Friday, June 21, 2019

SKST WITH BALVIKAS CHILDREN

 குட்டி கிருஷ்ணர்களோடு ஒரு மாலை வேளை - J K SIVAN
ஜூன்  16, 2019 ஒரு  ஞாயிற்றுக்கிழமை. சூரியனுக்கு ஞாயிறு என்று பெயர் என்பதால் அன்று சூரியன் நன்றாகவே வெப்பத்தை வாரி வீசினான்.  வாயு தேவன் சூரியனுக்கு துணை போனதால்  காற்றிலும் சூரியனின் வெப்பம் அதிகமாகவே  இருந்தது. வருணன் காணாமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது. கேட்கவேண்டுமா வறட்சிக்கு? . இருந்தாலும் ஒரு இன்ப நிகழ்ச்சி மனதுக்கு குளிர்ச்சி அளித்தது.  மயிலையில் ஸ்ரீ சத்யா சாய் பாபா  பால விகாஸ் என்ற ஒரு கல்வி நிலையத்தி லிருந்து ஸ்ரீ  கே.எஸ். சுந்தரராமன்  என்பவர் நங்கநல்லூருக்கு  சுமார்  50 குழந்தைகளை அழைத்து வருவதாகவும், அவர்களை க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் வரவேற்று அவர்களுக்கு  கிருஷ்ணன் கதைகள் சொல்ல முடியுமா என்று  கேட்டிருந்தததாகவும் சேதி காதில் எட்டியது.  கரும்பு   இந்தா என்று கொடுத்தால் '' இல்லை இல்லை  அதை சுவைக்க காசு கொடுத்தால்தான் முடியும்'' என்று ஒருவன் சொன்னால்  நிச்சயம் அவனுக்கு கரும்பும் கிடைக்காது, காசும் கண்ணில் படாது. இனிய சுவையும் இழந்தவ னாவான். SKST  அப்படி இழப்பவர்களா?  குட்டி  கிருஷ்ணர்களை குதூகலத்துடன் வரவேற்று  உபசரித்தோம்.   நம்பர் 20, முதல் மெயின் தெரு, ராம்நகர், நங்க நல்லூர் இல்லம்  திரு சூர்யநாராயணன் குடும்பத்தாரால் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் நற்காரியங்களுக்கு உதவுகிறது மட்டுமல்ல, அங்கு நடக்கும் நிகழ்ச்சி களில் முக்கிய பங்கு கொள்பவர்கள். ஆகவே அவர்கள் திருப்பதிக்கு சென்றா லும் குழந்தைகளுக்கு     குளிர்பானம், பிஸ்கட் முதலியன தயாராக வைத்து விட்டு தான் சென்றிருந்தனர்.   மாலை   4-15 - 4.30 மணி அளவில் ரெண்டு வேன் , கார்களில் குழந்தைகளும், அவர்களது குருமார்களும்  ஸ்ரீ சுந்தர ராமனுடன் வந்து சேர்ந்தனர். எல்லோரும் வெள்ளைக்கலை  உடுத்து, வெண்பற் களில் கள்ளமற்ற சிரிப்புடன் மகிழ்வூட்ட அவர்களையே கடவுள் வாழ்த்து பாட வைத்தோம்.  குழந்தைகளுக்கு குருமார்கள் அருமையான ஸ்லோ கங்களை சொல்லிக் கொடுத்திருந்ததால் அற்புதமாக அவர்கள் பாடினார்கள். பெண் உருவத்தில் ஒரு குயில் ஓரிரண்டு கிருஷ்ண கானங்களை பொழிந்தது.   SKST  காரியதரிசி ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன் எல்லோரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சி க்கு மூல காரணமாக முனைந்து செயலாற் றிய ஸ்ரீ  வி. ராஜாராமன் (ஆத்ம ஞான யோக பயிற்சி ஆசிரியர்)  குழந்தைகளுக்கு யோக பயிற்சியின் மூலம் விளையும் நன்மைகளை எடுத்து கூறினார். பாலவிகாஸ் நிர்வாக கமிட்டி  அங்கத்தினர் ஸ்ரீ சுந்தர ராமன் அடுத்து அவர்கள் நிறுவனம் எவ்வளவு அக்கறையோடு  குழந்தைகளை எதிர்காலத்துக்கு சிறந்த   சமூகத்தைஅளிக்க தயாரிக்கிறார்கள் என்பதை பற்றி விளக்கினார்.   SKST  சார்பில் குழந்தைகளை அன்போடு உபசரித்து, அவர்களுக்கு ஜிலு ஜிலு என்று  கிருஷ்ணன் வரும் கதைகளாக   சில  சம்பவங்களை  கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுத்து சொல்லும் பாக்யம் எனக்கு கிட்டியது. அதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றியை மனமார தெரிவித்து அத்தனை குழந்தைகளுக்கும் குருமார்களுக்கு  SKST  புத்தகங்களை பரிசாக வழங்கினோம்.   தொடர்ந்து பாலவிகாஸ் நிறுவனத்தோடு அடிக்கடி குழந்தைகளுக்கு  நிறைய நிகழ்ச்சிகள் நடத்த ஆர்வமாக இருப்பதையும் அறிவித்தோம்.  அனைவருக்கும் கிருஷ்ண பிரசாதம் வழங்கினோம் . ஆறுமணிக்கு குழந்தைகள் மனநிறைவோடு திரும்பி சென்றார்கள்.












No comments:

Post a Comment