Thursday, September 5, 2019

NARAYANA UPANISHAD



நாராயண உபநிஷத்   1  J.K.
SIVAN 

நேற்று   5.9.2019  இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர்  சர்வபள்ளி  டாக்டர்  ராதாகிருஷ்ணன்  பிறந்தநாளில். சிறந்த மேதை. ஆசிரியராக பணிபுரிந்தவர். அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக வருஷா வருஷம் கொண்டாடுகிறோம். அவரையும் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியராக வெகுகாலம் பணிபுரிந்த எனது தந்தையையும் வணங்கினேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் உபநிஷதங்களை பற்றி விளக்கி இருக்கிறார். அவற்றின் ஞாபகம் வந்தது. எனவே அவர் நினைவாக கொஞ்சம் உபநிஷத் பற்றி பேச விருப்பம்.   மைலாப்பூரில்  எட்வர்ட் எலியட்ஸ் என்பவன் பேரை மாற்றி ராதாகிருஷ்ணன் சாலை யாக்கியிருக்கிறார்கள். அந்த தெருவில் அவர் வீடு அப்படியே  இருக்கிறது. ''கிரிஜா'' என்ற அந்த வீட்டை கடந்து போகும்போதெல்லாம் தானாகவே இரு கரங்களும் கூப்பிக்கொள்ளும் வழக்கம் இன்றும் உண்டு.

இதுவரை நம்மிடம் உள்ள  உபநிஷத்துக்களில்  கொஞ்சம்  சின்னதாக ஒன்றை தேடும்போது  நாராயண உபநிஷத் கிடைத்தது. 

முதல்  42 ஸ்லோகங்கள்  இந்திரனை புகழ் பாடுகிறது.  பூமிக்கு நன்மை புரிபவன்.மழை அளிப்பவன்,   நம்மை பாதுக்காக்கும் தேவர் தலைவன் என்று சொல்கிறது.

43 வது ஸ்லோகம். இந்திரனோடு  கருடனையும் ப்ரஹஸ்பதியையும்  சேர்த்து புகழ்கிறது. 

44வது ஸ்லோகம்  சோமனை வர்ணிக்கிறது. சோமன் அவ்வளவு கோபிஷ்டன் இல்லை. கல்லை உபயோகப்படுத்துவான். எதிரிகளை வீழ்த்துவான்.சோமபானம் அருந்துபவன். 

45வது ஸ்லோகம். வேனன். உச்சி கால சூரியன். ப்ரம்மம் உதிக்கும்போது பிறந்தவன். எங்கும் வியாபிப்பவன். விண்ணும் மண்ணும் ஒளி பெறச்செய்பவன். 

46வது ஸ்லோகம். பூமியை போற்றுகிறது. துன்பம் நீக்கி இன்பம் அருள்பவளே என்கிறது. 

47 வது ஸ்லோகம்.  ஸ்ரீ எனும்  தாயாரை வணங்குகிறது. யாவற்றையும், யாவரையும் காப்பவள். பசுஞ்சாணத்தில் காணப்படுபவள் . நம் முன்னோர்கள் ஏன் பசுஞ்சாணத்தை கரைத்து வீட்டு வாசலில் மெழுகினார்கள் என்று இப்போது புரிகிறது. லட்சுமி கடாக்ஷம் அது.

48 -49  வது ஸ்லோகம். அம்மா  லட்சுமி, என்னிடமிருக்கும்  அலக்ஷ்மியை அகற்றிவிட்டு. அழித்துவிடு. தேவர்களை  ஸ்ரீ நாராயணனன் கொடிய ராக்ஷஸர்கள் அசுரர்களிடமிருந்து ரக்ஷித்தவன். இந்திரன் வஜ்ராயுதத்தால் நம்மை காப்பவன். இன்பத்தை அளிக்கட்டும். 

