Sunday, December 2, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 
மஹா பாரதம் 

                           குபேரனுக்கு சாபம்....

தீர்த்த யாத்திரை சென்ற அர்ஜுனன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான் என்ற சேதி காதில்  விழுந்த சந்தோஷம் எங்கே ஒரு சுகந்த புஷ்பத்தை தேடி சென்ற பீமன் இன்னும் திரும்பவில்லையே என்ற கவலையில் முக்கியத்தை இழந்தது.

வாருங்கள் பீமன் சென்ற வழியில் செல்வோம். என்று யுதிஷ்டிரன் சொல்ல, பீமனைத் தேடி,  யுதிஷ்டிரனும், கடோத்கஜனால் தூக்கிச்செல்லப்பட்டு  திரௌபதி, தௌவ்ம்யர், லோமசர்  முதலானோர் அந்த பாதையில் சென்றார்கள்.  ஏரிக்கரையில்  ராக்ஷர்களின் பிணங்கள்  கிடந்ததை கண்டதுமே  பீமன் தான் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். பீமனை எதிர்கொண்டார்கள்.  தூக்கமுடியாமல் சௌகந்தி புஷ்பங்களை சுமந்து கொண்டிருந்தான் பீமன். 

சௌகந்திகா  தாமரை மலர்களை  பாஞ்சாலி பெற்றுக்கொண்டாள் .  அனைவரும் ஏரியின்  அம்ருத நீரில்  குளித்தனர்.  ராக்ஷசர்கள் லோமசர்,தௌவ்ம்யர், யுதிஷ்டிரனை வணங்கினார்கள்.  ஆசி பெற்றார்கள்.   பாண்டவர்கள்  அர்ஜுனன் வருகைக்கு காத்திருந்தனர்.

ஒரு நாள்   பீமன் இல்லாத சமயம்  ஜடாசுரன் என்ற பெயர் கொண்ட ஒரு  ராக்ஷசன்  வேத பிராமணன்  உருவில் வந்து யுதிஷ்டிரனையும், நகுல சகாதேவர்கள், திரௌபதி ஆகியோரை கடத்திச் சென்றுவிட்டான்.

இதற்குள்  பீமன் திரும்பிவிட்டான்.  ராக்ஷசனைப் பார்த்துவிட்டான். அவன் தோளில்  சகோதரர்கள், பாஞ்சாலி இருப்பதைக் கண்டதும்  கடுங்கோபம் கொண்டு  அவனை தாக்கினான்.  வெகு சீக்கிரத்தில் ஜடாசுரன்  தலையிழந்து உயிரிழந்து  கூழானான்.

பிறகு  பாண்டவர்கள்  வதரி சென்று  நரநாராயணன் ஆஸ்ரமத்தில் தங்கினார்கள்.  '' சகோதரர்களே  அர்ஜுனன்  ஐந்து வருஷத்தில்  தீர்த்த யாத்ரை முடித்து திரும்புவேன்  என்றான்.  ஐந்து வருஷம்  ஆகிவிட்டது எந்நேரமும்  அவன் வருகைக்காக  காத்திருப்போம்'' என்று  யுதிஷ்டிரன் நினைவு கூர்ந்தான்.  பிறகு யாத்திரை தொடர்ந்தார்கள்.

 ஜனமேஜயா,   பிறகு   யுதிஷ்டிரனும்  மற்றவர்களும்   வழியில் ரிஷி  வ்ருஷபர்வரை அவரது ஆஸ்ரமத்தில் சந்திக்கிறார்கள்.  மகிழ்ச்சியோடு  ரிஷி அவர்களை வரவேற்று ஏழு நாட்கள்  அவரோடு  தங்குகிறார்கள். பறவைகள், மான்கள், மற்ற  ஜீவராசிகளோடு  அந்த சுகந்த கந்தமாதன பள்ளத்தாக்கில்  ஆஸ்ரமத்தில் இருந்து விட்டு,  அர்ஷ்டிசேன  ரிஷி ஆஸ்ரமம்  செல்கிறார்கள்.  தவம் செய்து, சதைகளை குறைத்து  வெறும் எலும்புக்  கூடாக இருக்கிறார்  அந்த  ரிஷி. சந்தோஷத்தோடு யுதிஷ்டிரனையும் மற்றவர்களையும்  உபசரிக்கிறார்.

