J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES

THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES

J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES

THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES

▼

Thursday, December 26, 2019

theerththa narayana



நாராயண தீர்த்தரும்  தீர்த்த நாராயணரும்?!!    ஜே கே  சிவன் 



ஸ்ரீ  கிருஷ்ணன்  அதிகமான  ஹிந்துக்கள் கொண்டாடும், அகில உலகம் அறிந்த  கடவுள் என்பது தெரிந்தாலும் அவனை கூடை கூடையாக  பாடி பரவசப்படுத்தியவர்களில் சிலரை நாம் ஞாபகம் வைத்துக் கொள்வோம். 

முதலில் மனதில் தோன்றுபவர் கண்ணனை குழந்தையாக ரசித்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும் பாடல்கள் யாவும் அவனது பால்ய லீலைகளை  ஊனக்கண்ணற்றவரான போதிலும்  ஞானக்கண் கொண்டு பார்த்து ரசித்த  சூர் தாஸ். அவரது  பாடல்களை எவ்வளவு ரசிக்கிறோம். நானே நிறைய எழுதி வருகிறேனே .

தென்னகத்தில், தமிழ்நாட்டில் வரகூரில் கண்ணன் உறியடி விழா உலக பிரசித்தம்.  அங்கே  ஒருவரை தேர்ந்தெடுத்த  கிருஷ்ணன்  ''நீ என்னைப்பற்றி பாடுகிறாயா? பாடு. நான் கேட்கிறேன்'' என்று கூறியது  ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி  இயற்றிய  நாராயண தீர்த்தர்.
ஆந்த்ர ப்ரதேசத்தை சேர்ந்தவர் நாராயண தீர்த்தர். குண்டூர் ஜில்லாவில் காஜா என்ற சிறிய கிராமம். பானக நரசிம்மனின் மங்களகிரி அருகே உள்ளது. அங்கே ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் ஏறக்குறைய 450 வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர் தீர்த்தர்.பெற்றோர் வைத்த பெயர் கோவிந்த சாஸ்திரி.
எங்கோ வெளியூர் சென்றவர் ஒரு ஆற்றைக்கடக்க நேரிட்டபோது திடீர் என்று வெள்ளத்தால் நீர் மட்டம் உயர, உயிர் தப்ப ஆபத் சன்யாசம் மேற்கொண்ட பின் நீர் மட்டம் குறைந்து உயிர் தப்பி அக்கரை சென்றார். வீட்டை துறந்து துறவியானார்.   காசி, கங்கை,கோதாவரி கிருஷ்ணா நதி தீர க்ஷேத்ரங்கள் சென்று திருப்பதி வந்தபோது கடுமையான வயிற்று வலி. அதோடு வெங்கடேச தர்சனம்.

'வேங்கடேசா, என் வயிற்று வலியிலிருந்து என்னை மீட்டு ஏற்றுக்கொள்'' என்று வேண்டினார்  நாராயண தீர்த்தர். .

'நாராயணா, நீ தெற்கே பூபதிராஜபுரம் செல்'' என்றான் திருமலையப்பன்.

தமிழகத்தில் திருவிடைமருதூர், திருவையாறு,திருமழப்பாடி என்று பல க்ஷேத்ரங்கள் சென்றார். வயிற்று வலி அதிகரித்ததே தவிர குறையவில்லை.

''ஸ்ரீநிவாஸா, என்னப்பா எதற்கு இந்த சோதனை எனக்கு?''

''நாராயணா, இதைக் கேள். நாளைக் காலையில் முதலில் ஓருவர் உன் கண்ணில் படுவார். அவர் பின்னாலே போ. நாளைக் காலையில் நீ கண் விழித்தவுடன் காண்பவர் பின்னால் செல். அவர் ஒரு இடத்தை உனக்கு காட்டுவார். அங்கே போனதும் உன் வயிற்று வலி மட்டும் அல்ல, நீ செய்த கர்ம வினைகளும் அகலும்'' என்றான் அன்று இரவு கனவில் திருமலையான்.வேங்கடேசன் மஹிமை, அதிசயங்கள் சொல்லி மாளுமா?

திடுக்கிட்டு கனவில் இருந்து விழித்து பொழுது விடிய காத்திருந்தார் நாராயணர். பறவைகள் கூவின. உலகம் உறக்கத்திலிருந்து மீண்டது. . அருணன் உதயமானான். ஆவலாக வெளியே வந்து யார் வரப்போகிறார் என்று காத்திருந்தவர் கண்ணில் தென்பட்டது மனிதர் எவருமல்ல. ஒரு வெள்ளை நிற பன்றி.

''ஓ, வராஹனே நீதானா அது ... அது ஓட அவர் துரத்த, எங்கெங்கோ போய் கடைசியில் தஞ்சாவூர் பூபதிராஜபுரம் கிராமத்தில் நுழைந்த பன்றி அங்கே இருந்த வேங்கடேசபெருமாள் ஆலயத்தை நோக்கி ஓடியது. நாராயணர் பின் தொடர்ந்தார். பெருமாள் ஆலயத்தில் நுழைந்த பன்றியை எங்கே காணோம்?