50வது.  என் ,பிரார்த்தனை தெய்வமே, உனக்கு  நான் சோமரசம் தயாரிக்க அருள் செய். யாகங்கள், தியாகங்கள் புரிய எனக்கு சக்தியை கொடு. எம்மை  எதிர்ப்போர்  நரகத்திலே நீண்ட நாள்  வாடட்டும். 
51-61 வரை ஸ்லோகங்கள்,  இந்திரனை, வருணனை, பிருஹஸ்பதியஹே ஸவிதுர்  தேவதைகளை போற்றி புகழ் பாடி எம்மைக் காக்க வேண்டும் என்று வேண்டுகிறது.

62 வது    கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதுத்ரி, மருத்வ்ருதா, அர்ஜிக்கியா, எல்லோரையும்  நான்  பாடும் பக்தி பாடல்களை ஸ்தோத்திரங்களை கேளுங்கள் வாருங்கள் என்று அழைக்கிறது. 

63வது    பரமாத்மன் நாராயணனுடைய சங்கல்பத்தால் சத்யம், உண்மை, இரவு பகல், கடல் நதிகள் ஆறுகள் எல்லாம் உண்டானது என்கிறது. 

64-65 வது ஸ்லோகங்கள். சமுத்திரங்கள் தோன்றியபின்  வருஷங்கள் உண்டானது. ராஜாக்கள்   உலகின் அறிவுள்ள அறிவில்லாத ஜீவன்களை ஆள்வதற்கு வந்தனர். சூரியன் சந்திரன், ஆகாசம், பூமி, விண்ணுலகம் எல்லாம் படைக்கப்பட்டது.  பிரளயத்திற்கு பின் மீண்டும்  உயிர்கள் தோன்றியதை  குறிக்கிறது.

66வது ஸ்லோகம்.  - வருணன்,  அகமர்ஷண ரிஷி ஆகியோர் எம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.ஹிரண்மயம் என்னும் பாபங்கள் செய்தோர் இருக்கும் நரகத்திற்கு செல்லாமல்  மீட்கட்டும்.

67வது ஸ்லோகம் -  பரப்பிரம்ம ஒளி இந்த பிரபஞ்சத்தை முளைவிடும் விதையாக சிருஷ்டித்து.   நானே அந்த ஜீவ காரண ஒளி.எல்லாவற்றிலும்  உயிராக மிளிரும் ஜீவ ஒளி அது தான்.  நான்  அழிபவனாக இருந்தாலும் என்னுள் அந்த   ப்ரம்மமாகிய நிரந்தர ஒளி இருக்கிறது. அந்த பிரம்மத் திடம் சரணடைகிறேன். 

68 வது.  சாஸ்திரங்களை மீறுபவன், திருடன், கொலையாளி, குருவை நிந்தித்தவன்,  இப்படி பாபங்களை புரிந்தவனையும்,  வருணன்  விடுவிக்கிறார். அவனை  இந்த மந்திரம், ஸ்தோத்ரத்தை சொல்வதன் மூலம்,  அவன் அருள் பெறலாம். 

69 வது.   நான் தான்  பாபங்களின் ஆதாரம் என்பதால்  என்னை அழவிடுகிறாய்.  கற்றோர்கள், ஞானிகள் என்னை அழவைக்கா தே  என் பாபங்களை அழித்துவிடு என்று வேண்டினால் அருள்வான் என்கிறார்கள். 

70வது பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமன் தான் அந்த   சமுத்திரம். அவனே ஸ்ருஷ்டி கர்த்தா. சகல ஜீவன்களையும் அதனதன் கர்மபலனுக்கேற்ப உருவமைத்து படைக்கிறான். பிரபஞ்ச நாயகன். கருணா சாகரம். பக்தர்களுக்கருளும் வள்ளல். சக்தியாகிய உண்மையுடன் சேர்ந்திருப்பவன் அவனே. எல்லா ஜீவர்களுக்குமுள்ளே  இருப்பவன் அவனே. கர்ம பல தாதா  அவன் தான்.

நிறைய  விஷயங்கள் இந்த உபநிஷத்தில் நமக்கு தெரிந்தவையாக இருந்தும் சுவையாக சில விஷயங்கள் நமக்கு புதிதானவை. இன்னும் மேற்கொண்டு சொல்கிறேன்.



No comments:

Post a Comment