Friday, July 6, 2018

NATARAJA PATHTHU



நடராஜ பத்து 6 -- J.K. SIVAN

 

'' எனக்கென்ன ஆச்சு உனக்கு தான் கவலை''


நான்   யாரென்று எனக்கே பிடிபடவில்லை. ரமணரைப் போல் என்னை நான் யார் என்று தேடி கண்டுபிடிக்க, நான் வேதாந்தியும் அல்ல.  ரெண்டு மூன்று நாள்  மட்டும் கொஞ்சம்  யோசித்தால்  யோகியாக முடியுமா?

உன்னையே நான் என்றும் நானே நீ என்றும் சொல்லிக்கொள்ள ஞானமும் பத்தாது .

எப்படி வணங்கினால்,  துதித்தால்,  உனது பொன்திருவடி அடையலாம்?  என்றும் எனக்கு தெரியாது, யாரையும் கேட்டதில்லை, அப்படி யாராவது தெரிந்து  சரியாக சொல்லவும் இல்லை.  தெரிந்து என்னிடம் சொன்னாலும் அதை புரிந்து கொள்ள முயற்சிக்காதவன். அன்பு எவரிடமும் இல்லாதவன், உனது ஆலயமோ வேறெவரின் கோவிலோ கிட்டே கூட போகாதவன், நான் செய்தது மற்றவருக்கு துன்பம் ஒன்றே தான்,

''பாடு'' என்றால்  பாடுவேன், அதாவது ''கத்துவேன்''.   எந்த இலக்கணத்துக்கும் முறைக்கும் ஒவ்வாத புரிபடாமல் ஏதோ சப்தமிடுபவன்.

''எழுது'' என்றால் கேட்கவே வேண்டாம். யாரோ சொன்னபடி நான்   'மோசமானவர்களில் முக்யமானவன்', சுருக்கமாக சொல்லவேண்டுமானால் என்னிடம் உள்ள தீய பழக்கங்கள் வேறெவரிடமும் இருக்க முடியாது.

இப்படியெல்லாம் இருக்கும் நான் யார்? உன் மகன் தானே? எனவே என்னைவிட உனக்கு தான் இப்போது பொறுப்பு அதிகமாகிவிட்டது.

இன்னார் பிள்ளை என்று தானே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆகவே தான் பொறுப்பு உனதாகிவிட்டது.   உன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, அடே, பாதி உமை பரமசிவா, என்னைக் காத்து, தடுத்தாட்கொண்டு அருளவேண்டியது உன் கடமை ஆயிற்றே. உன் இந்த கடமையில் நீ தவறினால் ஊரும் உலகமும் உன்னைத் தானே தூற்றும்.

''என்ன தந்தை இவன், பெற்ற பிள்ளையை இப்படி வளர்த்திருக்கிறான்? என்று'' . எனவே தான் சிதம்பர நாதா, திரும்ப திரும்ப சொல்கிறேன் என்னிடம் காணும் குறைகளை நீக்கி என்னையும் நல்லவனாக்கு, காப்பாற்று. அண்ட பகிரண்டங்களை உருவாக்கி ஆள்பவனே,   என்னை திருத்துவது உனக்கு ஒரு பெரிய காரியமா?

மேலே சொன்ன வார்த்தைகள் அருமையான  நடராஜபத்து  பாடல்களில்  6வது. பாடல் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும். கீழே கொடுத்திருக்கிறேன். 
 எவ்வளவு அழகாக ஒரு பக்தன் உருகி சிவனை வேண்டுவது போல் அமைந்திருக்கிறது பார்த்தீர்களா. தன்னை சிவன் மகனாக உறவு காட்டி கெஞ்சுவது அற்புதாக இருக்கிறதல்லவா? இப்போது. நடராஜ பத்து பதிகத்தில் பாக்கி   இன்னும் நான்கு இருக்கிறது. நாலு நாளில் முடியும். 

'' வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும்,
 வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும், 
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும், மோசமே செய்யினும்,
தேசமே கவரினும், முழுகாமியே ஆகினும்,
பழியெனக் கல்லவே தாய் தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ, பாரறிய 
மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ, எழில்பெரிய
அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
 தில்லைவாழ் நடராஜனே.''

No comments:

Post a Comment