''அடாடா, வெங்கடேசா, என்னே உன் அருள். நீயா இப்படி எனக்காக ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றியாக) உருவெடுத்து இங்கு என்னை அழைத்து வந்தவன்?''

நாராயண தீர்த்தர் கண்களில் பிரவாகம். பன்றிமட்டுமா மறைந்தது. வயிற்று வலியும் காணோமே.!

''கூற்றாயினவாறு....வயிற்றினகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட'' என்ற தேவாரத்தை அப்பர் சூலை நோய் நீங்கி திருவதிகையில் பாடியது நினைவிருக்கிறதா?. அதே கதை தான் இங்கும். திருவதிகை வீரட்டானேஸ்வரன் போல வரகூர் வேங்கடேசனும் நாராயண தீர்த்தரின் சூலை நோயைப் போக்கினான். இந்த நிகழ்ச்சியால் பூபதி ராஜபுரம் வராஹபுரம்,,வராஹனூர் என்று பேர் பெற்று காலப்போக்கில் சுருங்கி இப்போது வரகூர் ஆகி நாம் உறியடி சென்று காணும் இடமாகி விட்டது.

ஜெயதேவரின் மறு பிறப்பு தான் கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றிய நாராயண தீர்த்தர் (1675-1745) என்று சொல்வதுண்டு.

வேதவியாசர் கலியுகத்தில் மூன்று பிறவி எடுத்ததாக சொல்வார்கள். ஒன்று ஒடிஸ்ஸாவில் ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்த அஷ்டபதிகளை அளித்தார். ரெண்டாவது பிறவி சிருங்கார மஹாகவி க்ஷேத்ரஞர் (1484 – 1564), 24000 பதங்கள் இயற்றியவர். அடுத்தது நாராயணதீர்த்தர்.  

இதுவரை  நாராயண தீர்த்தரை அறிந்து கொண்டீர்களே  தீர்த்த நாராயணரை தெரியுமா?

இதற்கு விடை:  ''  ஹுஹும்..   யார் அவர்?   நாராயண தீர்த்தரை பெயர் மாற்றி சொல்கிறீர்களா?'' 

தீர்த்த நாராயணர்  ஒரு  சித்த புருஷர். மஹா யோகி. பகவானின் அம்சம் என்றே சொல்லலாம். அவரைப் பற்றி நிறைய எழுதவேண்டும்.  எனக்கே  அவரைப்பற்றி இதுவரை தெரியாது.  சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். 

250 -300 வருஷங்களுக்கு முன் வடக்கே, கிரி துர்க்கம்  என்ற ஊரில் கங்காதர  சாஸ்திரிகள்,  மங்களாம்பிகை தம்பதிகளுக்கு  குழந்தை இல்லாமல் ஊரில் உள்ள ஒரு சிவன்கோவிலில் வேண்டிக்கொள்ள அனந்த பத்மநாபன் பிறந்து ஐந்து வயதில் உபநயனம், குருகுலவாசம்.  வேதாத்யனம் முடிந்து வீடு திரும்பி சின்னவயதிலேயே   சங்கரசாஸ்திரி மகள் சுசீலாவோடு கல்யாணம்.  சிலநாளிலேயே  க்ஷேத்ர யாத்திரை. காசி ,கோகர்ணம் உடுப்பி சுப்ரமணியா , எல்லாம் சென்று பூரி ஜகந்நாதர் தரிசனம். பத்மநாபனின்  பக்தி ஸ்தோத்ரம்  ஜலப்ரவாஹம் போல்  வெளிவந்ததில் மகிழ்ந்த  ஜகந்நாதன்,  ''இனி நீ  தீர்த்த நாராயணன்'' என்று நாமம் சூட்டினார். நமக்கு தீர்த்த நாராயணர் கிடைத்தார்.  

சுப்ரமண்யாவில் முருகன் அதேபோல்  அவர் ஸ்லோகத்தில் மகிழ்ந்து ' ஹே  பக்தா, தீர்த்த நாராயணா, நீ சோழ தேசம் போ.ஒரு மஹானை தரிசிப்பாய். பிறகு நீ ஈஸ்வர ஸ்வரூபியாவாய்'' என்று அருளினான்.

தீரத்த நாராயணர் சிதம்பரம் சென்றார்.  இன்னும் நிறைய சொல்லவேண்டியிருக்கிறது. நீளமாகி விட்டதால் இத்துடன் நிறுத்திக்கொண்டு அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.





ReplyForward

Compose:
New Message

MinimizePop-outClose

Compose:

- December 26, 2019
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me - YOUR FRIEND

  • J K SIVAN'S AALAYADHARSHAN AND STORIES
  • Unknown
Powered by Blogger.