Tuesday, March 6, 2018

yaathra vibaram

 யாத்ரா விபரம்             ஜே.கே. சிவன் 

         








 காதறுந்த ஊசியும் கடைவழி வாராது....

இந்த வருஷ ஆரம்ப ஆரம்பத்தில் பதினோரு  கருடசேவையை  ஒட்டி  திருநாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில்  போன்ற ஸ்தலங்களுக்கு சென்றபோது நான் ஸ்ரீ அரும்பாக்கம்   ஸ்ரீனிவாசனோடு சென்று வழிபட்ட ஒரு அருமையான கோவில் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த ஸ்ரீ பல்லவனேஸ்வரர் ஆலயம். அந்த ஆலயத்திற்கு சென்றதைப் பற்றி எழுத இதுவரை நேரம் இல்லை. இன்று அதற்கென முனைந்து உங்களுக்கு யாத்ரா விபரம் அளிக்கிறேன்.

பூம்புகார்   காவிரி கடலில் புகும் பட்டினத்தில் இருக்கிறது  காவிரி கடலில் புகும் பட்டினம்  நாளடைவில்  காவிரியைப் போலவே சுருங்கி காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார், புகார் என்று  என்று ஆகிவிட்டது. அந்த புராதன ஊரில் உள்ள
சிவன் ஆலயம் புதைபொருள் ஆராய்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில்  உள்ளது.   பல்லவ ராஜா வழிபட்டதால் இத் பல்லவனீச்சரம். சிவன் பல்லவனீஸ்வரர்.

காதறுந்த  ஊசியும் கடைவழி வாராது  என்று அற்புதமாக  வாழ்க்கை நிலையாமை பற்றி நமக்குணர்த்திய  பட்டினத்தார் பிறந்த ஊர்.  பட்டினத்துப் பிள்ளையார் என்று அவரைச்சொல்வதுண்டு. அவரைப் பற்றி எழுத நிறைய விஷயம் இருக்கிறது.

பல்லவனேஸ்வரர்  என்ற  ஸ்வயம்புவான சிவன்  அம்பாள் சௌந்தர்யநாயகியுடன் அருள் பாலிக்கும் இந்த சிவாலயம்
காவிரி வடகரையில் உள்ள   தேவார பாடல் பெற்ற  ஸ்தலங்களில் 10 வது.

இந்த ஆலயத்தில் தான் பிரசித்தமான அனுக்ஞை  விநாயகரை  தரிசிக்கலாம்.  காலவ மகரிஷியால் அர்ச்சிக்கப்பட்ட  சிவன் பல்லவனேஸ்வரர்.  பட்டினத்தாருக்கு இங்கே ஒரு சந்நிதி உள்ளது.  பட்டினத்தாரின் மனைவி, மகன், தாய், எல்லோருடைய உருவங்களையும்  விமானத்தில் வைத்திருக்கிறார்கள்.

 பட்டினத்தாருக்கு முக்திஅருளிய விழா வெகு விமரிசையாக இங்கே வருஷா வருஷம் நடைபெறுகிறது. பல்லவனேஸ்வரர் மருதவாணராகி அருளிய  ஊர். பாரத தேசத்தின் கிழக்கு பக்க கடலான வங்காள விரிகுடாவில் காவிரி இங்கே கலக்கிறாள். வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியனுக்கு இந்த ஆலயத்தில் மயில் வாஹனம் இல்லை.  நவகிரஹங்கள் மேற்கே பார்த்தவை.  ரெண்டு சண்டிகேஸ்வரர் உள்ள ஆலயம். சம்பந்தர் பாடிய ஸ்தலம்.


மாதவி  மணிமேகலை வழிபட்ட சபாபதி அம்மன் ஆலயம் தனியாக உள்ளது.

இங்கே சிவநேசர் ஞானகமலாம்பிகை என்ற தம்பதியர் வாழ்ந்தார்கள். ஒரு மகன் திருவெண்காடன்.கடலை ஒட்டிய பிரதேசமாதலால் பெரும்பாலோர் இங்கு கடல் வாணிபம் செய்தவர்கள். திருவெண்காடருக்கும் அவர் மனைவி சிவகலைக்கும் வெகுநாளாகியும் புத்ரபாக்யம் இல்லை. சிவநேச செல்வர்கள்.

அந்த ஊரில் சிவசர்மா சுசீலை தம்பதியருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்து அவனுக்கு மருதவாணர் என்று பெயரிட்டார்கள்.  சிவனே அந்த தம்பதியர் கனவில் வந்து உங்கள் புத்ரன் மருதவாணனை  சிவநேசர் மகன்  திருவெண்காடருக்கு  தத்துப் பிள்ளையாக அளித்துவிடுங்கள் என்று கட்டளையிடுகிறார்.

மருதவாணர் திருவெண்காடர் மகனாக  கடல் வாணிபத்தில் ஈடுபட்டார். பொருளீட்டினார் .
சிலகாலம் இப்படி சென்றபின் ஒருநாள் வெளிநாட்டிலிருந்து கப்பலில்  திரும்பிவந்த மருதவாணர் ஒரு பெட்டியை தனது தாய் சிவகலையிடம் ''இந்தா அம்மா'' என்று  கொடுக்கிறார்.

அப்பா திருவெண்காடர் மகன் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தால் அதில் நிறைய  பசுஞ்சாண வறட்டி, உமி தவிடு,  இருக்கிறது. ''சீ  '' என்று கோபத்தோடு அந்த வறட்டியை தூர எறிந்தபோது அதில் ஏதோ எழுத்து தெரிகிறது.

ஆச்சர்யம் மேலிட  அதைப் படிக்கிறார்  ''காதறுந்த ஊசியும்  வாராது கடை வழிக்கே'' .  எதுவும் நம்மோடு இந்த உலகை விட்டு போகும்போது வரப்போவதில்லை என்பதை உணர்த்தியது புரிகிறது.

திருவெண்காடர் அடுத்த கணமே புதிய மனிதனாக மாறிவிட்டார்.  குடும்பம் செல்வம்,  வியாபாரம், உற்றார் சுற்றம் அனைவரையும் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு  பல்லவனேஸ்வரரை அடைக்கலமாக சேர்கிறார். ''உன் பாதாரவிந்தகளில் என்னை சேர்த்துக் கொள்'' என சரணடைந்தார். ''தக்க நேரத்தில் நீ  எமைச் சேர்வாய்'' என சிவபெருமான் அருள்புரிகிறார். இனி அவரை உலகம் பட்டினத்தார் என்று அறியும். சென்னையை அடுத்த திருவொற்றியூர் செல்பவர்கள் அங்கே பட்டினத்தார் சமாதியை தரிசிக்கலாம். அவர் முக்தி அடைந்த க்ஷேத்ரம்.

No comments:

Post a Comment