 ''யுதிஷ்டிரா, இது தான் கடைசி,  கைலாச மலை சிகரத்தில் இருக்கிறோம்.  இதைத் தாண்டி போக அனுமதியில்லை.  எனவே  அர்ஜுனன் திரும்பி வரும் வரை இங்கேயே என் ஆஸ்ரமத்தில் இருங்களேன்'' என உபசரிக்கிறார் அர்ர்ஷ்டிசேன ரிஷி. 

அங்கே தங்கும்போது அநேக ரிஷிகள் முனிவர்கள் யோகிகள்  தினமும்  யுதிஷ்டிரனை , லோமசரை , தௌம்யரை  சூழ்ந்து கொண்டாரகள்.  வித விதமான  கனி வர்க்கங்களை  அளித்தனர்.  லோமசர்  கதைகளை அள்ளி வீசினார்.  சுகந்த, ரம்யமான,  இதமான, குளிர்ந்த  நதிகள் மணமிக்க  பூக்கள் வாசத்தோடு  காற்றை தெளிக்க, கைலாச  பர்வத சூழ்நிலையில், குயில்கள்  மயில்கள்  மான்கள் புடைசூழ  திரௌபதி துக்கம் சற்று மறந்தாள் .
இதற்குள்  வேட்டையாடச்  சென்ற பீமனை  சில ராக்ஷசர்கள்  சூழ்ந்துகொண்டு  தாக்க, அவர்களைக்  கொன்று ஒரு சிலர்  படுகாயமுற்று உயிர் தப்பி  விஷயம் குபேரனுக்கு செல்கிறது. அவன் சில ராக்ஷசர்கள் முடிவு பீமனால் என்பது முன்னமே  முடிந்த விஷயம் எனக்கு தெரியும்  என்று கூறி  பீமனை  பாராட்டுகிறான். அந்த நேரம் குபேரனே  பீமன் முன்னே வந்து தோன்றுகிறான்.

"பீமா நீயும்  மற்ற பாண்டவர்களும்  சத்யம் தவறாது  தர்மபுத்திரன்  வழி  நடந்து  நாட்டை பரிபாலனம் செய்பவர்கள்.  நீங்கள் படும் துயர் சிலகாலமே.  உன்னுடைய  வீரத்தை  மெச்சினேன்.  இந்த யக்ஷர்களும்  ராக்ஷசர்களும்  விதி முடிந்ததால் இறந்தனர்.  நீ  ஒரு காரணம்  மட்டுமே. அதனால் விசனப்படாதே.  அகஸ்தியர் என் மீது இட்ட  ஒரு சாபம்  பாண்டவன் ஒருவனால்  நீங்கும் என்று கூறியதால்  பீமா,  உன்னால் தான் அது நீங்கியது'' என்கிறான் குபேரன்.

கதைப் பிரியனான  யுதிஷ்டிரன் காதில் இது விழுந்தால் சும்மாவா  இருப்பான்.

''மகரிஷி, ஆச்சர்யமாக இருக்கிறதே,   தேவராஜனான  குபேரனை, எதற்காக அகஸ்தியர் சபித்தார்?. என்று  ஆரம்பித்தான்.   ஆனாலும் மூக்கு  நீளம்  யுதிஷ்ட்ரனுக்கு!!   பரவாயில்ல்லை,  அவனால் நமக்கு ஒரு கதை கிடைக்கப்போகிறது.
 

No comments:

Post a Comment