Sunday, June 24, 2018

socrates tests



இது நமக்கு வைக்கும் பரிக்ஷை J.K. SIVAN

நமக்கு ஒரு பழக்கம். யாரையாவது பிடிக்காது என்றால் எவ்வளவு மோசமாக அவரை தூஷிக்க முடியுமோ அவ்வளவு வார்த்தை சொல்வோம். பிடிக்கிறது என்றால் மோசமானவன் கூட நமக்கு இந்திரன் சந்திரன் அம்சம். இது ரொம்ப கெட்ட பழக்கம். ஒருவரை உயர்த்தி சொல்வதை பற்றி ரொம்ப கவலைப்பட வேண்டாம். தெரிந்தவர்கள் நம்பமாட்டார்கள். ஆனால் தூஷித்து சொல்லும் வார்த்தைகள் சம்பந்தப்பட்டவரை துடிக்கச் செய்யும். உடைந்து போவார்கள். அது அவதூறாக இருந்தால் கேட்கவே வேண்டாம் அவர்கள் படும் துன்பம். இது ஒரு பாப கார்யம். இதுபற்றி எங்கோ படித்த ஒரு சம்பவம் சொல்கிறேன்.

சாக்ரடீஸ் கிரேக்க ஞானி. 469-399 கி.மு) 70 வயது வரை வாழ்ந்து விஷம் கொடுத்து கொல்லப்பட்ட புத்திமான். ஒருநாள் அவரை தேடி நண்பன் ஒருவன் வந்தான்.

'குருநாதா, உங்களுக்கு விஷயம் தெரியுமா ?''

''என்ன விஷயம் தெரியுமா என்கிறாய்?''

''இங்கே வருவானே உங்கள் நண்பன் டியோஜெனிஸ் அவனைப் பற்றி தான். ஊரே பேசுகிறதே ''

அவன் பீடிகை போடுவதிலிருந்தே ஏதோ தவறான செயதிதான் டியோஜெனிஸ் பற்றி சொல்லப்போகிறான் என்று சாக்ரடீஸுக்கு தெரிந்து விட்டது.

''கொஞ்சம் பொறு தம்பி. அவரைப்பற்றி சொல்வதற்கு முன்பு உனக்கு ஒரு பரிக்ஷை வைக்கிறேன். முதல் பரிக்ஷை என்ன தெரியுமா?

''பரிக்ஷையா எனக்கா?

ஆமாம் . முதல் பரிக்ஷை 'உண்மை ''.
நீ சொல்லப்போவது உண்மையானதா என்று உனக்கு தெரியுமா?

''நான் என்னத்தை கண்டேன். கேள்விப்
பட்டதை சொல்லவந்தேன் ''

''ஓஹோ நீ சொல்லப்போவது உண்மையா இல்லையா என்பதே உனக்கு தெரியாது''

அப்படி என்றால் ரெண்டாவது பரிக்ஷைக்கு போவோம். முதலாவதில் நீ தோற்று விட்டாயே.

''ரெண்டாவது ''நல்லது'' நீ டியோஜெனிஸ்
பற்றி சொல்லப்போவது நல்ல செய்தியா?

''குருவே, நான் ஏதோ அவரைப்பற்றி தப்பாக பேசுகிறார்களே என்று அதை சொல்ல வந்தேன்.''

ஓஹோ, அப்படியானால் நீ அவ்வளவு அவசரமாக ஓடிவந்து என்னிடம் டியோஜெ
னிஸ் பற்றி ஏதோ தப்பான செய்தி சொல்ல வந்தாய். ஆனால் அது உண்மையா இல்லையா என்று உனக்கு தெரியாது அல்லவா?''

இன்று யார் முகத்தில் விழித்தேன். இந்த மனிதரிடம் வந்து மாட்டிக்கொண்டேனே என்று அவன் விழித்தான்.

பரவாயில்லை. இப்போது உனக்கு வைக்கும் மூன்றாவது கடைசி பரிக்ஷை. இதில் தேறி விட்டால் முதல் ரெண்டை பற்றி கவலை வேண்டாம். இந்த மூன்றாம் பரிக்ஷை ''பிரயோஜனம்''

நீ சொல்லப்போகும் விஷயம் மூலம் உனக்கோ எனக்கோ ஏதாவது பிரயோஜனம் உண்டா தம்பி?

' அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா''

சரியப்பா, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். ஏனென்றால் நீ சொல்ல வந்த விஷயம் உண்மையா இல்லையா என்று உனக்கு தெரியாது . ஒரு நல்ல செய்தி அல்ல, அதை சொல்லும் உனக்கோ, கேட்கும் எனக்கோ எந்தவிதத்திலும் அதால் எந்த உபயோகமோ பிரயோஜனமோ இல்லை. எதற்கு மெனக்கெட்டு அதை தூக்கிக்கொண்டு ஓடி வந்தாய். மறந்துவிட்டு உன் வேலையை பார்த்துக்கொண்டு போ.

பி. கு : சாக்ரடீஸ் என்ற பெயர் சொன்னாலே அந்த மனிதன் ஓடுகிறான். உன் பெயர் என்ன என கேட்டாலே கூட யோசித்து அது உண்மையா, நல்ல பெயரா, அதை சொல்வதால் ப்ரயோஜனமா என்று கேட்டுக்கொண்டே ஓடுவதாக கேள்வி .

No comments:

Post a Comment