Thursday, June 7, 2018

last rites




       

போனவனுக்கு......J.K. SIVAN .

நிறைய பேர் வீட்டிலே இப்போது அசுப காரியங்கள் செய்வதில்லை.  காரணம் ஒன்று அவர்கள் இருப்பது வாடகை அடுக்கு மாடி புறா கூண்டு. ரெண்டாவது  மற்றவர்களின் தொந்தரவு.  நேரடியாக எதிர்ப்பவர்களும் உண்டு, பொது இடங்களை இதற்கு உபயோகப்படுத்த தடை சொல்வதும் உண்டு.   ஆகவே வெளியில்  இதற்கென இருக்கும் வாடகை இடங்களில் தான் வியாபாரமாக நடைபெறுகிறது.

தனிவீடுகளாக இருந்தால் பொதுவாக கர்மாக்கள்  நடைபெறும் வீட்டின் முற்றத்தில், வாயிலில்  பந்தல்போட்டு தரையை சாணத்தினால் மெழுகி வைப்பார்கள் (உறவினர் வந்து அமர மற்றும் சடலத்தைக்கட்டும் மூங்கில் கொம்பு பாடையை அங்கு வைப்பதற் காக) அந்த பழக்கம் கிராமங்களில் மட்டுமே, அல்லது சென்னை பண்ற பட்டணங்களில்  ஊருக்கு ஒடுக்குப்புற நகர்களில் தான்  தற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  இருப்பவனுக்கே  இடமில்லாததால் போனவனைப் பற்றி கவலை இல்லையே.

தயாராக வைக்கப்பட்டுள்ள இறுதி ஊர்வல வாகனமாகிய மூங்கில் பாடையில் இறந்த  உடலை வைத்ததும், உறவுக்கார பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். ஆண்களும் போடுவது வழக்கமாகி விட்டது.   இறந்த  உடலை ஒரு வெள்ளை போர்வையினால் நன்கு மூடிவைத்த பின், அதை பாடையுடன்  சேர்த்து  கட்டுவது நடக்கும். தூக்க  நான்கு பேர்கள்.  தூக்கி தோள்  மீதுவைத்துக்கொள்ள, நெருப்புச்சட்டியுடன் இறந்தவரது  மகன்கள் முன்னே செல்ல, பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப்பிள்ளைகள் நெய்யினால் ஏற்றப்பட்ட  தீப்பந்தம் ஏந்தியபடி  நடப்பார்கள்.  இறந்த உடலுக்கு முன்னால் கூட்டமாக செல்லக்கூடாது என்றும், இறந்த உடலுடன் செல்பவர்கள் அதன் பின்னால் செல்லவேண்டும்  என்பது ஒரு மரியாதை காரணமாகத்தான்.  சாஸ்திரம் இல்லை இதற்கு. பிணத்தின்  முன்னால்  தீ சட்டியுடன் உடலுக்கு செய்யவேண்டிய  காரியங்களை செய்யும்   கர்த்தாக்கள் மட்டுமே செல்வது தான் வழக்கம்.  காரணம்  தேடவேண்டாம்.  சில சடங்குகள் பாரம்பரியமாக இவ்வாறு தான் நடந்து வருகிறது.

இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்வதற்கு காரணம் இறந்தவருக்கு  தாங்களும்  தீ மூட்டி எரிக்க உரிமை உள்ளவர்கள்  என்று அறிவிக்கதான். விஞ்ஞான சாஸ்த்ர காரணங்கள் தேடவேண்டியதில்லை. ஏனென்றால்  பிள்ளை இல்லாதவர்களுக்கு பேரன்கள் காரியம் செய்ய உரிமைப்பட்டவர்கள். இது சம்ப்ரதாயம்.

இன்னொரு விஷயமும் இதில் அடக்கம்.  சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இது போன்ற காரியங்கள் தெரிந்திடுவிட்டால் பிற்காலத்தில் அவர்கள் சம்பிரதாயத்தை மீறமாட்டார்களே. பழங்காலத்தில்  பேரன்களும் சுடு காடுசென்று சிதைக்கு கொள்ளி வைக்கும்
 பழக்கம் இருந்தது. தற்போது  குழந்தை பயப்படும் இது அசுப காரியம் என்று பெற்றோர்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவதில்லை.

வாய்க்கரிசி போடுவது நன்றி அறிவித்தலுக்காக.  இதுவரை உனக்கு உணவு அளிக்க வில்லை, இப்போதாவது தருகிறேன் என்ற மன நிறைவு உணர்தல்.
அரிசி என்பது  ஆன்மீக, வைதீக காரியங்களுக்கு இன்றியமையாத ஒரு பொருள்.   ஜீவ சக்தி. ஆதார சக்தி. ஹோமங்களும் பூஜைகளும், அரிசி எனும் அக்ஷதை இல்லாமல் கிடையாது.
அதை அளிப்பதன் மூலம் இறந்தவன்  தெய்வமாக கருதப்படுகிறான்.உடல் தகனத்தோடு
வாய்க்கு போடப்பட்ட அரிசியும் ஹோமத்தில் போடப்பட்ட அரிசி போல் ஆகிவிடும்.
இறந்தவர்களில் காசுகளை வைத்து அதை வீட்டில் ஜாக்கிரதையாக  பணப்பெட்டிகளில் போட்டு வைக்கும்  வழக்கமும் உண்டு.

வாயில்  இடைப்பட்ட  அக்ஷதை, அந்த உடலை விட்டு வெளியேறி ஆத்மாவால் பெறப்பட்டு திருப்தியது அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறைகளின்  ஆத்மாக்களை  சாந்தி அடையச் செய்யும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆதாரம் தேட விருப்பமில்லை. 


முன்பெல்லாம்  சுடுகாடு என்பது  வெட்டவெளியில்  ஆற்றங்கரைகளில் இருக்கும். பிணத்தை சுட்டெரித்துவிட்டு  ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டு திரும்புவார்கள். ஊருக்கு கடைசியில் இருக்கும் மயான பூமிக்கு  நாலு பேரால் தூக்கி செல்வது கஷ்டம் என்று பலர் தோள் மாற்றிக்கொள்வார்கள். கூடவே இதற்காக செல்வார்கள். இப்போது  ஒரு இரு அடிகள் தோளில் சுமந்துவிட்டு  அல்லது கையால் தூக்கி  காத்திருக்கும் வண்டியில் ஏற்றி விடுகிறார்கள். வண்டி சுமந்து போகிறது.  தாரை தப்பட்டை, வெடி, பட்டாசு, பூக்களை தெருவில் வீசி எறிவது, குடித்துவிட்டோம், குடிக்காமலேயோ  விசில் அடித்துக்கொண்டு  குத்தாட்டம்  இதெல்லாம் ஏன் என்று புரியவில்லை. இறந்தவனுக்கு பெருமையா, அவன் ரசிக்கவா?

இன்னும் பேசுவோம்.

No comments:

Post a Comment