Monday, January 21, 2019

VALLALAAR


மஹான்கள்   J.K. SIVAN 
வள்ளலார் 

               3.    ஜோதியில் கலந்த ஞானி 

வடலூர் ராமலிங்க அடிகள் என்ற பெயர்  சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற பெயரை விட  அதிகமாக  பரவ ஆரம்பித்து  விட்டது.  இருப்பினும்  வள்ளலார் என்ற பெயர்  உலகளவில் உலவுகிறது.

வள்ளலார் வாக்கு எப்படி என்று  ஒரு பாடலில் அவர் பாடுவதை ரசியுங்கள்: 

'''நான் உன் மூத்த பிள்ளை. என் கையில் கருணை நீதிச் செங்கோல் தரப்பட்டிருக்கிறது. ஜீவ காருண்யம் செய்வதற்கு என்றே  என் தெய்வமே,   நீ உன்னை என்னில் காட்டி உன்னில் என்னை ஏற்றுக் கொண்டாய். இனி எனக்கு துயர் இல்லை. நல்லதே செய்தாய். என் அன்னையே, அரசே, தந்தையே, எல்லாமும் நீயே, என் மனத்திலுருந்த திரையை நீக்கிவிட்டாய் .  உன் ஒளி இனி என்னுள்ளே, உன்னை சரணடைந்தேன்''
 ஒரு நாள் உள்ளேயிருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து அனைவருக்கும் காட்டி வெளியே வைத்தார்.

''இது தான் அருட்சோதி தெய்வம், ஆண்டருளும் தெய்வம்.'' என்று வழி காட்டினார். அன்பே தெய்வம், ஆருயிர்க்கெல்லாம் அருள் செய்க. கருணை செய்வீர்'' என்று உபதேசித்தார்.

''நான் இந்த அறைக்குள் செல்கிறேன். யாரும் கதவைத் திறக்க முயற்சிக்கவேண்டாம். அரசாங்கம் என் விருப்பை மீறி கதவை உடைத்து திறந்தாலும் உள்ளே நான் இருக்கமாட்டேன். எல்லா உயிரிலும் கலந்திருப்பேன் அவர்கள் எல்லா உயிரிடத்தும் காருண்யம் புரிய செய்வேன். இது என் முடிவு.

இப்படி  வள்ளலார்  சொன்னது  30.1.1874 நள்ளிரவு. உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை என சேதி கேட்டு தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர் டாக்டர்கள் புடை சூழ கதவை திறந்து உள்ளேசென்றபோது அங்கே அழுகிய பிண நாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பச்சை கல்பூர வாசனை மணத்தது.

அருளாளர் சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற இயற்பெயர் மறந்துபோய் உலகமுழுதும் வள்ளலார் எனும் புகழ்பெற்ற   அடிகளார் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.  

கோடிக்கணக்காக எத்தனையோ பேர் பல வருஷங்களாக இன்றுவரை வடலூரில் அவர் நிர்மாணித்த சித்தி வளாகம், சத்ய ஞான சபையில் பசிப்பிணி தீர்ந்து மகிழ்கிறார்கள். யார்போனாலும் சாப்பிடாமல் உள்ளே போகக்கூடாது. நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.  

முடிந்தபோதெல்லாம்  திரு அருட்பா பற்றி எழுதுகிறேன்.

No comments:

Post a Comment