க  வேண்டும் நான்.  அதுவரை எனக்கு  ஒரு நல்ல  அம்பு  படுக்கை விரித்துக்  கொடு” என்றான் பீஷ்மன்.  அவ்வாறே  செய்தான் அர்ஜுனன்.  

“யுதிஷ்டிரா  இங்கே  வா. உனக்கு  நாராயணனின்  ஆயிர  நாமங்களை  சொல்கிறேன்  எழுதிக்கொள்  இதையே  ஸ்ரத்தையாக   யுதிஷ்டிரன் வியாசரிடம்   சொல்ல அவர்  நமக்கு  விஷ்ணு சஹஸ்ரநாமம்  தந்திருக்கிறார். படித்தால் மட்டும் போதாது,  காதில் சுகமாக அது விழுந்தால்  தான் மனதில் பதியும்  என்று கிருஷ்ணன்  M .S . சுப்புலக்ஷ்மி  என்ற ஒரு மனித தெய்வத்தை படைத்து  நீ இதைப் பாடு என்று கட்டளையிட்டு அவரும் அற்புதமாக பாடி  என்றென்றும் எல்லா வீடுகளிலும்  அது ஒலித்துக்கொண்டு கோடிக்கணக்கானவர் மனதில் பதிந்து விட்டது.   ஸர்வம் விஷ்ணு மயம்  ஜகத்

No comments:

Post a Comment